புத் 65 இல. 15

விஜய வருடம் சித்திரை மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஆஹிராஃ பிறை 03

SUNDAY APRIL 14 2013

 

 
நேதாஜp சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜp சுபாஷ் சந்திரபோஸ்

பிரிட்டிஷார் நுழைந்தனர்

பிரிட்டிஷ் நாட்டில் மிளகு, ஏலக்காய், இலவங்கம் போன்ற பொருட்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. பிரிட்டிஷ் மக்கள் இவற்றை விரும்பி உபயோகித்த காரணத்தினால் பிரிட்டிஷ் வியாபாரிகள் பலர் இந்தப் பொருட்களை பிற நாடுகளிலிருந்து வாங்கி விற்பனை செய்து பெரும் லாபத்தை ஈட்டிக்கொண்டிருந்தார்கள்.

இத்தகைய வாசனைப் பொருட்களை பிரிட்டிஷ் வியாபாரிகள் ஆரம்பத்தில் டச்சு நாட்டிலிருந்து வாங்கி விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

டச்சு வியாபாரிகள் திடீரென்று இவற்றின் விலையை அதிகப்படுத்தி விற்க ஆரம்பித்தார்கள். அவர்களின் விலையேற்றம் அதிக அளவில் இருந்த காரணத்தினால் பிரிட்டிஷ் வியாபாரிகள் ஒன்றாய்க் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 24.09.1549 அன்று 24 வியாபாரிகள் ஒன்று சேர்ந்து, லண்டன் நகரில் ஒரு கம்பெனியை ஆரம்பித்தனர். அக்கம்பெனிக்கு கிழக்கிந்தியக் கம்பெனி என்று பெயரைச் சூட்டினார்கள். இந்தக் கம்பெனியின் சார்பாக இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்கி விற்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஹெக்டர் எனும் பிரிட்டிஷ் கப்பல் மூலம் புறப்பட்டு 24.08.1600 அன்று பம்பாய்க்கு வடக்கே இருக்கும் சூரத் துறைமுகத்திற்கு பிரிட்டிஷார் வந்து சேர்ந்தனர். இக்கப்பலை செலுத்திய மாலுமியின் பெயர் வில்லியம் ஹாக்கின்ஸ் என்பதாகும்.

வில்லியம் ஹாக்கின்ஸ் இந்தியாவை ஆண்டுவந்த மொகலாய சக்கரவர்த்தி யான ஜஹாங்கீரைச் சந்தித்து, தாம் வந்த விஷயத்தைக் கூறி இந்தியாவில் வியாபாரம் செய்ய அனுமதி கேட்டார். ஜஹாங்கீரும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு பம்பாய் நகருக்கு வடமேற்கே உள்ள பகுதியில் கட்டடங்கள் அமைக்க அனுமதி வழங்கினார். இந்தியாவில் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கினார். மெல்ல மெல்ல கிழக்கிந்தியக் கம்பெனியினர் இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்து, தங்கள் செல்வாக்கைப் பெருக்க ஆரம்பித்தார்கள்.

முதல் விடுதலைப் போர் 1857

வாணிபம் செய்ய நம் நாட்டிற்கு வந்த ஆங்கிலேயர்கள், நம் நாட்டை ஆண்டு வந்த அரசர்களிடம் தமது சரக்குகளை வைக்க இடம் கேட்டார்கள். நமது அரசர்களும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியை அறியாமல் அவர்கள் கேட்டவாறு இடம்கொடுத்தார்கள். சரக்குகள் வைக்க கொடுக்கப்பட்ட இடத்தில் ஆங்கிலேயர்கள் கோட்டைகளைக் கட்டினார்கள். கோட்டைகளில் பீரங்கிகளைக் கொண்டு வந்து வைத்தார்கள். அந்தக் கோட்டைகளை காவல் காக்க நமது நாட்டு இளைஞர்களை படையாட்களாக நியமித்தார்கள்.

