டாக்டர் சிம்மத்தின் வீட்டுக்குள் வெகு பரபரப்புடன் ஓடி வந்தார் ராமபத்திர
அய்யங்கார்.
“ஸார்! என் சம்சாரத்துக்கு உடம்பு செளக்யமில்லை!” என்றான்.
“சற்று நிதானமாக உட்கார்ந்து சொல்லும். உமக்கு உடம்பு ஒன்றும் இல்லையே?” என்று
கேட்டார் சிம்மம்.
“அப்படி இருந்தால் தேவலையே; அவள் ரொம்ப கஷ்டப்படுகிறாள்... இருமல் குறைகிறது. அவள்
தூங்கிப் பதினைந்து நாளாகிறது...”
“தொண்டைக்கு மருந்து போட்டுப் பார்த்தீரா?...
“ஐயோ! அதெல்லாம் பார்த்தாச்சு! ஒன்றும் உபயோகமில்லை. உடம்பு துரும்பாய்ப் போயிட்டாள்!...”
“அப்படியானால் ‘ஆபரேஷன்’ செய்து டான்ஸிலை எடுத்துவிட வேண்டியதுதான்” என்றார் டாக்டர்.
டாக்டர் சிம்மம் ராமபத்திர அய்யங்கார் வீட்டுக்குப் போய், ஆபரேஷன் செய்தார்.
நாலுநாள் தினமும் போய் வந்தார். அந்த அம்மாளுக்கு இருமல் நின்று, செளக்யம் ஏற்பட்டது.
சுமார் ஒரு மாதம் கழித்து ராமபத்திர அய்யங்கார் டாக்டர் சிம்மத்தின் வீட்டுக்கு
மறுபடி அலறிப் புடைத்துக் கொண்டு ஓடி வந்தார். “ஐயோ டாக்டர்!”
“உமக்கு என்ன உடம்பு?”
“எனக்கு ஒன்றுமில்லை. என் சம்சாரத்துக்கு...”
“உம் சம்சாரத்துக்கு என்ன உடம்பு?”
“டாக்டர் ஸார்! சீக்கிரம் வந்து ஆபரேஷன் செய்யுங்கள்; ‘டான்ஸில்’ எடுங்கள். இருமல்
குறைக்கிறது!”
“அடாடா! அப்படியா? அதற்கு இப்போது ஆபரேஷன் செய்யக்கூடாது வேறு எதாவது மருந்து
கொடுத்துப் பார்க்கலாம்.”
“இல்லை; ஆபரேஷன்தான் செய்ய வேண்டும். புறப்படுங்கள்.”
“அதெல்லாம் இல்லை. ஒரு மனிதருக்கு ஒரு தடவை ‘டான்ஸில்’ ஆபரேஷன் செய்தால், மறுபடி
செய்யவேண்டாம். அதுவும் ஒரே மாதத்துக்குள் வேண்டவே வேண்டாம்.” ராமபத்திர அய்யங்கார்
கோபமாக, “டாக்டர் ஸார்! டான்ஸிலுக்கு ஒரு ஆபரேஷன் போதும் என்று நீர் சொல்கிaரே? அது
வாஸ்தவமாயிருக்கலாம். ஆனால் ஒரு மனிதருக்கு ஒரு மனைவிதான் என்று நிபந்தனை இருக்கிறதா?
அப்போது என் மூத்த சம்சாரத்துக்கு நீர் ஆபரேஷன் செய்தீர்; இப்போது வந்து என் இளைய
சம்சாரத்துக்குச் செய்து விட்டுப் போம்!” என்றார்.
24
எனக்கு முன் சென்ற மனிதன் ஒரு காகிதத் துண்டைத் தவறிக்கீழே போட்டு விட்டுச் சென்றான்.
அதை எடுத்துப் படித்துப் பார்த்தேன்.
“பொன்னுசாமி கொலை டிரங்குப் பெட்டி விஷயம் பாங்கில் நானூறு - போலீஸ¤க்கு டிமிக்கி
இரகசிய மூட்டை ஒரே ஓட்டம்!”
எனக்கு முன்னால் சென்ற பேர்வழி கொலையாளி, கொள்ளைக்காரன் என்பதில் எனக்குச் சந்தேகமே
தோன்றியது. ஆகவே, அவனை விடாமல் பின்தொடர்ந்தேன்...
அந்த மனிதன் ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தான். நானும் பின் தொடர்ந்தேன். சமயம்
பார்த்துக் கொண்டிருந்து, நான் சட்டென்று பாய்ந்து அந்த மனிதனைப் பிடித்தேன்.
“இப்போது ஒப்புக் கொண்டு விடு! அந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது?” என்று அதட்டிக்
கேட்டேன்.
“முடியாது,” என்று எதிர்த்தான் அந்த மனிதன். உடனே நான் அங்கு சாப்பிட்டுக்
கொண்டிருந்த ஒரு பொலீஸ்காரன் பக்கம் திரும்பி, “ஐயா! இதற்குள் ஒரு பிரேதம்
இருக்கிறது! திறந்து பார்த்துக் கொள்ளும்” என்றேன்.
