இந்தப் போர் முழக்கத்தைக் கேட்ட வள்ளியும் கிழவனும் தெருப் பக்கம் சென்றார்கள்.
முரசு யானையும் அதைச் சுற்றிச் சில வீரர்களும் போய்க் கொண்டிருந்தார்கள். முரசும்
முரசு அடித்தவனும் அறைகூவியவனும் யானைமேல் இருந்தனர். இந்த ஊர்வலம் தெருக் கோடி
போகும்வரையில் பாட்டனும் பேத்தியும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
ஊர்வலம் தெருக்கோடியில் திரும்பியதும் கிழவன் ஒரு பெருமூச்சு விட்டுச் சொன்னான்:-
“வள்ளி உன்னைப் பொன்னனும் பகவானும் காப்பாற்றுவார்கள்! இந்த யுத்தத்தில் சேர்ந்து
வீர சொர்க்கம் அடைய என் குடும்பத்திலே வேறு யாரும் இல்லை, நான் தான் போகப் போகிறேன்”
என்றான். தெற்கு வானத்தில் திடீரென்று ஒரு நட்சத்திரம் நிலை பெயர்ந்தது: ஒரு
வினாடிநேரம் அது வேகமாய்ப் பிரயாணம் செய்தது; அடுத்த வினாடி மாயமாய் மறைந்தது.
இதைப் பார்த்த வள்ளிக்கு உடம்பு சிலிர்த்தது.
அதே சமயத்தில் அதே காட்சியைப் பொன்னனும் பார்த்து உடல் சிலிர்த்தான்.
அப்போது அவன் உறையூர் ராஜ வீதிகளின் வழியாகப் போய்க் கொண்டிருந்தான்.
பெளர்ணமிக்கு இன்னும் நாலு தினங்கள்தான் இருந்தன. சுக்கில பட்சத்துச் சந்திரன் வான
வெளியில் ராஜ ஹம்சத்தைப்போல சஞ்சரித்து வெற்றி நிலவைப் பொழிந்து கொண்டிருந்தான்.
உறையூரின் மாடமாளிகைகளெல்லாம் அந்த வெண்ணிலவில் ஒளியும் மோகனமும் பெற்ற சொப்பன
லோகம்போல காட்சியளித்தன.
“ஓடம் வண்டியில் ஏறும்; வண்டி ஓடத்தில் ஏறும்” என்று சொல்வ துண்டல்லவா? இந்தக்
காலத்தில் திருச்சிராப் பள்ளி பெரிய நகரமாயும் உறையூர் சிற்றூராயுமிருக்கிறது. அந்த
நாளிலோ உறையூர்தான் தலைநகரம்; திருச்சிராப்பள்ளி சிற்றூர். இரண்டு ஊர்களுக்கும்
நடுவில் இடைவெளியில்லாமல் கடைவீதிகளும், பலவகைத் தொழில் செய்யும் மக்கள் வாழ்ந்த
தெருக்களும் இருந்தன. சிராப்பள்ளி மலையிலிருந்து மகாராஜா இறங்கி வந்து, சேர்வதற்கு
முன்னால் பொன்னன் அரண்மனை வாசலை அடைந்துவிட விரும்பினான்.
மகாராஜா, சுவாமி தரிசனம் செய்துவிட்டு மலை உச்சியிலிருந்து இறங்கி வரும்போது வழியில்
நின்று இளவரசருக்கு என்னத்தைக் காட்டியிருப்பார் என்பது அவனுக்கு ஒருவாறு
தெரிந்திருந்தது. அங்கேதான் சோழ வம்சத்தின் அவமானச் சின்னங்கள் இருந்தன. பார்த்திப
மகாராஜாவின் தந்தை, மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் முன்னால் வாளையும் வில்லையும்
வைத்து அடிபணிந்து, விதவிதமான இரத்தினங்களையும் ஆபரணங்களையும் காணிக்கையாக ஏற்றுக்
கொள்ளும்படி வேண்டிக்கொள்ளும் காட்சி அங்கே சித்தரிக்கப்பட்டிருந்தது. அதை
நினைக்கும்போதே பொன்னனுக்கு இரத்தம் கொதித்தது. “சோழ நாடு இந்த அவமானத்தை எத்தனை
நாளைக்குச் சகித்துக் கொண்டிருப்பது? யுத்த களத்தில் பல்லவர்களின் இரத்தத்தைப்
பெருக்கி இந்த அவமானத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டாமா?” என்று எத்தனையோ முறை பொன்னன்
சிந்தித்ததுண்டு. அப்படிப் பட்ட சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டிருக்கும்போது, தான்
மட்டும் யுத்தத்துக்குப் போகாமல் வீட்டில் முக்காடிட்டுக் கொண்டிருப்பதா? இவ்விதம்
யோசித்துக் கொண்டே பொன்னன் விரைவாக நடந்து சென்றான்.
