“இல்லை,
விக்கிரமா! எனக்கு இருக்க நேரமில்லை. எது எப்படியானாலும் நீ உன் உறுதியைக் கைவிடாதே.
உன் தந்தை வாக்கை மறந்துவிடாதே” என்றார்.
அருள்மொழித் தேவி அப்போது பொன்னனை பார்த்து “பொன்னா! இளவரசரை அழைத்துக் கொண்டு
படகுக்குப் போ; இதோ நான் வந்துவிடுகிறேன்” என்று சொல்ல பொன்னனும் விக்கிரமனும் உடனே
வெளியேறினார்கள்.
அருள்மொழித் தேவி அப்போது சிவனடியார் பாதத்தில் நமஸ்கரித்து, அந்தப் பாதங்களைப்
பிடித்துக் கொண்ட வண்ணம் சொல்வாள்:-
“சுவாமி! தாங்கள் யாரோ எனக்குத் தெரியாது. என்ன வெல்லாமோ தங்களைப் பற்றி நான்
சந்தேகித்தது உண்டு. ஆனால், தாங்கள் எங்கள் நன்மையை நாடுகிறவர் என்பதில்
சந்தேகப்பட்டதே இல்லை; அதனால் தங்களை யாரென்று தெரிந்து கொள்ளவும் நான்
ஆசைப்படவில்லை. தாங்கள் யாராயிருந்த போதிலும் சரி, அடியாளுக்கு ஒரு வரந்தரவேண்டும்.
எனக்குத் தங்களைத் தவிர வேறு கதி கிடையாது.”
சிவனடியாரின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
“என்னால் முடிகிற காரியமாயிருந்தால் கட்டாயம் செய்கிறேன், அம்மா! கேள்” என்றார்.
“தாங்கள் மகான். தாங்களால் முடியாத காரியம் ஒன்றுமே இருக்க முடியாது. வேறென்ன நான்
கேட்கப்போகிறேன்? என் பிள்ளையின் உயிரைத் தாங்கள் காப்பாற்றித் தரவேண்டும் சுவாமி!
இவன் இப்போது செய்யப்போகிற காரியம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. மகா
சக்திவாய்ந்த பல்லவ சக்கவர்த்தியை எதிர்த்து இளம் பிள்ளையால் என்ன செய்ய முடியும்?
எல்லாம் தெரிந்து தாங்களும் இந்தக் காரியத்தில் இவனை ஏவி விட்டிருக்கிaர்கள்.
தங்களுடைய நோக்கம் என்னவோ தெரியாது, சுவாமி! என்னவாயிருந்தாலும், அவனுடைய உயிரைக்
காப்பாற்றிக் கொடுக்கும் பொறுப்பு தங்களுடையது” என்று ராணி தழுதழுத்த குரலில்
கூறினான்.
“உயிரைக் காப்பாற்றும் சக்தி வாய்ந்தவர் கடவுள் ஒருவர்தான், அம்மா! ஆனாலும் உனக்கு
ஒரு உறுதி சொல்லுகிறேன். விக்கிரமனுடைய வீரத் தந்தையின் ஆத்மா அவன் பக்கத்திலிருந்து
அவனைக் காப்பாற்றும். நீ கவலைப் படாதே, எழுந்திரு! என்றார்.
அச்சமயம் மேற்குத் திசையில் தூரத்தில் குதிரையின் குளம்படிச் சத்தம் கேட்கவே,
சிவனடியார் விரைவாக விடை பெற்றுக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கிக் சென்றார்.
சிவனடியார் சென்று சற்று நேரத்திற்கெல்லாம் மாரப்ப பூபதி குதிரைமீது வந்து
இறங்கினான். உடனே, “விக்கிரமா! சிவனடியார் வரப்போகிறாரென்று சொன்னாயே? வந்து
விட்டாரா!” என்று கேட்டான்.
