புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
கதைப் பாடல்கள் வெளிக்காட்டும் சமுதாயக் கூறுகள்

கதைப் பாடல்கள் வெளிக்காட்டும் சமுதாயக் கூறுகள்

கதையைப் பாடலாகப்பாடுவது அல்லது பாடலில் கதை குறிப்பிடப்படுவது கதைப்பாடல் என அழைக்கப்படுகிறது. இது ஒரு கதையாகவோ அல்லது உட்கதைகள் கொண்ட ஒரு கூட்டுக்கதையாகவோ இருக்கலாம். நாட்டுப்புற இலக்கியத்தின் ஒரு கூறாகவே இக் கதைப் பாடல்கள் விளங்குகின்றமையால், நாட்டுப்புற இலக்கியக் கூறுகள் அனைத்தும் இதற்கும் உண்டு எனலாம்.

குறிப்பிட்டதொரு பண்பாட்டில் குறிப்பிட்டதொரு சூழலில் வாய் மொழியாக ஒரு பாடகனோ அல்லது ஒரு குழுவினரோ சேர்ந்து, நாட்டார் முன் எடுத்துரைத்து இசையுடன் நிகழ்த்தும் அல்லது நிகழ்த்திய ஒரு கதை தழுவிய பாடல் கதைப்பாடலாகும். என நா. இராமச்சந்திரன் வரைவிலக்கணப்படுத்துகிறார்.

கதையின் இனிமையினை மிகைப்படுத்தப் பண்ணோடு பாடியபோது கதைப்பாடல்கள் பிறந்தனவென்று கருதப்படுகிறது. முதலில் வீரம் பற்றிய கதைப் பாடல்கள் தோன்றி பின்னர் வரலாற்றுக் கதைப்பாடல்கள் வளர்ச்சியடைந்திருக்கின்றன. தமிழில் கதைப்பாடல்கள் பாட்டு, கதை, வில்லுப்பாட்டு, அம்மானை, கும்மி, மாலை, வாக்கியம், கீர்த்தனை, போர் சண்டை, படைப்போர், குறம், சிந்து, தூது, வெற்றி என்பன போன்ற பல்வேறு பெயர்களில் அதன் தன்மைகளை விளக்குவனவாக உள்ளன. இக்கதைப் பாடல்களுக்கு காமன்பாட்டு, இராமாயணப்பாட்டு, நல்லதங்காள்கதை, முத்துப்பட்டன் கதை, சிவகங்கை சரித்திரக் கும்மி, பவளக் கொடி மாலை, கபில சரித்திர கீர்த்தனை, கான் சாகிபு சண்டை, இந்திராயன் படைப்போர், கிருஷ்ணன் தூது போன்றவற்றினை உதாரணமாகக் கூறலாம்.

இவ்வாறான கதைப்பாடல்கள் அக்கால சமுதாயத்தின் சமூகக் கூறுகளை பிரதிபலிப்பனவாய் அமைந்திருந்தன. இங்கு சமுதாயக் கூறு என்பது அக்கால சமுதாய மக்களின் வாழ்வியலோடு தொடர்புபட்ட அம்சங்களையே குறித்து நிற்கிறது. அதாவது, மனித நம்பிக்கைகள், செயற்பாடுகள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் போன்றவற்றினை இக் கதைப்பாடல்கள் சித்தரித்துக் காட்டுகின்றன. உதாரணத்திற்கு முத்துப் பட்டன் கதைப்பாடல் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம்.

போருக்குப் புறப்படுமுன் அரசனிடம் விடைபெற்று தாம்பூலம் பரிசு முதலியன பெற்று ஊர்ப்பவனி செல்லுதலும் தெய்வத்தை வழிபடுதலும் உண்டு. போருக்குப் புறப்படுமுன் அக்கால சமுதாயப் பழக்க வழக்கங்களை எடுத்துக் காட்டுகின்றன.

கட்டபொம்மன் கதைப்பாடல்களில் நாட்டுப்புற மக்களின் பழக்க வழக்கங்களை அறிந்துகொள்ளலாம். தெய்வங்களின் மீது ஆணையிடும் வழக்கம் மக்களுக்குண்டு. இதனை இக்கதைப்பாடலில் வரும் உங்க சக்கம்மாள் மேலாணை என்பதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம். சிறு தெய்வ வணக்கம், தேரோட்டமும் உண்டு.

“சித்திரை மாதத் துப் பெளர்ணமியில் உனக்குத் தேரோட்டி வைப்பேன் கருப்பண்ணா” என்பதனால் உணர்த்தப்படுகின்றது.

ஒரு நாட்டில் வழங்கும் கதைப்பாடல்கள் அந்த நாட்டின் சட்டங்களை விட முக்கியமானவை என அண்ட்ரூ பிளச்சர் குறிப்பிடுகிறார். எனவேதான் கதைப்பாடல்கள் நாட்டுப்புற மக்களின் வீர காவியங்கள் என அழைக்கப்படுகின்றன.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.