எதிர்வரும் சனிக்கிழமை 17ம் திகதி மு.ப. 9.00 மணிக்கு வெளியிடப்படவுள்ள ‘நெஞ்சம்
நிறைந்த நஜீப் ஹாஜியார்’ மற்றும் ‘நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய’ அடிக்கல் நடும்
வைபவம் என்பவற்றுக்காக இடம்பெறவுள்ள விழாவையொட்டி இக் கட்டுரை பிரசுரமாகின்றது.
பேருவளைத் தொகுதியில் தர்காநகரில் புகழ்பூத்த பெருமகன் அமீர் ஆலிம், பாத்தும்மா
தம்பதியினரின் தவப் புதல்வனாக நஜீப் 1957ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி
வியாழக்கிழமை பிறந்தார்.
குதுபுல் ரபியுல் ஆஹிர் பிறை 28 இல் பிறந்ததினால்,
முஹியத்தீன் மெளலூது கிதாபில் வரும் ‘நஜீப்’ என்ற பெயரையொட்டியே அன்னவருக்கு
முஹம்மது நஜீப் எனும் பெயரைச் சூட்டி பேரானந்தம் அடைந்தனர் அவரது பெற்றோர் ‘நஜீப்’
என்பதற்கு ‘புத்தி கூர்மையுள்ளவன்’ என்பது பொருளாகும். முஹம்மது நஜீபின் பாட்டனார்
வெலிப்பன்னையைச் சேர்ந்தவராவார். அன்னார், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்
வெலிப்பன்னைத் தொகுதியின் கிராம விதானையராகக் கடமையாற்றியுள்ளார்.
பள்ளிவாசல்கள் பலவற்றை புனர்நிர்மாணம் செய்வதற்கு உறுதுணையானவரும், சமூக நலத்
தொண்டுகளில் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான நஜீப்பின் அமீர் ஆலிம்
அவர்களின் வாழ்க்கை வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. அவர், தனது ஆரம்பக் காலத்தில்
அளவில்லாத துன்பம் அனுபவித்தார். பொருளாதா, அரசியல், செல்வப் பின்னணியேதுமற்ற ஒரு
சாதாரண மார்க்கப் பின்னணியுள்ள குடும்பத்தில் பிறந்த அவர், கல்வியிலே படுசுட்டியாக
இருந்த போதும் கல்வியில் கருத்துச் செலுத்திட கரிசனை கொள்ளவில்லை. மாறாக மார்க்கக்
கல்வியிலே தனது முழுக்கவனத்தையும் செலுத்தியுள்ள அன்னவர் மார்க்க வழிமுறைகளை
பின்பற்றி வாழ்ந்து வருகின்றார்.
நஜீப் ஹாஜியார் தனது பிள்ளைப் பருவம் முதல் பால்யப் பருவம் வரை பட்டகஷ்ட நஷ்டங்கள்
கொஞ்சநஞ்மல்ல. மலைநாட்டுப் பகுதியொன்றின் பள்ளிவாசல் ஒன்றில், 50 ரூபா மாதச்
சம்பளத்துக்கு 1976 களில் கதீபாகச் சேர்கின்றார். குறுகிய ஒன்றரை வருட காலத்துக்குள்
அவ்வூர்ப்பகுதியில் சேவைகள் பல புரிந்து அனைவர் உள்ளங்களிலும் நிலைத்துவிட்டார்.
எனினும், இறையில்லத்திலிருந்து ஊதியம் பெறுவது தனது உள்ளத்தை உறுத்தவே, அனைவரது
கண்ணீருக்கும் மத்தியிலே அங்கிருந்து அகன்று தனது சொந்த ஊருக்கு வந்து தொழில்
செய்தார்.
பின்னர் 1978இல் இவரது நீண்டகால ஆசை நனவாகி வெளிநாட்டு வேலை பெற்று அபுதாபி
பயணமானார். தனது முயற்சி, தேர்ச்சி, பொறுமை என்பவற்றின் விளைவால் குறுகிய நான்கு
மாத காலத்துக்குள் கண்காணிப்பாளர் பதவி பெற்று வாழ்வின் உயர்ச்சியின் முதற்படியில்
காலடி பதித்தார். இடைவிடாத பயிற்சி, பொறுமை, நம்பிக்கை, நாணயம் எல்லாவற்றுக்கும்
மேலாக அனுதினமும் அல்லாஹ்வை வழிபட்டு, அவனிடமே பிரார்த்தனை மேற்கொள்ளும் உயர் பண்பு
என்பவற்றால், அன்னவர் படிப்படியாக உயர்நிலையை அடைந்து வரலானார். அல்-ஜன் பொலிஸ்
தலைமையலுவலகம், ஸிதிரி நீதிமன்றம் என்பவற்றில் அரச மொழிபெயர்ப்பாளர், அரசாங்க
உத்தரவு பெற்ற பல்பாஷை நெறியாளர், மற்றும் மொழிபெயர்ப்பாளர்களைச் சேர்த்துக்
கொள்வதற்கான தொழில் நியமனச் சபையின் தலைவர் போன்ற பல்வேறு உயர்நிலைப் பதவிகளைப்
பெற்றுக் கொண்டார்.