“இப்போதுதான் போனார்! சித்தப்பா! போய்ச் சில விநாடி நேரங்கூட ஆகவில்லை. சற்று
முன்னால் வந்திருக்கப்படாதா!” என்று விக்கிரமன் சொல்லிச் சிவனடியார் போன திசையை
நோக்கினான்.
அதைப் பார்த்த மாரப்பன், “இந்தச் சாலை வழியாகத் தானே போனார்? இதோ அவர் முகத்தைப்
பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்று கூறி, மறுபடியும் குதிரை மேலேறி விரைந்து
சென்றான்.
ஆனால், அவன் அந்த நதிக்கரைச் சாலையோடு வெகு தூரம் குதிரையை விரட்டிக்கொண்டு போயும்
சிவனடியார் தென்படவில்லை. அவர் மாயமாய் மறைந்துவிட்டார்.
மாமல்லபுரம்
கடற்கரைப் பட்டினமாகிய மாமல்லபுரத்தில் அன்று அல்லோல கல்லோலமாயிருந்தது. வீடுகள்
எல்லாம் மாவிலைகளினாலும், தென்னங்குருத்துகளினாலும், சிங்க உருவந்தாங்கிய
கொடிகளினாலும், பல வர்ணத் தோரணங்களினாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின.
தெருவீதிகளில் சித்திர விசித்திரமான கோலங்கள் போடப்பட்டிருந்தன. தேர்கள், யானைகள்,
குதிரைகள், கோபுரங்கள், பலவித விருட்சங்கள், பூஞ்செடிகள் இவை போலெல்லாம் போட்ட
கோலங்கள் கண்ணுக்கு விருந்தாயிருந்தன. அதிகாலையிலிருந்து ஸ்திரீகளும், புருஷர்களும்
சிறுவர் சிறுமிகளும் பட்டுப் பட்டா டைகளினாலும், பசும்பொன் ஆபரணங்களினாலும் தங்களை
அலங்கரித்துக் கொண்டு தெரு வீதிகளிலும் திண்ணைகளிலும் கூட்டங் கூட்டமாக
நின்றுகொண்டிருந்தனர். எங்கே பார்த்தாலும் பேரிகை முழக்கம், மற்றும்
மங்களவாத்தியங்களின் ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தன.
இந்த ஒலிகளுக்கிடையில், “சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து கிளம்பி விட்டாராம்!” “பாதி
வழி வந்தாகிவிட்டதாம்!” “சக்கரவர்த்தியுடன் கோமகள் குந்தவிதேவியும்
வருகிறாராம்!”என்றெல்லாம் ஜனங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்
கலகல சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.
மாமல்லபுரம் வாசிகள் அத்தனை அதிக உற்சாகத்துடனும் ஆனந்தத்துடனும் அன்று உற்வசம்
கொண்டாடியதன் காரணம் என்னவென்றால், அந்நகருக்கு அன்று மாமல்ல நரசிம்மவர்ம
சக்கரவர்த்தி விஜயம் செய்வதாக இருந்தது தான். சக்கரவர்த்தி விஜயம் செய்து, ஏழெட்டு
வருஷங்களுக்கு முன்னால் நின்றுபோன சிற்பப் பணியை மறுபடியும் ஆரம்பித்து வைப்பார்
என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சக்கவர்த்தியுடன் கூட அவருடைய செல்வக் குமாரி குந்தவி தேவியும் வரப்போவதாக
தெரிந்திருந்தபடியால் மாமல்லபுர வாசிகள் எல்லையற்ற குதூகலத்துடன் அந்த நாளைத்
திருநாளாகக் கொண்டாடினார்கள்.