அருள்மொழித் தேவி
பொன்னனும் வள்ளியும் உறையூர்க் கோட்டை வாசலுக்கு வந்த அதே சமயத்தில், ராணி
அருண்மொழித் தேவி அரண்மனை உத்தியான வனத்துக்குள் பிரவேசித்தாள். பல்லவ தூதருக்கு
மகாராஜா கூறிய பதிலை ஏவலாளர்கள் உடனே வந்து மகாராணிக்குத் தெரிவித்தார்கள். மன்னர்
வரும் வரையில் பொழுது போக்குவதற்காக ராணி உத்தியான வனத்துக்குள் சென்றாள்.
அவ்வனத்தில் சண்பகமலர்கள் அடர்ந்து வளர்த்திருந்த ஒரு மூலைக்குப் போய் அங்கே
அமைந்திருந்த பளிங்குக்கல் மேடையில் உட்கார்ந்து கொண்டாள்.
அங்கிருந்து பார்த்தபோது மேற்குத் திசையில் சூரியன் அஸ்தமனமாய்க் கொண்டிருந்த காட்சி
அடி மரங்களின் வழியாகத் தெரிந்தது. மேல் வானம் முழுவதும் பத்தரை மாற்றுத் தங்க
விதானத்தைப்போல் தகதகவென்று பிரகாசித்தது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே தங்க
நிறத்தின் சோபை மங்கிக் கொண்டு வந்தது; அடி வானத்தில் சூரியன் மறைந்தது. சற்று
நேரத்துக்கெல்லாம் மேல் வானம் முழுவதும் ஒரே இரத்தச் சிவப்பாய் மாறிற்று. இந்தக்
காட்சி அருள்மொழித் தேவிக்கு ரண களத்தையும் அங்கே இரத்த ஆறு பெருக்கெடுத்து
ஓடுவதையும் ஞாபகப் படுத்திற்று. தேவி நடு நடுங்கிக் கண்ணை மூடிக் கொண்டாள்.
மறுபடி அவள் கண்ணைத் திறந்து பார்த்தபோது, வெள்ளி நிலவின் இன்பக் கிரணங்கள்
மரக்கிளைகளின் வழியாக எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தன. ராணியின் உள்ளத்தில் பழைய
ஞாபகங்கள் குமுறிக்கொண்டு வந்தன. பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் பார்த்திப
மன்னனுக்கு மாலையிட்டு இந்த அரண்மனைக்கு அவள் வந்தாள். அந்த நாளிலிருந்து இம்மாதிரி
வெண்ணிலவு பிரகாசித்த எத்தனையோ இரவுகளில் அவளும் பார்த்திபனும் இந்த உத்தியான
வனத்தில் கைகோத்துக் கொண்டு உலாவியதுண்டு. இந்தப் பளிங்குக்கல் மேடை மீது
உட்கார்ந்து இருவரும் நேரம் போவதே தெரியாமல் இருந்ததுண்டு. அந்த நாளில் பார்த்திபன்
சில சமயம் புல்லாங்குழல் கொண்டு வந்து இசைப்பான். அருள்மொழி மெய்மறந்து கேட்டுக்
கொண்டிருப்பாள். கண்ண பெருமாளே பார்த்திபனாக உருக்கொண்டு வந்து மணம் புரிந்ததாக
எண்ணிப் பூரிப்படைவாள். இப்படி சில காலம் வாழ்க்கையே ஓர் இன்பக் கனவாகச் சென்று
கொண்டிருந்தது.
பிறகு விக்கிரமன் பிறந்தபோது இன்ப வாழ்க்கையின் சிகரத்தை அவர்கள் அடைந்தார்கள். அதே
உத்தியான வனத்தில் அதே பளிங்குக் கல்லின் மீது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு
கொஞ்சியதெல்லாம் அருள்மொழிக்கு நினைவு வந்தது.