ஐக்கிய அரபு இராச்சிய தலைவர் செய்கு சாயித் பின் ஸ¤ல்தானின் நேரடிக் கண்காணிப்பில்
அல்-ஜன் மாவட்டத்தில், புதிதாக இஸ்லாத்தைத் தழுவிக் கொண்ட பல்வேறு நாட்டு மக்களின்
நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள கல்விக் கூடத்தில், புது முஸ்லிம்களின் ஆசிரியராக 1988
இலிருந்து நியமனம் பெறுகின்றார்.
அல் -ஜனில் வாழும் இலங்கை முஸ்லிம்களின் மேம்பாட்டுக்காக நலன்புரிச் சங்கமொன்றை
அமைத்து, அதன் தலைவராக தொடர்ந்தும் நஜீப் ஹாஜியாரே இருந்து வந்துள்ளார். இவை நஜீப்
ஹாஜியாரின் பணிகளில் சிலவேயாகும்.
கடந்த 35 வருடகாலமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணி புரியும் நஜீப் ஹாஜியார் அங்கு
பல்வேறுபட்ட அரசியல் பிரமுகர்கள், திணைக்கள உயர் அதிகாரிகள், வெளிநாடுகளின் உயர்
ஸ்தானிகர்கள், சமூக மற்றும் மார்க்கப் பெரியார்களுடன் அன்னியோன்யத் தொடர்புகளை
இறுக்கமாக வலுப்படுத்திக் கொண்டுள்ளதுடன், இலங்கைத் தாயகத்திலும் அரசியல்
பிரமுகர்கள் மற்றும் சமூக, மார்க்கப் பெரியார்களுடன் இறுக்கமாக இணைந்து கொண்டுள்ள
பாங்கை நாம் இங்கு கூறியே ஆகவேண்டும்.
நஜீப் ஹாஜியாரின் மனதிலே ஊற்றெடுத்த மற்றொரு சிந்தனை, முஸ்லிம் சமூக, கல்வி, கலாசார
மேம்பாட்டுக்கென நிரந்தரமாக இரண்டு மாடிக்கட்டிடம் ஒன்றை நிறுவி அதில், பெண்கள்
பகுதியுடனான நூல்நிலையம், சிறுவர்களுக்கான குர்ஆன் மத்ரஸா மற்றும் ஆலோசனைக்
கூடமொன்றையும் உள்ளடக்குவதாகும். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17ஆம் திகதியுடன் ‘நஜீப்
ஹாஜியார் கல்வி நிலையம் (னிரிவி) என்ற பெயருடன் அந்நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும்
வைபவத்துடன் அவரது கனவு நனவாகின்றது.
இம்மகோன்னதப் புருஷரின் வாழ்க்கை வரலாறு வளம் மிகுந்த பல பயன்களைத் தரக் கூடியதாக
இருப்பதாலும், பேணிப் பாதுகாக்க வேண்டியதொன்றென்ற அடிப்படையிலும் தர்காநகர்
எழுத்தாளர் முழுவொன்று (அதிபர், ஸஹீத். எம். இர்பான், அறிவிப்பாளர் அல் -ஹாஜ் பாஸி
ஸ¤பைர், எழுத்தாளர் திருமதி பாயிஸாகைஸ்) ‘நெஞ்சம் நிறைந்த நஜீப் ஹாஜியார்’ என்ற
பெயர் கொண்ட நஜீப் ஹாஜியாரின் வரலாற்றுத் தொகுப்பு நூல் ஒன்றை வெளியிட எண்ணம்
கொண்டது. அன்னவரது வாழ்க்கையில் இடம்பெற்ற அனைத்து விடயங்ககளையும் அன்னவரே தனது
சொந்தக் கையெழுத்துக்களில் நேரம் காலம் தவறாது வரிசைக்கிரமமாக எழுதி வைத்திருந்தமை
இந்த நூலை ஆக்குவதற்கு மிக இலகுவாக அமைந்ததென நூலாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நூல் முற்றிலும் இலவசமாகவே விநியோகிக்கப்படவுள்ளதென்பதும் ஈண்டு
குறிப்பிடத்தக்கது.
தர்காநகர் அலிப் சர்வதேசப் பாடசாலையில் ஓய்வு பெற்ற அதிபரும் அல் -ஹாஜ் ஏ. எச். எம்.
அத்தாஸின் (வெலிப்பன்னை அத்தாஸ்) தலைமையில் இடம்பெறவுள்ளது. இவ்விழாவின் போது
ஹாஜியாரின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கையில் பிரசித்திபெற்ற கலைஞர்கள், கல்விமான்கள்
சிலர் (தர்காநகருடன் தொடர்புபட்ட) முதற்கட்டமாக கெளரவிக்கப்படவுள்ளனர்.
அத்துடன் 2010,2011,2012ஆம் ஆண்டுகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்
சித்தியெய்திய பேருவளைத் தொகுதி முஸ்லிம் பாடசாலைகளின் மாணவர்களைப் பாராட்டி
பரிசில்கள் வழங்கும் வைபவமும் இப்பெருவிழாவில் கல்விமான் ஐ.எல்.எம். சுஜப்,
ஒலிபரப்பாளர் அஹமட் முனவ்வர், தினகரன் இணை ஆசிரியர் மர்லின் மரிக்கார், நவமணி உதவி
ஆசிரியர் ஏ. எல். எம். சத்தார் ஆகியோர் கெளரவிக்கப்படவுள்ளனர்.