வியாபாரம், கைத்தொழில், ராஜாங்கச் சீர்திருத்தம், ஜன சமூகத் திருத்தம் முதலிய
லெளகிய விவகாரங்கள் எல்லாவற்றிலும், மனிதர் ஏறக்குறைய எல்லாத் திட்டங்களையும்
உணர்ந்து முடித்து விட்டனர். ஒரு துறை அல்லது ஓர் இலாகாவைப் பற்றி ஸ¥க்ஷ்ம
தந்திரங்களை மற்றொரு துறையில் பயிற்சி கொண்டோர் அறியாதிருக்கலாம். ஆனால், அந்த
நெறியில் தக்க பயிற்சி கொண்ட புத்திமான்களுக்கு அதனைப் பற்றிய நுட்பங்கள் முழுமையும்
ஏறக்குறைய நன்றாகத் தெரியும்.
பொதுவாகக் கூறுமிடத்தே, மனித ஜாதியார் அறிவு சம்பந்தப்பட்டமட்டில், மஹா ஸ¥க்ஷ்மமான
பரம ஸத்யங்களையெல்லாம் கண்டுபிடித்து முடித்துவிட்டனர். ஆனால், அறிவுக்குத்
தெரிந்ததை மனம் மறவாதே பயிற்சி செய்ய வலிமையற்றதாய் நிற்கிறது. அறிவு சுத்தமான
பின்னரும், சித்தசுத்தி ஏற்பட வழி இல்லாமல் இருக்கிறது.
எனவே, அறிவினால் எட்டிய உண்மைகளை மனிதர் ஒழுக்கத்திலே நடத்திக் காட்டுதல்
பெருங்கஷ்டமாக முடிந்திருக்கிறது. ஆத்ம ஞானத்தின் சம்பந்தமாகக் கவனிக்குமிடத்தே
இந்த உண்மையைத் தாயுமானவர்,
“வாசக ஞானத்தினால் வருமோஸ¤கம் பாழ்த்த
பூசலென்று போமோ புகலாய் பராபரமே”
என்ற கண்ணியில் வெளியிட்டிருக்கிறார்.
இதன் பொருள் “வெறுமனே வாக்களவாக ஏற்பட்டிருக்கும் ஞானத்தினால் ஆனந்தமெய்த
முடியவில்லையே. என் செய்வோம்? பாழ்பட்ட மனம் ஓயாமல் பூசலிட்டுக் கொண்டிருக்கிறதே.
இந்தப் பூசல் எப்போது தீரும்? கடவுளே, நீ அதனைத் தெரிவிப்பாய்” என்பதாம். இதே
உண்மையை உலக நீதி விஷயத்தில் ஏற்கும்படி திருவள்ளுவர்.
“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்” என்ற குறளால் உணர்த்துகிறார்.
இதன்பொருள்- “வாயினால் ஒரு தர்மத்தை எடுத்துச் சொல்லுதல் யாவர்க்கும் சுலபமாக
ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அந்தச் சொல்லின்படி நடத்தல் மிகவும் துர்லபம்” என்பது.
திருஷ்டாந்தமாக, ‘ஆண்களும் பெண்களும் ஸமானமான ஆத்ம இயல்பும் ஆத்ம குணங்களும்
உடையோராதலால், பெண்களை எவ்வகையிலும் இழிந்தவராக் கருதுதல் பிழை’ என்றகொள்கை
ஐரோப்பாவில் படிப்பாளிகளுக்குள்ளே மிகவும் சாதாரணமாகப் பரவியிருக்கிறது. ஆயினும்,
பெண்களுக்கு வாக்குச் சீட்டு ஸ்வந்தரம் வேண்டும் என்று கேட்டால், அதைப்
பெரும்பான்மையான ஐரோப்பிய ராஜதந்திரிகளும், பண்டிதர்களும் எதிர்த்துப் பேசுவதுடன்.
அங்ஙனம் எதிர்ப்பதற்குப் பல போலி நியாயங்களையும் காட்டவும் துணிகிறார்கள்.