ஆஹா! அந்த ஆனந்தமான நாட்கள் அப்படியே நீடித்திருக்கக் கூடாதா!
ஆனால், எப்படியிருக்க முடியும்! பார்த்திபனுடைய இருதயத்தின் அடிவாரத்திலே சொல்ல
முடியாத வேதனை யொன்று பதுங்கிக் கிடந்து அவனுடைய நெஞ்சை அரித்துக் கொண்டிருக்கையில்,
அவர்களுடைய ஆனந்த வாழ்க்கை எப்படி நீடித்திருக்க முடியும்?
பார்த்திபனுடைய இந்த அந்தரங்க வேதனையை வெகு காலம் கழித்தே அருள்மொழி அறிந்தாள்.
அறிந்தது முதல் அந்த வேதனையில் அவளும் பங்கு கொண்டாள், அதற்குத் தானே காரணமோ என்று
எண்ணி எண்ணி மனம் நொந்தாள்.
ஆமாம்; அவர்களுடைய கலியாணத்தின் போதே அந்தக் காரணமும் ஏற்பட்டுவிட்டது. அருள்மொழி,
சேர வம்சத்தைச் சேர்ந்த ஒரு சிற்றரசன் மகள். அந்த நாளில் அவளைப் போல்
செளந்தரியவதியான ராஜகுமாரி இல்லையென்று தென்னாடெங்கும் பிரசித்தியாகியிருந்தது.
அவளைப் பார்த்திபனுக்கு மணம் செய்விக்க ஏற்பாடுகள் நடந்த பிறகு, காஞ்சி மகேந்
திரவர்ம சக்கரவர்த்தியிடமிருந்து சேர மன்னனுக்குத் தூதர்கள் வந்தார்கள். பட்டத்து
இளவரசர் நரசிம்மவர்மருக்கு அருள்மொழியைத் திருமணம் முடிக்க விரும்புவதாகச்
சக்கரவர்த்தி செய்தி அனுப்பியிருந்தார். அருள்மொழியின் உற்றார் உறவினருக்கெல்லாம்
இது பெரிதும் சம்மதமாகயிருந்தது. ஆனால் அருள்மொழி அதற்கு இணங்கவில்லை; பார்த்திப
சோழரையே பதியாகத் தன் மனத்தில் வரித்து விட்டதாகவும், வேறொருவரை மணக்க இசையேனென்றும்
கண்டிப்பாய்ச் சொன்னாள். மகேந்திர சக்கரவர்த்தி மிகவும் பெருந்தன்மையுள்ளவராதலால்
அதற்கு மேல் வற்புறுத்த வில்லை. இளவரசர் நரசிம்மவர்மருக்குப் பாண்டியன் மகளை மணம்
முடித்து வைத்தார்.
பார்த்திபனுக்கும் அருள்மொழிக்கும் மணம் நடந்த பிறகுதான் பார்த்திபனுக்கு மேற்கூறிய
சம்பவம் தெரிய வந்தது. அவர் சில சமயம், “நீ சாம்ராஜ்ய சக்கரவர்த்தினியாய் காஞ்சி
சிம்மாசனத்தில் வீற்றிருக்க வேண்டியவள்; அதற்கு மாறாக, இந்த உள்ளங்கை அகல சோழ
ராஜ்யத்திற்கு ராணியாயிருக்கிறாய்” என்று சொல்லுவதுண்டு. முதலில் இதை ஒரு
விளையாட்டுப் பேச்சாகவே அருள்மொழி எண்ணியிருந்தாள். நாளாக ஆக, தன் பதியினுடைய
மனத்தில் இந்த எண்ணம் மிக்க வேதனையை அளித்து வந்தது என்று தெரிந்து கொண்டாள். அதைப்
போக்குவதற்காக அவள் எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் முடியவில்லை.
விக்கிரமன் பிறந்ததிலிருந்து மகாராஜாவின் அந்தரங்க வேதனை அதிகமாகியே வந்ததாகத்
தெரிந்தது. ஒரு சமயம் அவர், “உன் வயிற்றில் பிறந்த பிள்ளை ஒரு பெரிய
சாம்ராஜ்யத்திற்குச் சக்கர வர்த்தியாயிருக்க வேண்டியவன். என்னாலல்லவா
இன்னொருவருக்குக் கப்பம் கட்டும் சிற்றரசு அவனுக்கு லபிக்கிறது!” என்பார்.