நமது நாட்டை ஆண்டு வந்த அரசர்களுக்குள் அப்போது ஒற்றுமை இல்லாமல் இருந்தது. இதைக் கவனித்த ஆங்கிலேயர்கள் இந்த ஒற்றுமையின்மையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். சூழ்ச்சியின் மூலம் இரண்டு அரசர்களுக்கு இடையே பகைமையை வளர்த்து அவர்களுக்குள் சண்டைகளை உருவாக்கி விட்டார்கள். தெற்கு பகுதிகளில் உள்ள இந்தியப்படை வீரர்களை வடக்கு பகுதிகளுக்கு அனுப்பி அங்குள்ள அரசர்களுக்கு எதிராக போரிடச் செய்தார்கள். அவ்வாறே வட பகுதியில் இருந்த இந்திய வீரர்களை தென் பகுதிக்கு அனுப்பி போரிடச் செய்தார்கள்.

ஆங்கிலேயரிடத்தில் பணபலம், ஆள்பலம், ஆயுதபலம் என அனைத்தும் இருந்தன. மேலு நமது அரசர்களிடத்தில் ஒற்றுமை என்பது சிறிதும் இல்லாமல் இருந்தது. இந்த அனைத்து விஷயங்களும் ஒன்றாய்ச் சேர்ந்து, நமது நாட்டு மக்களை ஆங்கிலேயர்களுக்கு அடிமைகளாகச் செய்தன. வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியின் மூலம் மெல்ல மெல்ல இந்திய நாட்டை தங்கள் வசப்படுத்தி நம்மை ஆட்சி செய்து அடிமைகளாய் நடத்த ஆரம்பித்தார்கள்.

நமது நாட்டின் சிற்றரசர்கள் பலர், ஆங்கிலேயர்களுக்கு சேவகம் செய்தார்கள். ஆயினும் தமிழ்நாட்டில் புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் என்று அழைக்கப்பட்ட கட்டபொம்மு, மருதுபாண்டியர், தீரன் சின்னமலை என பல்வேறு ஆட்சியாளர்களும் கர்நாடக மாநிலத்தில் திப்பு சுல்தான், வடமாநிலத்தில் சிராஜ் உத்தெளலா போன்றோரும் ஆங்கிலேயருக்கு எதிராக குரல் கொடுத்து தமது இறுதி மூச்சு உள்ளவரை போராடினார்.

ஆங்கிலேயரின் இந்தியப் படையில் மொத்தம் நான்கு லட்சம் படைவீரர்கள் இருந்தார்கள். இதில் மூன்று லட்சத்து அறுபதினாயிரம் பேர் இந்திய வீரர்கள். மீதமிருந்த நாற்பதாயிரம் பேர்களும் ஆங்கிலேயர்கள். ஆனால் அவர்கள் அனைவரும் படை அதிகாரிகளாக பணியாற்றினார்கள். நமது நாட்டு வீரர்களோ சாதாரண சிப்பாய் வேலைகளையே செய்து வந்தார்கள்.

ஆங்கிலேயர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு படையை உருவாக்கி வைத்திருந்தார்கள். மெட்ராஸ் சேனை, மலபார் சேனை, வங்கச் சேனை என பலப்பல சேனைகளை உருவாக்கி வைத்து திறமையாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆங்கிலேயர்களின் படையில் வீரர்களாக இருந்த இந்திய வீரர்களின் மனதில் ஒரு வேதனை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அது என்னவெனில் நமது நாட்டைச் சேர்ந்தவர்களை நாமே கொல்கிறோமே என்ற வேதனைதான் அது. இந்த காலகட்டத்தில் திப்புசுல்தானின் வாரிசுகள் ஆங்கிலேயர்களால் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்படிருந்தார்கள். வேலூர் கோட்டையில் நமது சிப்பாய்கள் காவல் இருந்தார்கள்.

10.07.1806 அன்று நமது சிப்பாய்கள் திடீரென்று வேலூர் கோட்டைக்குள் கலகத்தில் ஈடுபட்டார்கள். தங்களிடம் இருந்த துப்பாக்கிகளின் மூலம் வெள்ளையர்களை சுட்டுத் தள்ளினார்கள். அனைத்து இந்திய சிப்பாய்களும் ஒற்றுமையாக செயல்பட்டார்கள். இது சிப்பாய் கலகம் என்று பெயர் பெற்றது.