“விஷ்ணு பக்தியுடையோர் எந்தக் குலத்தோர் ஆயினும் எல்லாவகையிலும் ஸமானமாகப்
போற்றுவதற்குரியர் என்பது ஸ்ரீராமானுஜாசார்யருடைய பரம சித்தாந்தம்” என்பதை
நன்குணர்ந்த தற்காலத்து வைஷ்ணவர்கள் பிராமண சூத்ரபேதங்களை மற்ற வகுப்பினரைக்
காட்டிலும் அதிகமாகப் பாராட்டுவது மாத்திரமன்றி, இன்னும் வடகலை தென்கலைச்
சண்டைகளைக்கூட விடாமல் வீண் சச்சரவுகளில் ஈடுபட்டு உழல்கின்றார்கள்.
“எல்லாச் சரீரங்களிலும் நானே ஜீவனாக இருக்கிறேன்” என்று கண்ணன் கீதையால் உணர்த்திய
உண்மையையும், “எல்லா உயிர்களினிடத்தும் தன்னையும் தன்னிடத்தே எல்லா உயிர்களையும்
காண்பவனே காட்சியுடையவன்” என்று கண்ணபிரான் அதே கீதையில் சொல்லிய கொள்கையும்
வேதோபநிஷத்துக்களின் முடிவான தீர்மானம் என்று தெரிந்த ஹிந்துக்கள், உலகத்திலுள்ள
மற்றெல்லா ஜனங்களைக் காட்டிலும், ஜாதி வேற்றுமை பாராட்டுவதில் அதிகக் கொடுமை
செலுத்துக்கிறார்கள்.
“இன்சொல் இனிதீன்றல் காண்பாள் எவன்கொலோ
வன்சொல் வழங்குவது”
என்ற குறளின்படி, ‘இனிய சொற்கள் சொல்வதினின்றும் நன்மைகள் விளைவது கண்டும் மானிடர்
ஒருவருக்கு ஒருவர் கொடுஞ் சொற்கள் வழங்குவது மடமை என்பது உலகத்தில் சாதாரண
அநுபவமுடையவர்களுக்கெல்லாம் தெரியும். அங்ஙனம் தெரிந்தும், கொடுஞ்சொற்களும்
கோபச்செயல்களும் நீங்கியவர்களை உலகத்தில் தேடிப் பார்த்தாலும் காண்பது அரிதாக
இருக்கிறது.
“மரணம் பாவத்தின் கூலி” என்று கிருஸ்தவ வேதம் சொல்வது எல்லாக் கிருஸ்தவர்களுக்கும்
தெரியும். அப்படி இருந்தும், பாவத்தை அறவே ஒழித்த கிருஸ்தவர்கள் எவரையும் காணவில்லை.
‘நாமெல்லோரும் பாவிகள்’ என்பதைப் பல்லவி போலே சொல்லிக் கொண்டு காலங்கடத்துகிறார்கள்.
இதென்ன கொடுமை! இதென்ன கொடுமை! இதென்ன கொடுமை! ஸாதாரணமாக வியாபாரம், விவசாயம்
முதலிய காரியங்களிலேகூட மனிதர் நிச்சயமாக லாபங் கிடைக்கும் என்று தெரிந்த வழிகளை
அநுசரிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்தப் பெரிய சக்தி ஹீனத்திற்கு மாற்றுக்
கண்டுபிடிக்காமல் நாம் சும்மா இருப்பது நியாயமன்று.
கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவது போல, மனித ஜாதி நன்மையை நன்றாக
உணர்ந்தும் தீமையை உதற வலிமையின்றித் தத்தளிக்கிறது.
இதற்கு என்ன நிவாரணம் செய்வோம்? தைரியந் தான் மருந்து. தற்கால அஸெளகர்யங்களையுத்
கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் மனிதர் உண்மை என்று கண்டதை நடத்தி
தீர்த்துவிடவேண்டும். அங்ஙனம் தைரியத்துடன் உண்மை நெறிபற்றி நடப்போரை மற்றவர்
புகழ்ச்சியாலும் ஸம்மானங்களாலும் ஊக்கப்படுத்த வேண்டும். கலி போதும்; வீண்
துன்பங்களும் அநாவசியக் கஷ்டங்களும் பட்டுப்பட்டு உலகம் அலுத்துப் போய்விட்டது.
