யாரும் இல்லாத நேரத்தில்
வேலி வைக்கவே
அதிகம் ஆர்வம் காட்டுகிறான்
கொஞ்சம்
மற்றவனின் பக்கம்
தள்ளித் தள்ளி நாட்டுவதற்காக!
தளை மரம் நட்டு நட்டு
வேலிப் பொதுவில்
தண்ணீர் ஊற்றுகிறான்
மரம் பருத்துப் பருத்து
மற்றவனின் மண்ணை
கவ்விக்கொள்ளட்டும் என்று!
வேலிப்பொதுவை
நெருக்கி நெருக்கித்தள்ளி
அவன் போகும் வரும் வழியையும்
நெருக்கிச் சிறிதாக்கி
படலையும் கட்டியிருக்கிறான்
உறவினரும் பிச்சைக்காரனும்
நெருங்காமல் இருக்க!
நாய் வந்த ஓட்டையில்
சுருக்கு வைத்து
அம்புட்ட பூனையை
கட்டிப் போட்டடிக்கிறான்
பக்கத்து வீட்டு
கோழியின் காலை முறித்து
சிறகையும் பிடிங்கியனுப்புகிறான்
பறந்தும் வராமல்!
ஆயிரம்தான் காசு பணம்
அடுக்கடுக்காய் அனுப்பினாலும்
அன்பான கணவர் போல்
அஃது எனக்கு நிம்மதியா?
பத்து மாடி வீட்டினிலே
படுத்துறங்கும் மச்சானே
முருங்கை இலை பாலாணம்
விரும்பி உண்ண வருவாயா?
புள்ளையோடு நானழுது
கொள்ளையாக நானேங்க-
வெள்ளை நிலா பல தேடி
வெளிநாட்டில் அலையிaங்க...!
பன்பாயில் படுத்தாலும்
பசியோடு துடித்தாலும்
கண்ணான மச்சான் நீங்க
கண்னெதிரில் இருக்க வேண்டும்!
நாடு விட்டுப் போன மச்சானே
நானுனக்கு வேணுமென்டா
கோடி கொட்டத் தேவையில்லை
ஒழுக்கமுடன் வா மச்சான்!
மாட்டுக்கு மாலை போடு
- பொத்துவில் அஸ்மின் -
காலினைப்
பிடித்தேன் என்றன்
கழுத்துக்கு மாலை வேண்டாம்!
எழுத்திலே காணின் ஏதும்
எழுதுவீர் அதுவே போதும்!
வாலினை பிடிப்ப வர்தான்
வாழுவர் தெரியும் கெட்ட
தேளினை பிடித்தோர் கூட
தேம்புவர் எனவே உங்கள்
காலினைப் பிடித்தே னையா
கழுத்துக்கு மாலை வேண்டாம்!
கழுதையும் குரங்கும் மாடும்
கழுத்திலே மாலை பூண்டு -
மூலைக்கு மூலை கூடி
முதுகினை சொரிந்து எங்கும்
“போட்டோக்கு” பல்லைக் காட்டி
“போஸினை” கொடுத்து பின்னர்
எங்களை வெல்லும் கொம்பன்
எவனடா இங்கு உண்டு...?
என்றுதற் புகழ்ச்சி தன்னில்
எம்பித்தான் குதிக்கும் போது
அற்பன்நான் அவைகள் பாத
அடியிற்கு இன்னும் கீழே
ஆகையால் மாலை வாங்க
அடியேனுக் காசையில்லை
காலினைப் பிடித்தேன் ‘வாப்பா’
கழுத்துக்கு மாலை வேண்டாம்!
எலும்புக்காய் எச்சிலைக்காய்
எங்கள் நாய் வாலை ஆட்டும்
பிணமான பின்தான் உண்மை
பிரியத்தை அதுவும் காட்டும்
ஆகையால் மாலை சூட்ட
ஆருமே வராதீர் தேடி!
எழுத்திலே ஏதும் காணின்
எழுதுவீர் அதுவே கோடி!!
கால் ஆனேன்!
- பாலமுனை பாறூக் -
காலை எடுத்தால் தான்
காப்பாற்ற லாம் என்றார்!
காலா...? உம்மாவா?
கால் என்றேன் தாயே.....!
கலங்கித் தான் நான் நின்றேன்!
இந்தத் தடவை - உன்னை
வைத்தியசாலையிலே
வைத்திட்ட அப்போதில்....
“என்ன கஷ்டம் தான் பிள்ளைக்கு
என்னை ஏத்துறதும்
இறக்கிறதும்....,”
என்று நீ சொன்னாய்!
என்ன கஷ்ட மும்மா எங்களுக்கு?
எதுவுமில்லை....!
எத்தனை வருடங்கள், எம்மை நீ
ஏற்றி, மடி இருத்தி
தூக்கி சுமந்து மகிழ்ந் திருப்பாய்
தாயே...!
பெண் மக்கள் இருவருமே
உன் கரமாய் இருக்கின்றார்
பேரன் பேத்தி யெலாம்
பின் பலமாய் நிற்கின்றார்.
ஆதலினால் -
காலா...? உம்மாவா...?
கேட்டார்கள்...!
கால் என்றேன் தாயே!
நான் உனது கால் ஆனேன்!
tவிலங்கான நீ
- எம். ஏ. றமீஸ் -
தாவரத்திற்கு வேர் எப்படி
விலங்காகின்றதோ...
அதேபோல்
நீ எனக்கு....
*
இலையில் தோன்றிய
பனித்துளி போன்றது
நம் காதல்
எப்படித் தோன்றியதென்று
தெரியவில்லை
ஆனால்-
எப்படியும் ஆதவன் வந்து நம்மை
பிரித்துவிடுவான்
என்று தெரிகிறது.
*
உன்னில் சிறைப்படவும்
முடியவில்லை
வெளியேறவும்
வழி தெரியவில்லை
நானும் ஓர் உயிர்
- நுஸ்ரா நவாஸ் -
இதயத்தின் ஓசைகள்
உணரப்படும் நாளில்...
சுவாசத்தின் வேகத்தை
அளக்கப்படும் நாளில்...
கண்களின் பார்வைகள்
கணிக்கப்படும் நாளில்...
செவிகளின் கேள்விகள்
கேட்கப்படும் நாளில்...
மொழிகளின் மெளனங்கள்
சுமக்கப்படும் நாளில்...
வினாடிகளில் விடும் மூச்சுகள்
ரணமாகும் நாளில்...
நானும் ஓர் உயிராய்
இருப்பேன் - அத்தனை
நிலைகளும் என்னையும்
விட்டுவைக்கப்போவதில்லை...