அந்தக் காலத்தில், காஞ்சி நரசிம்மவர்ம சக்கரவர்த்தியின் புகழ் எண்டிசையிலும்
பரவியிருந்தது. பாரத நாடெங்கும் அவருடைய கீர்த்தி வியாபித்திருந்ததோடு, கடல் கடந்து
வெளிநாடுகளுக்கும் சென்றிருந்தது. தெற்கே காவேரியாற்றங் கரையிலிருந்து வடக்கே
கிருஷ்ணா நதிக்கரை வரையில் பல்லவர்களின் சிங்கக்கொடி கம்பீரமாகப் பறந்தது. அந்தப்
பிரதேசத்திலுள்ள ஜனங்கள் எல்லோரும் நரசிம்மவர்மரிடம் அளவிலாத பக்தி
கொண்டிருந்தார்கள். அறிவிலும் வீரத்திலும், தயாள குணத்திலும், நடுக் கண்ட நீதி
வழங்குவதிலும், குடிகளின் நலங்களைக் கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாப்பதிலும், சிற்பம்,
சித்திரம், சங்கீதம் முதலிய கலைகளை வளர்ப்பதிலும் நரசிம்மவர்மர் மிகச் சிறந்து
விளங்கியது பற்றி அவருடைய பிரஜைகள் மிக்க பெருமை கொண்டிருந்தார்கள். வடக்கே நர்மதை
நதி வரையில் படையெடுத்துச் சென்று பொல்லாத புலிகேசியைப் போரில் கொன்று, வாதாபி
நகரையும் தீக்கிரையாக்கி விட்டு வந்ததன் பின்னர், மாமல்ல சக்கரவத்தியைப் பற்றி
அவருடைய குடிகள் கொண்டிருந்த பெருமை பன்மடங்கு பெருகியிருந்தது.
“தட்சிண தேசத்தில் நரசிம்மவர்மரைப் போல் ஒரு சக்கரவர்த்தி இதுவரையில்
தேன்றியதுமில்லை; இனி மேல் தோன்றப் போவதுமில்லை!” என்று அந்தக் காலத்தில் பல்லவ
சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த ஜனங்கள் நம்பினார்கள்.
முன்னூறு வருஷத்துக்குப் பிறகு தஞ்சையில் இராஜராஜன், இராஜேந்திர சோழன் என்னும் மகா
சக்கரவர்த்திகள் தோன்றப் போகிறார்கள் என்பதை அந்தக் காலத்து மக்கள் அறிந்திருக்க
முடியாதல்லவா?
இவ்விதம் பல்லவ சாம்ராஜ்யத்தின் பிரஜைகள் எல்லாருமே நரசிம்மவர்ம சக்கரவர்த்தியிடம்
பக்தி விசுவாசம் கொண்டிருந்தார்களாயினும், மாமல்லபுரம் வாசிகளுக்குச்
சக்கரவர்த்தியிடம் ஒரு தனித்த உறவு ஏற்பட்டிருந்தது. அந்தப் பட்டினத்துக்குப்
பெயரும் புகழும் அளித்தவர் அவரே யல்லவா?
மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் காலத்தில், நரசிம்மவர்மர் இளம்
பருவத்தினராயிருந்தபோது ஒரு தடவை மல்யுத்தத்தில் பிரசித்தி பெற்ற மல்லர்களையெல்லாம்
தோற்கடித்து வெற்றி பெற்றார்.
அப்போது அவருக்கு “மகா மல்லன்” என்று பட்டம் அவருடைய தந்தை மகேந்திரவர்மரால்
அளிக்கப்பட்டது. சில காலத்திற்குப் பிறகு இந்தப் பட்டப் பெயரை வைத்தே அந்தக்
கடற்கரைப் பட்டினத்துக்குப் பெயர் வழங்கலாயிற்று.
“அப்பா! இந்தப் பட்டினத்துக்கு உங்கள் பட்டப்பெயரை எதற்காக வைத்தார்கள்?” என்று
கோமகள் குந்தவி தேவி, தந்தை நரசிம்மவர்மரைப் பார்த்துக் கேட்டாள்.
இருவரும் பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டத்து யானை மீது அம்பாரியில் வீற்றிருந்தார்கள்.