இன்னொரு சமயம், “அருள்மொழி! உன் பிள்ளைக்கு என்னால் சாம்ராஜ்யம் பட்டாபிஷேகம் செய்து
வைக்க முடியாது. ஆனால், வீரத் தந்தையின் புதல்வன் என்ற பட்டத்தை நிச்சயம் அளிப்பேன்!”
என்பார். அவருடைய வாக்கை நிறைவேற்றும் சமயம் இப்போது வந்துவிட்டது. பழைய காலத்து
வீர பத்தினிகளைப் போல் அவருடன் தானும் உயிர் விடுகிறதாயிருந்தால் பாதகமில்லை. அந்தப்
பாக்கியத்தையும் தனக்கு அளிக்க மறுக்கிறாரே? தான் வீரத் தாயாக இருந்து விக்கிரமனை
வீர மகனாக வளர்க்க வேணுமாமே? ஐயோ, அவரைப் பிரிந்த பிறகு உயிரைத்தான் தாங்க முடியுமா?
இப்படி எண்ணியபோது அருள்மொழிக்கு நெஞ்சு பிளந்துவிடும் போலிருந்தது. திடீரென்று
அழுகை பீறிக்கொண்டு வந்தது.
“ஓ!” வென்று கதறிவிட்டாள்.
“அருள்மொழி! உன்னை வீர பத்தினி என்றல்லவா நினைத்தேன்? இவ்வளவு கோழையா நீ?” என்று
கடினமான குரலில் கூறிய வார்த்தைகளைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
பார்த்திப மகாராஜா அங்கு நின்றார். உடனே, அவருடைய அழுகை நின்றது. கண்ணீரும் வரண்டு
விட்டது.
“வா! அரண்மனைக்குப் போகலாம்! அழுவதற்கும் சமாதானப் படுத்துவதற்கு இப்போது நேரமில்லை”
என்றார் மகாராஜா.
இருவரும் கைகோத்துக் கொண்டு வாய் பேசாமல் அரண்மனைக்குள் போனார்கள்.
பார்த்திபனும் அருள்மொழியும் அரண்மனைக்குள் பிரவேசித்து, பூஜாக்கிரஹத்துக்கு
வந்தபோது தீபாராதனை நடக்கும் சமயமாயி ருந்தது. பூஜாக்கிரஹத்தில் சிவலிங்கம்
பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இடது பக்கத்தில் பார்வதி தேவியின் அற்புதச் சிலை
ஒன்று இருந்தது. தேவியின் இரு புறத்திலும் விநாயகரும் முருகக் கடவுளும்
வீற்றிருந்தார்கள். இன்னொரு பக்கத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேதரான மகா விஷ்ணு தரிசனம்
தந்தார். எல்லா விக்கிரங்களும் சண்பகம், பன்னீர், பாரிஜாதம் முதலிய மலர்களால்
அலங்கரிக் கப்பட்டிருந்தன.
தெய்வ சந்நிதியில் இளவரசர் விக்கிரமன், கைகூப்பிய வண்ணம் நின்று ஆராதனையைப்
பார்த்துக் கொண்டிருந்தார்.
அர்ச்சகர் தீபாரதனை செய்து மூவருக்கும் பிரஸாதம் கொடுத்து விட்டு வெளியே சென்றார்.
விக்கி ரமன் மகா ராஜாவைப் பார்த்து, “அப்பா! சித்திர மண்டபத்துக்குப் போகலாம்
என்aர்களே?” என்று கேட்டான்.
“இதோ நான் வருகிறேன்; விக்கிரமா! நீ முன்னால் போ!” என்றார் மகாராஜா.
விக்கிரமன் வெளியே சென்றதும், மகாவிஷ்ணுவின் பாதத்தினடியில் வைத்திருந்த நீள
வாட்டான மரப் பெட்டியை மகாராஜா சுட்டிக் காட்டிச் சொன்னார்:-
“தேவி! அந்தப் பெட்டிக்குள்ளே என்ன இருக்கிறது என்று என்னை நீ பல தடவை
கேட்டிருக்கிறாய். நானும் ‘காலம் வரும்போது சொல்லுகிறேன்!’ என்று சொல்லி
வந்திருக்கிறேன். சொல்ல வேண்டிய காலம் இப்போது வந்து விட்டது. சோழ வம்சத்தின்
புராதன பொக்கிஷம் இந்தப் பெட்டிக்குள்ளே இருக்கிறது. இதோ திறந்து காட்டுகிறேன், பார்”
இவ்விதம் சொல்லிக் கொண்டே மகாராஜா அந்த மரப்பெட்டியைத் திறந்தார். பெட்டிக்குள்ளே
பளபளவென்று ஜொலித்த ஓர் உடைவாளும் ஓர் ஓலைச்சுவடியும் காணப்பட்டன. உடைவாளின் பிடி
தங்கத்தினாலானது. இரத்தினங்கள் இழைத்தது, வாளும் எண்ணெய் பூசிக் கூர்மை யாய்த்
தீட்டி வைத்திருந்தது. ஆகவே பிடியும் வாளும் ஒன்றோடொன்று போட்டியிட்டு ஒளி வீசின.