வேலூரில் நடைபெற்ற இச்சம்பவம் எல்லா இடங்களுக்கும் பரவியது. பாளையங்கோட்டையிலும் சிப்பாய்கள் கலகத்தில் ஈடுபட்டனர். வேலூர் கோட்டை நமது சிப்பாய்களின் வசம் சுமார் எட்டு மணிநேரம் இருந்தது. நமது சிப்பாய்களும் வெள்ளைக்கார சிப்பாய்களும் கடுமையாக மோதினார்கள். இப்போரில் சுமார் 800 இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான சிப்பாய்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் ஆங்கிலேயர்களின் மனதில் பெரும் ஆத்திரத்தைத் தூண்டிவிட்டது. ஏற்கனவே மனசாட்சி இல்லாமல் இந்தியர்களைக் கொடுமைப்படுத்தி வந்த ஆங்கிலேயர்கள் இச்சம்பவத்திற்குப் பின்னர் இன்னும் கடுமையாக நடந்துகொள்ள ஆரம்பித்தனர். இந்திய மக்கள் மீது அளவுக்கு அதிகமான வரிகளை விதித்தார்கள். இங்கு விளைவிக்கப்பட்ட பருத்தி இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அங்கிருந்த விசைத்தறிகளில் அவை துணிகளாக உற்பத்தி செய்யப்பட்டன. துணிகளுக்கு தேவையான சாயம் தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஆங்கிலேயர்களுக்கு ஏற்பட்டது.

சாயம் தயாரிக்க ‘அவுரி’ எனும் ஒரு தாவரம் அந்நாட்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆங்கிலேயர்கள் இந்திய மண்ணில் இந்த அவுரிச் செடியை விதைத்து விவசாயம் செய்ய இந்திய மக்கனை கட்டாயப்படுத்தினார்கள். நல்ல விளைநிலங்கள் இதனால் பாழாயின. நெல், கோதுமை போன்றவை விளைவிக்கப்படாததால் இந்தியாவில் கடும் உணவுப்பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் ஆயிரக்கணக்கில் பட்டினியால் மாண்டு போனார்கள்.

சிப்பாய் கலகத்திற்குப் பின்னர் இந்திய சிப்பாய்கள் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாயினர். வெள்ளைக்கார சிப்பாய்களுக்கு தரப்பட்ட எந்த சலுகையும் இந்திய சிப்பாய்களுக்கு இல்லை. சிப்பாய்கள் போரில் மரணமடைந்தால், அவர்களுடைய வாரிசுகளுக்கு எந்த நஷ்டஈடும் தரப்படவில்லை. பல இந்திய சிப்பாய்களின் குடும்பத்தினர் அநாதைகளாய் ஆனார்கள். ஆனால் ஆங்கிலச் சிப்பாய்களின் வாரிசுகளுக்கு வேலைகள் தரப்பட்டன. இதன் காரணமாக இந்திய சிப்பாய்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

இந்த சமயத்தில் என்ஃபீலிடு எனும் ஒரு வகை புதிய துப்பாக்கி ஆங்கிலேயர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் தோட்டாக்களில் பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டிருந்தது. பசுக்களை இந்துக்கள் தெய்வமாக வழிபட்டு வந்தார்கள். முஸ்லீம்களுக்கு பன்றிகளை பிடிக்காது. இந்த தோட்டாக்களை பற்களால் கடித்து இழுத்து பின்னர் துப்பாக்கியினுள் செலுத்தி பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இந்திய சிப்பாய்களுக்கு எற்பட்டது. இது அவர்களது மனதை மிக அதிக அளவில் புண்படுத்தியது.