அந்தப் பட்டத்து யானைக்கு முன்னாலும் பின்னாலும் வேலும் வாளும் தாங்கிய போர்
வீரர்கள் அணிவகுத்துச் சென்றார்கள். இன்னும் பலவகைப்பட்ட விருதுகளும் சென்றன.
எல்லாருக்கும் முன்னால் பெரிய ரிஷபங்கள் முதுகில் முரசுகளைச் சுமந்துகொண்டு சென்றன.
சற்று நேரத்துக்கொரு தடவை அந்த முரசுகள் அடிக்கப்பட்டபோது உண்டான சத்தம்
அலைமோதிக்கொண்டு நாலாபுறமும் பரவியது.
அம்பாரியின்மீது வீற்றிருந்த நரசிம்மவர்ம சக்கரவர்த்தியையும் அவர் அருமைப்
புதல்வியையும் ஏககாலத்தில் பார்த்தவர்கள், உதய சூரியனையும் பூரணச் சந்திரனையும்
அருகருகே பார்த்தவர்களைப் போல் திணறித் திண்டாடிப் போனார்கள்.
இருவருடைய திருமுகத்திலும் அத்தகைய திவ்ய தேஜஸ் ஜொலித்துக் கொண்டிருந்தது. அவர்கள்
அணிந்திருந்த கிரீடங்களிலும், மற்ற ஆபரணங்களிலும் பதித்த நவரத்தினங்களின் காந்தி
பார்ப்பவர்களின் கண்களைக் கூசச் செய்தது.
பல்லவ சக்கவர்த்தி ஆஜானுபாகுவாய், கம்பீரமான தோற்றமுடையவராயிருந்தார். வலிமையும்
திறமையுங்
கொண்ட அவருடைய திருமேனியில் மென்மையும் செளந்தரியமும் கலந்து உறவாடின. இராஜ களை
ததும்பிய அவருடைய முகத்தில் காணப்பட்ட காயங்களின் வடுக்கள், அவர் எத்தனையோ கோர
யுத்தங்களில் கைகலந்து போரிட்டு ஜயபேரிகை முழக்கத்துடன் திரும்பி வந்தவர் என்பதை
ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தன.
கோமகள் குந்தவி தேவியோ பெண் குலத்தின் அழகெல்லாம் திரண்டு உருக்கொண்டவள்
போலிருந்தாள். பல்லவ சாம்ராஜ்யத்திலிருந்த மகா சிற்பிகளும் ஓவியக்காரர்களும்,
குந்தவி தேவியிடம் தங்கள் கலைத்திறன் தோற்றுவிட்ட தென்பதை ஒப்புக் கொண்டார்கள்.
“கோமகளின் கருவிழிகளில்தான் என்ன மாய மந்திர சக்தி இருக்கிறதோ, தெரியவில்லை. தேவி
தமது அஞ்சனந் தீட்டிய கண்களை அகல விரித்து எங்களைப் பார்த்தவுடனேயே நாங்கள்
உணர்விழந்து மெய்மறந்து போய் விடுகிறோம். அப்புறம் சிற்பம் அமைப்பதெங்கே, சித்திரம்
வரைவதெங்கே?” என்றார்கள்.
“எங்களையெல்லாம் கர்வ பங்கம் செய்தவற்கென்றே பிரமன் குந்தவி தேவியைப் படைத்திருக்க
வேண்டும்” என்று அவர்கள் சொன்னார்கள்.
“அப்பா! இந்த நகருக்குத் தங்கள் பட்டப் பெயரை எதற்காக வைத்தார்கள்? சொல்லுகிறேன்,
சொல்லுகிறேன் என்று ஏமாற்றிக் கொண்டு வருகிaர்களே, இன்றைக்குக் கட்டாயம் சொல்லியாக
வேண்டும்” என்று மறுபடியும் கேட்டாள் குந்தவி.
“அப்படியானால் இப்போது இந்த யானைமேலிருந்து நாம் இறங்கியாக வேண்டும்” என்றார்
சக்கரவரத்தி.