எங்களைச் சுற்றி உடனே கூட்டம் கூடிற்று. டிரங்குப் பெட்டியைத் திறந்து பார்த்தால்,
அதிலே வாழைச் சரகுக் கட்டுகள் இரண்டு இருந்தன. நான் விழித்தேன்.
நான் கண்டெடுத்த கடிதத்தைக் காண்பிக்கவும், அந்த மனிதன் பதில் சொன்னான்,
“பயித்தியக்கார மனுஷரே! நான் ஊருக்குக் கிளம்புவதென்றால், செய்ய வேண்டிய காரியங்கள்,
எடுத்துக் கொள்ள வேண்டிய பண்டங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்வேன்...
‘பொன்னுசாமியின் கொலை’ என்பது நான் கொண்டு போக வேண்டிய ஒரு நாவலின் பெயர்.
புதிதாக வாங்க வேண்டியது ஒரு டிரங்குப்பெட்டி, பாங்கியில் என் கணக்கில் கடைசியாக
இருப்பது நானூறு ரூபாய்; அதைத்தான ‘பாங்கியில் நானூறு’ என்று குறித்துக் கொண்டேன்.
என் வீட்டுக்காரர் பொலீஸில் உத்தியோகம் பார்ப்பவர். அவருக்கு வாடகை பின்னால்
கொடுக்கலாமென்பதைத்தான் ‘பொலீஸ¤க்கு டிமிக்கி’ என்று குறிப்பிட்டிருந்தேன். என்
தாயார் சரகு கொண்டு வரச் சொல்லியிருந்தாள். அதை வெளியில் தூக்கிக் கொண்டு போவது
அநாகரிகமாக இருந்தபடியால், டிரங்கில் போட்டிருக்கிறேன். அதுதான் ‘இரகசிய மூட்டை.’
இதெல்லாம் ஆன பிறகு ஊருக்கு ‘ஓட்டம்தானே?”
25
அன்று ரயில்வே ஸ்டேஷனில் ஏகப்பட்ட கூட்டம். டிக்கட் கொடுக்கும் இடத்திலே எள்ளு
போட்டால் எள்ளு விழாது. டிக்கட் கொடுத்துக் கொண்டிருந்த பொன்னுசாமிப் பிள்ளை திக்கு
முக்காடிப் போய் விட்டார்.
இந்தச் சமயத்தில் டிக்கட் வாங்கிக் கொண்டு போன ஒரு பிரயாணி பொன்னுசாமிப் பிள்ளை
கொடுத்த சில்லறைப் பணத்தை எண்ணிப் பார்த்தார். ஒரு தடவைக்கு இரண்டு தடவை எண்ணிப்
பார்த்தார்.
கூட்டத்தை விலக்கி கொண்டு ஜன்னலண்டை நெருங்கினார்.
“ஸார்! நீங்கள் இப்பொழுது கொடுத்த சில்லறை வந்து” என்று ஆரம்பித்தார்.
இவர் பேசி முடிப்பதற்குள் பொன்னுசாமிப் பிள்ளை முகத்தில் எள்ளும், கொள்ளும்
வெடிக்க, “அதெல்லாம் இப்பொழுது ஒன்றும் கவனிக்க முடியாது. முதலிலேயே
சொல்வதற்கென்ன?” என்றார்.
“இங்கே கூட்டம் அதிகமாயிருந்ததால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. வெளியே போனதும்தான்
எண்ணிப் பார்த்தேன்”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது, வழியில் நிற்காதேயும்; நான் என்ன உம்மோடு வாதாடுவதா?
வேலையைப் பார்ப்பதா? இன்னும் எத்தனையோ பேருக்கு டிக்கட் கொடுத்தாக வேண்டும்”
“இல்லே, வந்து”
“இல்லையாவது, நொள்ளையாவது! அதெல்லாம் முடியாது. போ அப்பாலே!”
இதற்குள் முன்னும் பின்னும் கூட்டம் நெருக்கித் தள்ள ஆரம்பித்தது. “யாரய்யா! நகரு”
என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள்.
“என்ன இது? நான் சொல்வதற்குள் கோபித்துக் கொள்ளுகிaர்களே! நான் வந்து
கும்பகோணத்துக்கு ஒரு டிக்கட் வாங்கினேனா?” என்றார் பிராணி.
“இது என்ன ஐயா, பெரிய கழுத்தறுப்பாகப் போய் விட்டது! கூடவோ, குறைச்சலோ, அதெல்லாம்
உடனுக்குடன் அப்பவே சொன்னால்தான் ஒப்புக் கொள்ள முடியும். இப்ப வந்து ‘சில்லறை
அதிகமாகக் கொடுத்து விட்டேன்’ என்று நான் சொன்னால் ஒப்புக் கொள்ளுவீரா?”
“அதைத்தான் நான் சொல்ல வந்தேன். நீங்கள் தவறிப் போய் ஐந்து ரூபாய் நோட்டு
கொடுத்திருக்கப் பத்து ரூபா நோட்டு என்று நினைத்து விட்டீர்கள் போலிருக்கிறது.!”
என்றார்.