இதற்கு மாறாக, ஓலைச் சுவடியோ மிகப் பழமையான தாய்க் கருநிறமா யிருந்தது.
பார்த்திபன் சொன்னார்:-
“தேவி! இந்த உடைவாள் சோழ வம்சத்திலே முற்காலத்திலே பிரசித்தி பெற்றிருந்த
சக்கரவர்த்திகளின் காலத்திலிருந்து வந்தது. கரிகால் வளவனும் நெடுமுடிக்கிள்ளியும்
இந்த உடைவாளைத் தரித்த உலகத்தை ஆண்டார்கள். ஓலைச்சுவடியில் உள்ளது நமது தமிழகத்தின்
தெய்வப் புலவர் அருளிய திருக்குறள். அந்த
உடைவாளும், குறள் நூலும்தான் சோழர் குலத்தின் புராதன பொக்கிஷங்கள். இவற்றை நீ
வைத்துக் காப்பாற்றி விக்கிரமனுக்கு வயது வரும்போது அவனிடம் சேர்ப்பிக்க வேண்டும்.
அருள் மொழி! இந்தப் புராதன உடைவாளை என் தகப்பனார் அணிந்திருந்தார்; ஆனால் நான்
அணியவில்லை. கப்பங்கட்டும் சிற்றரசனாயிருந்து கொண்டு கரிகால்வளவனும் நெடுமுடிக்
கிள்ளியும் அணிந்த உடைவாளை அணிய நான் விரும்பவில்லை. விக்கரமனிடம் நீ இதையும் சொல்ல
வேண்டும். எப்போது அவன் ஒரு சின்னஞ்சிறு பிரதேசத்துக்காவது சுதந்திர மன்னனாகிறானோ,
அப்போதுதான் இந்த உடை வாளைத் தரிக்கலாமென்று கூறவேண்டும். அக் காலத்தில் இந்த
உடைவாளைத் தரித்து, இந்தத் தெய்வத்திருக்குறளில் சொல்லியிருக்கும் வண்ணம் இராஜ்ய
பாரம் செய்யும்படியும் கூற வேண்டும். இந்தப் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன்.
அருள்மொழி! இதை நிறைவேற்றுவதாகத் தெய்வ சன்னிதானத்தில் எனக்கு வாக்குறுதி அளிக்க
வேண்டும். விக்கிரமனை வீரமகனாக நீ வளர்க்க வேண்டும்.”
இதைக் கேட்ட அருள்மொழித் தேவி கண்களில் நீர் ததும்ப, விம்முகின்ற குரலில்,
“அப்படியே செய்கிறேன்; மகா ராஜா!’ என்றாள். பார்த்திபன் அப்போது ‘இறைவன் அதற்கு
வேண்டிய தைரியத்தை உனக்கு அளிக்கட்டும்!” என்று சொல்லி, அருள்மொழியைத் தழுவிக்
கொண்டு அவளுடைய கண்களில் பெருகிய கண்ணீரைத் தம்முடைய மேலாடையால் துடைத்தார்.
சித்திர மண்டபம்
உறையூர்த் தெற்கு ராஜவீதியிலிருந்த சித்திர மண்டபம் அந்தக் காலத்தில் தென்னாடெங்கும்
புகழ் வாய்ந்தி ருந்தது. காஞ்சியிலுள்ள மகேந்திர சக்கரவர்த்தியின் பேர் பெற்ற
சித்திர மண்டபம் கூட உறையூர்ச் சித்திர மண்டபத்துக்கு நிகராகாது என்று ஜனங்கள்
பேசுவது சகஜமாயிருந்தது. பார்த்திப மகாராஜாவும் இளவரசர் விக்கிரமனும் வெண்புரவிகளின்
மீதேறி இந்தச் சித்திர மண்டபத்தின் வாசலை அடைந்த அதே சமயத்தில். அங்கே படகோட்டி
பொன்னனும் வந்து சேர்ந்தான். இந்த அகாலவேளையில் மகாராஜாவைப் பார்க்க முடியுமோ என்னவோ
என்ற கவலையுடன் வந்த பொன்னன் திடீரென்று மகாராஜாவைப் பார்த்ததும் இன்னது சொல்வதென்று
தெரியாமல் திகைத்தான்.