“இப்படியே நான் தரையில் குதித்து விடட்டுமா? என்றாள் குந்தவி.
“நீ சாதாரண மனுஷியாயிருந்தால் குதிக்கலாம், அம்மா! குதித்துக் காலையும் ஒடித்துக்
கொள்ளலாம்! சக்கரவர்த்தியின் மகளாயிருப்பதால் அப்படியெல்லாம் செய்யக்கூடாது!”
என்றார் சக்கரவர்த்தி.
“எதற்காக, அப்பா, அப்படி? சக்கரவர்த்தியின் மகளாயி ருப்பதால், யானை மேலிருந்து
குதித்துக் காலை ஒடித்துக் கொள்ளக் கூடவா பாத்தியதை இல்லை?” என்று சிரித்துக் கொண்டே
குந்தவி கேட்டாள்.
“ஆமாம், ஆமாம்! அப்படி நீ செய்தால் ‘காஞ்சி சக்கரவர்த்தியின் மகள் குந்தவி யானை
மேலிருந்து குதித்தாளாம்’ என்றசெய்தி உலகமெல்லாம் பரவிவிடும். அப்புறம் அங்க, வங்க,
கலிங்கம் முதலான ஐம்பத்தாறு தேசத்து இராஜகுமாரர்களில் யாரும் உன்னைக் கலியாணம்
செய்து கொள்ள முன் வரமாட்டார்கள்! அப்புறம் உன் கலியாணத்துக்குச் சீதை விஷயத்தில்
ஜனகர் செய்ததுபோல் நானும் ஏதாவது தந்திரம் செய்தாக வேண்டும்.”
“ஜனகர் தந்திரம் செய்தாரா? என்ன தந்திரம் அப்பா!” என்று குந்தவி கேட்டாள்.
“அது தெரியாதா உனக்கு? சீதை சிறு பெண்ணாயிருந்த போது ஒரு நாள் ஒரு வில்லைத்
தெரியாத்தனமாய்த் தூக்கி நிறுத்திவிட்டாள். இதற்காக அவளை ஐம்பத்தாறு தேசத்து
இராஜகுமாரர்களும் கலியாணம் செய்துகொள்ள மறுத்து விட்டார்கள். கடைசியில் சீதையின்
தகப்பனார் என்ன செய்தார், தெரியுமா? விசுவாமித்திர ரிஷியை அனுப்பி இராமன் என்ற
அசட்டு இராஜகுமாரனைத் தந்திரமாய் அழைத்துவரப் பண்ணினார். ஒரு பெரிய வில்லை நடுவில்
முறித்து , முறிந்தது தெரியாதபடி தந்திரமாய்ப் பெட்டிக்குள் வைத்திருந்தார்! இராமன்
அந்த வில்லை விளையாட்டாக எடுத்தும், வில் முறிந்து இரண்டு துண்டாக விழுந்துவிட்டது!
உடனே, ஜனகர், ‘ஐயையோ! எங்கள் குல சம்பத்தாகிய வில்லை ஒடித்து விட்டாயே! ஒன்று,
ஒடிந்து வில்லைச் சேர்த்துக்கொடு; இல்லாவிட்டால் என் மகள் சீதையைக் கலியாணம்
பண்ணிக்கொள்’ என்றார். இராமன் வேறு வழியில்லாமல் சீதையைக் கலியாணம் செய்து கொள்ள
வேண்டியதாயிற்று!”
குந்தவி விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே, “அப்பா! நானும் இராமாயணக் கதை
கேட்டிருக்கிறேன், நீங்கள் சொல்லுவது புதிய இராமாயணமாயிருக்கிறதே!” என்றாள்.
சற்று சிரிப்பு அடங்கிய பிறகு அவள், “ஆனால் உங்களுக்கு அதைப் பற்றிக் கவலை வேண்டாம்,
அப்பா! நான் கலியாணமே செய்து கொள்ளப்போவதில்லை!” என்று சொன்னார்.