நமது சிப்பாய்கள் இரவு நேரங்களில் இதுகுறித்து இரகசிய ஆலோசனைகளை நடத்தி வந்தார்கள். மே மாதம் 1857ல் சிப்பாய்கள் மற்றொரு புரட்சியை துவக்க திட்டமிட்டனர். ஆனால் அதற்கு முன்னரே வங்கத்து சேனையில் மங்கள்பாண்டே எனும் ஒரு சிப்பாய் தைரியமாய் ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்றான். அவனை சுட்டுத்தள்ள ஆங்கிலேய அதிகாரிகள் இந்திய சிப்பாய்களுக்கு உத்தரவிட்டனர். ஆனால் நமது சிப்பாய்கள் மங்கள்பாண்டேயை சுட மறுத்தனர். மங்கள்பாண்டே மூன்று வெள்ளையரை சுட்டுக் கொன்று தன்னைத்தானே சுட்டுக் கொண்டான். ஆனால் மங்கள்பாண்டே சாகவில்லை. உயிர்பிழைத்துக் கொண்டான். இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் மங்கள்பாண்டேயை 08.04.1857 அன்று தூக்கிலிட்டனர் இச் செய்தி இந்தியா முழுவதும் பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மீரட் நகரில் கர்னல் ஸ்மித் எனும் அதிகாரி கொடுத்த கொழுப்பு தடவிய தோட்டாக்களை நமது வீரர்கள் பயன்படுத்த மறுத்தனர். இதனால் அவர்களுக்கு பத்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இச் செய்தி மீரட் நகரம் முழுவதும் பரவி கலகம் வெடித்தது. மக்கள் அனைவரும் ஒன்றாய்க் கூடி சிறைக்கதவுகளை உடைத்து, சிறைக்குள் இருந்த நமது சிப்பாய்களை வெளியே கொண்டு வந்தனர். மக்கள் ஆயுதங்களை கைகளில் எடுத்தனர். 10.05.1857ல் நடைபெற்ற இச்சம்பவம் வெள்ளையர்களை திகிலடையச் செய்தது. சிப்பாய்கள் மீரட் நகரத்தை கைப்பற்றினர்.

11.05.1857அன்று மீரட்டிலிருந்து புறப்பட்ட படைகள் தில்லியை நோக்கி வந்தன. தில்லியில் ஏற்கனவே இருந்த படைகளும் மீரட்டிலிருந்து வந்த படையும் ஒன்றாய் இணைந்து, ஆங்கிலேய அதிகாரிகளைக் கொன்று தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர். இதுமட்டுமின்றி இரண்டாம் பகதூர் ஷா எனும் முகலாய மன்னரை ஆட்சியில் அமர்த்தினர். தில்லியை இந்தியப் படைகள் கைப்பற்றிய விஷயம் நாடு முழுக்க பரவி படைவீரர்களுக்கு புதுத்தெம்பை அளித்தது. பரேலி, அலிகார், ஜான்சி, அலகாபாத், லக்னோ போன்ற இடங்களில் இருந்த படைவீரர்கள் ஈடுபட்டு வெள்ளையரை எதிர்த்து போரிட்டனர்.

இனிமேலும் நடவடிக்கை எடுக்காமல இருந்தால் ஆபத்து என்பதை உணர்ந்த வெள்ளைய அரசு ஈரான் போன்ற நாடுகளிலிருந்து படைகளை தருவித்தது. ஈரான் படைவீரர்கள் 14.09.1857 அன்று டில்லியைச் சுற்றி வளைத்து, சரமாரியாக இந்தியப் படைவீரர்களைக் கொன்று குவித்தனர். சுமார் 2500 இந்தியப் படைவீரர்கள் இத்தாக்குதலில் இத்தாக்குதலில் வெள்ளையர்களால் கொல்லப்பட்டனர். ஈரான் படைவீரர்களின் உதவியுடன் வெள்ளையர்கள் கடும் தாக்குதல் நடத்தி தில்லியை சுற்றி வளைத்து கைப்பற்றினார்கள்.

ஜான்சி நாட்டைச் சேர்ந்த ராணி லட்சுமி பாய் எனும் வீரப்பெண்மணி வெள்ளையரை எதிர்த்து நேரடியாக களத்தில் குதித்துப் போராடத் தொடங்கினாள். வெள்ளையருக்கும் ஜான்சி ராணிக்கும் கடும்போர் நடைபெற்றது. இறுதியில் ஜான்சி ராணி, தாந்தியா தோப்பெ, நானா சாகிப், அகமதுல்லா ஷா என வரிசையாக இந்திய புரட்சியாளர்கள் கொல்லப்பட்டனர். சிப்பாய்களின் கலகம் இறுதியில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியில் முடிந்தது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.