“மகாராஜா...” என்னும்போதே அவனுக்கு நாக்குழறியது. அந்தக் குழறிய குரலைக் கேட்டு
மகாராஜாவும் இளவரசரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள்.
“பொன்னா! நீ எங்கே வந்தாய்?” என்றார் மகாராஜா. பொன்னனின் மெளனத்தைக் கண்டு ஒருவாறு
அவன் வந்த காரணத்தை ஊகித்தவராய், குதிரை மீதிருந்து கீழிறங்கினார். இளவரசர்
விக்கிரமனும் லாகமாய்க் குதிரை மீதிருந்து குதித்தார்.
“பொன்னா! இந்தத் தீவர்த்தியை வாங்கிக் கொள்!” என்றார் மகாரராஜா. அருகே தீவர்த்தி
வைத்து கொண்டு நின்ற ஏவலாளனிடமிருந்து பொன்னன் தீர்வத்தியை வாங்கிக் கொண்டான். அந்த
வேளையில் மகாராஜா எதற்காக சித்திர மண்டபத்துக்கு வந்திருக்கிறார்; எதற்காகத் தன்னை
தீவர்த்தியுடன் பின்தொடரச் சொல்லுகிறார் என்பதொன்றும் அவனுக்குப் புரியாவிட்டாலும்,
மகாராஜா தன்னைத் திரும்பிப் போகச் சொல்லாமல் தம்முடன் வரும்படி சொன்னதில் அளவிலாத
குதூகலமுண்டாயிற்று. மகாராஜாவும் இளவரசரும் முன்செல்ல, பொன்னன் தீவர்த்தியைத்
தூக்கிப் பிடித்துக் கொண்டு சித்திர மண்டபத்துக்குள் புகுந்தான்.
அந்தச் சித்திர மண்டபத்துக்குள் முதல் முதலாகப் பிரவேசிக்கிறவர்களுக்கு, ‘நமக்குள்ள
இரண்டு கண் போதாது; இரண்டாயிரம் கண் இருந்தால்தான் இங்கேயுள்ள சித்திரங்களை ஒருவாறு
பார்த்துத் திருப்தியடையலாம்’என்று தோன்றும். அந்த விஸ்தாரமான மண்டபத்தின் விசாலமான
சுவர்களின் விதவிதமான வர்ணங்களில் பலவகைச் சித்திரங்கள் தீட்டப் பெற்றிருந்தன. அந்த
மண்டபத்தைத் தாங்கிய சிற்ப வேலைப்பாடுள்ள தூண்களிலும் சித்திரங்கள் காணப்பட்டன. மேல்
விமானத்தின் உட்புறங்களையும் சித்திரங்கள் அலங்கரித்தன.
ஒரு சுவரில் ததீசி
முனிவரிடம் இந்திரன் வச்சிராயுதத்தைப் பெறுவது, இந்திரன் விருத்திரா சுரனைச்
சம்ஹரிப்பது, பிறகு இந்திரலோகம் வருவது, தேவர்களும் தேவ மாதர்களும் இந்திரனை
எதிர்கொண்டு வரவேற்பது, இந்திரனுடைய சபையில் தேவமாதர்கள் நடனம் புரிவது முதலிய
காட்சிகளைச் சித்தரித்திருந்தது. இன்னொரு பக்கத்தில், திருப்பாற்கடலில் மந்திரகிரியை
மத்தாகவும் வாஸ¤கியைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் ஒரு பக்கமும் அசுரர்கள் ஒரு
பக்கமும் நின்று கடையும் பிரம்மாண்டமான காட்சியைச் சித்தரித்திருந்தது.