(தொடரும்)
சக்கரவர்த்தி மூக்கின்மேல் விரலை வைத்துக் கொண்டு, “அது என்ன சமாசாரம்? கலியாணம்
உன்னை என்ன பண்ணிற்று? அதன்மேல் ஏன் அவ்வளவு கோபம்?” என்று கேட்டார்.
அப்போது குந்தவி, “கலியாணம் செய்து கொண்டால் நான் உங்களை விட்டுப் பிரியத்தானே
வேண்டும்? உங்களை விட்டுவிட்டுப் போக எனக்கு இஷ்டமில்லை. உங்களுடனேயே நான் எப்போதும்
இருப்பேன்” என்றாள்.
“அப்படியா சமாசாரம், குந்தவி? இன்னொரு தடவை சொல்லு” என்றார் சக்கரவர்த்தி.
“அதெல்லாம் ஒரு தடவைக்குமேல் சொல்ல மாட்டேன், அப்பா! நீங்கள் ஏக சந்தக்கிராகி என்பது
உலகமெல்லாம் பிரசித்தியாயிருக்கிறதே! ஒரு தடவைக்கு மேல் ஏன் கேட்கிaர்கள்?”
“ஏ ஆபாத்பாந்தவா! அநாதரட்சகா! இந்த வாயாடிப் பெண்ணைக் கட்டிக்கொண்டு எந்த
இராஜகுமாரன் திண்டாடப் போகிறானோ? யார் தலையில் அவ்வித மிருக்கிறதோ? அவனை நீதான்
காப்பாற்றியருள வேண்டும்!” என்று சொல்லியபடி சக்கரவர்த்தி தலைமேல் கைகூப்பி வானத்தை
அண்ணாந்து நோக்கினார்
“உங்களுடைய பரிகாசம் இருக்கட்டும். இப்போது யானையை நிறுத்துகிaர்களா, இல்லையா?
இல்லாவிடில் நான் கீழே குதித்துவிட்டேனானால் அப்புறம் என்னை ஒரு இராஜகுமாரனும்
கலியாணம் செய்து கொள்ள மாட்டான். எப்போதும் உங்கள் பிராணனைத்தான் வாங்கிக்
கொண்டிருப்பேன்” என்று குந்தவி சொல்லி எழுந்து நின்று அம்பாரியிலிருந்து கீழே
குதிப்பதுபோல் பாசாங்கு செய்தாள்.
“வேண்டாம், வேண்டாம்; அப்படிப்பட்ட விபரீதம் பண்ணி வைக்காதே!” என்று கூறு, பல்லவ
சக்கரவர்த்தி யானைப்பாகனைக் கூப்பிட்டி யானையை நிறுத்தச் சொன்னார்.
யானை நின்றதும், தந்தையும் மகளும் கீழே இறங்கினார்கள். சக்கரவர்த்தி, குதிரையும்
பல்லக்கும் கொண்டு வரும்படி சமிக்ஞை காட்டினார்.
அவை அருகில் வந்ததும், பரிவாரத் தலைவனை அழைத்து, “நீங்கள் நேரே போய் நகர் வாசலருகில்
நில்லுங்கள். நாங்கள் அங்கே வந்து சேர்ந்து கொள்கிறோம்” என்றார்.
பிறகு, குதிரைமீது ஆரோகணித்து இராஜ மார்க்கத்திலிருந்து பிரிந்து குறுக்கு வழியாகப்
போகத் தொடங்கினார். இளவரசி ஏறியிருந்த பல்லக்கும் அவரைத் தொடர்ந்து சென்றது.
சக்கரவர்த்தி இம்மாதிரியெல்லாம் எதிர்பாராத காரியங்களைச் செய்வது சர்வ சகஜமாய்ப்
போயிருந்தபடியால், அவரைத் தொடந்து வந்து பரிவாரங்கள் சிறிதும் வியப்பு அடையாமல்
இராஜ மார்க்கத்தோடு மேலே சென்றன.