புத்தளம் நகர் குடியிருப்பில் ‘ஆய் பா ஹோட்டல்’ என்றால் அறியா தவர்கள் எவரும்
இருக்க முடியாது. இரண்டு காரணங்கள்.
ஒன்று சிரித்த முகம், குள்ளமான தடித்த உடல்,
கலகலப்பான பேச்சு வாடிக்கை யாளரை வரவேற்கும் பாங்கு இவைகளைத் தன்னகத்தே கொண்ட அதன்
உரிமையாளர் முஹம்மது காமில் (42) அடுத்தது அதிகாலை ஐந்து மணிக்கே ‘கடையப்பம்’ என
எல்லோரும் அழைக்கும் காலையுணவில் இருபது வரையான வகைகளைத் தயார் நிலையில்
வைத்திருப்பார். ஹோட்டலின் உண்மையான பெயர் ‘பவாஸ் டீ ரூம்’ என்றாலும் ‘ஆய்பா’ தான்
யாவர் நினைவிலுமிருப்பது.
காலை சுபஹுத் தொழுகை முடிந்ததும் கடை கலகலப்பாகி விடும். காமிலின் கதைகளும் கனத்துக்
கேட்கும். காலை எட்டு மணிக்கு முன்னதாக உணவுகள் யாவும் தீர்ந்துவிடும். சிறிய இடமாக
இருந்தாலும் பலரையும் அது உள்ளடக்கி இருக்கும். இருபது ஏழைக் குடும்பங்கள்.
இங்கு
உணவுத் தயாரிப்புகளை வாங்கி சீவனம் நடத்துகின்றன.
கடந்த பதினைந்து வருடங்களாக நான்கு
சகோதரர்களின் துணையுடன் குடும்பக் கடையான உணவகத்தை நடத்திவரும் காமிலைப் பேட்டி
கண்டபோது தனது உடல் பாரம் தொழிலுக்கு தடையாக இல்லை என்றார்.
ஐந்து பிள்ளைகளின்
தந்தையான இவருக்குத் தொல்லையாக இருப்பது ‘ஆஸ்மா’ பாதிப்பு மாத்திரமே.
நாட்டு
வைத்தியம் செய்கிறார். மோட்டார் சைக்கிள் ஆட்டோ என்பவற்றை ஆயாசமாக ஓட்டும் இவர்
சனிக்கிழமைகளில் கடையை மூடிவிட்டு பிள்ளைகளை வண்டியில் ஏற்றி வலம் வருவதுடன்,
அவர்களுடன் வீட்டில் பொழுதை மகிழ்ச்சியாகக் கழிப்பார்.
நோன்பு, ஹஜ்ஜுப்
பெருநாட்களுக்கு ஒரு வாரம் அப்பக் கடையை இழுத்து மூடிவிட்டு உறவினர் இல்லங்களுக்குச்
செல்வார். ஐங்காலத் தொழுகைக்கு ஆட்டோவில் வரும் காமில், அசைந்து அசைந்து மஸ்ஜிதுள்
வந்து கதிரையில் அமர்ந்துத் தொழுவார். மகிழ்ச்சிகரமானவர்.