வாருங்கள், மக்களே! வாருங்கள், அண்ணன் தம்பிமார்களே! ஒருவரிருவர் நேர்மை வழியில்
செல்ல முயல்வதில் பல இடர்கள் ஏற்படுகின்றன. அதனால் நேர்மை வழியில் செல்ல
விரும்புவோர்க்கெல்லாம் அதைரியம் ஏற்படுகிறது. வாருங்கள் உலகத்தீரே! கூட்டங்
கூட்டமாக நேர்மை வழியில் புகுவோம்.
ஆண் - பெண் ஸமத்வமே தர்மமென்று தெரிகிறதா? அப்படியானால், வாருங்கள்; மாதர்களை
லக்ஷக்கணக்காக விடுதலை செய்வோம். ஜாதி பேதங்கள் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்ததா?
நிற வேற்றுமைகளும் தேச வேற்றுமைகளும் உபயோகம் இல்லாதன என்று தெரிந்ததா? நல்லது
வாருங்கள். கோடிக்கணக்காக ஸமத்வ நெறியில் பாய்ந்து விடுவோம். பழைய கட்டுகளை
லக்ஷக்கணக்கான மக்கள் கூடி நின்று தகர்ப்போம். ‘அன்பே இன்பம் தரும். பகைமை அழிக்கும்’
என்று தெரிந்தோமோ? நல்லது, எழுங்கள், கோடிக்கணக்கான மானிடர் எங்கும் எப்போது, எல்லா
உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தத் தொடங்குவோம்.
பல வருஷங்களின் முன்னே தெருவழியாக ஒரு பிச்சைக்காரன் பாடிக் கொண்டு வந்தான்.
“தூங்கையிலே வாங்குகிற மூச்சு - அது
சுழிமாறிப் போனாலும் போச்சு”
இந்தப் பாட்டைக் கேட்டவுடனே எனக்கு நீண்ட யோசனை உண்டாய்விட்டது. என்னடா இது! இந்த
உடல் இத்தனை சந்தேகமாக இருக்கும்போது இவ்வுலகத்தில் நான் என்ன பெருஞ்செய்கை தொடங்கி
நிறைவேற்ற முடியும்? ஈசன் நம்மிடத்தில் அறிவை விளங்கச் செய்கிறான். அறிவே நமது
வடிவமாக அமைந்திருக்கிறான். அறிவு இன்பத்தை விரும்புகிறது. அளவில்லாத அழகும்
இன்பமும் கொண்ட உலகமொன்று நம்மோடு இருக்கிறது. எப்போதும் இவ்வுலகம் இன்பம். இந்த
உலகம் கவலையற்றதாகும். இதிலே அணுவிலும் அணுவொக்கும் சிறிய பூமண்டலத்தின் மீதுதான்
நம்மால் ஸஞ்சரிக்க முடிகிறது. இதுபோல் கணக்கில்லாத மண்டலங்கள் வானவெளியிலே
சுழல்கின்றன. அவற்றின் இயல்பையும் நாம் அறிவினாலே காண்கிறோம். அவற்றில் ஒரு
பகுதியின் வடிவங்களைக் கண்ணாலே தூரத்திலிருந்தே பார்க்கிறோம். இவ்வளவில் எங்கே
பார்த்தாலும், ஒரே அழகுமயமாக இருக்கிறது. நமது பூமண்டலத்திற்கு வான் முழுவதும் ஒரு
மேற்கட்டிபோலத் தோன்றுகிறது. இடையெல்லாம் ஒரே தெளிவான வெளி; ஸ¥ர்யன் செய்கிற ஆயிரம்
விதமான ஒளியினங்கள். மலை, காடு, நதி, கடல் அழகு.
தவிரவும், எதைத் தொட்டாலும் இன்பமும் துன்பமும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நாம்
அறிவினாலே பொருள்களின் துன்பத்தைத் தள்ளி இன்பத்தை எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர்,
குளித்தால் இன்பம்; குடித்தால் இன்பம்; தீ, குளிர் காய்ந்தால் இன்பம்; பார்த்தாலே
இன்பம்; மண், இதன் விளைவுகளிலே பெரும்பான்மை இன்பம்; இதன் தாங்குதல் இன்பம்; காற்று,
இதைத் தீண்டினால் இன்பம்; மூச்சிலே கொண்டால் இன்பம்; உயிர்களுடனே பழகினால் இன்பம்;
மனிதரின் உறவிலே அன்பு இருந்தால் இன்பக் கட்டி, பின்னும் இவ்வுலகத்தில், உண்ணுதல்
இன்பம், உழைத்தல் இன்பம், உறங்கல் இன்பம், ஆடுதல் இன்பம், கற்றல் கேட்டல், பாடுதல்,
எண்ணுதல், அறிதல் எல்லாம் இன்பந்தான்.