அடுத்தாற்போல், பரம சிவனுடைய தவத்தைக் கலைப்பதற்குக் காமதேவன் மலர்க்கணை தொடுப்பது
முதல் குமரப்பெருமான் ஜனனம் வரையிலும் உள்ள காட்சிகள் காணப்பட்டன. இந்த உருவங்கள்
எல்லாம் கேவலம் உயிரற்ற சித்திரங்களாகத் தோன்றவில்லை. கால், கை, முகம் இவற்றின்
சரியான அளவு எடுத்துச் சாமுத்திரிகா லட்சணத்துக்கு இணங்க எழுதப்பட்டிருக்கவுமில்லை.
ஆனாலும், அந்த உருவங்களின் ஒவ்வொரு அவயத்திலும் காணப்பட்ட நெளிவும், முகத்தில்
பொலிந்த பாவமும், தத்ரூபமாய் அந்தத் தேவர்களின் முன்னால் நாம் நிற்கிறோமென்னும்
மயக்கத்தை உண்டாக்கின.
பிரதி மாதம் மூன்று தினங்கள் இந்தச் சித்திர மண்டபம் பிரஜைகள் எல்லாரும்
பார்ப்பதற்கென்று திறந்து வைக்கப்படுவதுண்டு. அவ்வாறு திறந்திருந்த நாட்களில்
பொன்னன் இரண்டு மூன்று தடவை இந்தச் சித்திரங்களைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறான்.
இப்போதும் அந்தச் சித்திரங்கள் அவனுடைய கண்ணையும் கருத்தையும் கவரத்தான் செய்தன.
ஆனாலும் இன்று அவற்றை நின்று பார்க்க முடியாதபடி மகாராஜாவும் இளவரசரும் முன்னால்
விரைந்து போய்க் கொண்டிருந்த படியால், பொன்னனும் அவர்களைப் பின்தொடர்ந்து விரைந்து
சென்றான்.
சித்திர மண்டபத்தின் இரண்டு மூன்று கட்டுக்களையும் தாண்டிச் சென்று கடைசியாக,
பூட்டிய கதவையுடைய ஒரு வாசற்படியண்டை மகாராஜா நின்றார். முன்னொரு தடவை பொன்னன் இதே
இடத்தில் நின்று இந்த வாசற்படிக்கு உட்புறத்தில் என்ன இருக்குமோ என்று
யோசித்திருக்கிறான். இந்தக் கதவைத் திறக்கக் கூடாதென்பது மகாராஜாவின் கட்டளை என்று
காவலாளர்கள் அப்போது தெரிவித்ததுண்டு. மகாராஜா இப்போது அந்தக் கதவண்டை வந்து நின்று,
தம் கையிலிருந்த சாவியினால் பூட்டைத் திறக்கத் தொடங்கியதும் பொன்னனுடைய ஆவல் அளவு
கடந்ததாயிற்று. “இதனுள்ளே ஏதோ பெரிய அதிசயம் இருக்கிறது. அதை நாம் இப்போது பார்க்கப்
போகிறோம்” என்று எண்ணியபோது அவனுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.
கதவு திறந்ததும் “பொன்னா!நீ முதலில் உள்ளே போ! தீவர்த்தியை நன்றாய்த் தூக்கிப் பிடி!
சுவருக்கு ரொம்பச் சமீபமாய்க் கொண்டு போகாதே! தீவர்த்தி புகையினால் சித்திரங்கள்
கெட்டுப் போகும்” என்றார் மகாராஜா.
பொன்னன் உள்ளே போய் தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தான். அங்கிருந்த சுவர்களிலும்
சித்திரங்கள் தான் தீட்டியிருந்தன. ஆனால், அவை என்ன சித்திரங்கள், எதைக்
குறிப்பிடுகின்றன என்பது அவனுக்குத் தெரியவில்லை.
பொன்னனுக்குப் பின்னார், விக்கிரமனுடைய கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு பார்த்திப
மகாராஜா அந்த இருள் சூழ்ந்த மண்டபத்துக்குள்ளே புகுந்தார்.
“குழந்தாய்! பூட்டி வைத்திருக்கும் இந்த மண்டபத்துக்குள்ளே என்ன இருக்கிறது என்று
பல தடவை என்னைக் கேட்டிருக்கிறாயே! எனக்கு இன்னும் கொஞ்சம் வயதான பிறகு இந்தச்
சித்திரங்களைக் காட்டவேணுமென்றிருந்தேன். ஆனால் இப்போதே காட்ட வேண்டிய அவசியம்
நேர்ந்திருக்கிறது. விக்கிரமா!