துன்பத்தை நீக்குதல் விரைவிலே ஈடேறவில்லை
ஆனால் இவ்வின்பங்களெல்லாம் துன்பங்களுடனே கலந்திருக்கின்றன. துன்பங்களை அறிவினால்
வெட்டி எறிந்துவிட்டு இன்பங்களை மாத்திரம் சுவைகொள்ள வேண்டுமென்று ஜீவன்
விரும்புகிறது. துன்பங்களை வெட்டி எறியத்திறமை கொண்ட அறிவும் உறுதியும் வேண்டுமானால்,
அது எளிதில் முடிகிற காரியமாகத் தோன்றவில்லை. பெரிய பெரிய கஷ்டங்கள் பட்ட பிறகுதான்.
சிறிய உண்மைகள் புலப்படுகின்றன. நம்மைச் சுற்றி இன்பக் கோட்டைகள் கட்டிக்கொள்ள
வேண்டும் என்கிறஆசை ஒவ்வொருவனுக்கும் இருக்கிறது. மஹத்தான அறிவு வேண்டும். அழியாத
நெஞ்சுறுதி வேண்டும். கல்விகள் வேண்டும். கீர்த்திகள் வேண்டும். செல்வங்கள் வேண்டும்.
சூழ்ந்திருக்கும் ஊரார், தேசத்தார், உலகத்தார் எல்லோரும் இன்பத்துடன் வாழும்படி நாம்
செய்ய வேண்டும். நல்லாசைகள் பெரிது பெரிதாக வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆசைகள்
நிறைவேறவேண்டுமானால், பலமான அடிப்படை போட்டு மெல்ல மெல்லக் கட்டிக் கொண்டு
வரவேண்டும். நிலைகொண்ட இன்பங்களை விரைவிலே உண்டாக்குதல் சாத்தியமில்லை. ஏழையாக
இருப்பவன் பெரிய செல்வனாக வேண்டுமானால், பல பல வருஷங்கள் ஆகின்றன. உலத் தொழில்களிலே
தேர்ச்சி அடைய வேண்டுமானால் அதற்குக் காலம் வேண்டும். ஆத்மஞானம் பெறுவதற்கு காலம்
வேண்டும்.
“பொறுத்தவன் பூமியாள்வான்” “பதறின காரியம் சிதறும்” இடையே குறுக்கிடும் மரணம்.
இங்ஙனம் இன்பங்களின் தேட்டத்தில் நம்மால் இயன்றவரை இடைவிடாமல் முயற்சி செய்து கொண்டு
நாம் காலத்தின் பக்குவத்துக்காகக் காத்திருக்கும்படி நேரிடுகிறது. இதனிடையே, மேற்படி
பிச்சைக்காரன் பாட்டு வாஸ்தவமாய்விட்டால் என்ன செய்வது? தூங்கையிலே வாங்குகிற மூச்சு,
அது சுழிமாறிப் போனாலும் போச்சு. என்ன ஹிம்ஸை இது? நூறு வயதுண்டு என்பதேனும் நல்ல
நிச்சயமாக இருந்தால் குற்றமில்லை. நூறு வருஷங்களில் எவ்வளவோ காரியம் முடித்து
விடலாம். ‘அடுத்த நிமிஷம் நிச்சயமில்லை’ என்று தீர்ந்து விட்டால் எதைக் கொண்டாடுவது?
இது கட்டி வாராது. எப்படியேனும், வேகத்தை உறுதிசெய்து கொள்ளவேண்டும். நமது காரியம்
முடிந்தபிறகுதான் சாவோம்; அதுவரை நாம் சாகமாட்டோம். நம் இச்சைகள், நம்முடைய
தர்மங்கள் நிறைவேறும் வரை நமக்கு மரணமில்லை.