புத் 65 இல. 08

நந்தன வருடம் மாசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 12

SUNDAY FEBRUARY 24 2013

 

 
தன் குழந்தையை துஷ்பிரயோகம் செய்த

தன் குழந்தையை துஷ்பிரயோகம் செய்த
கொடிய கணவனை நஞ்சூட்டி கொலை செய்த தாய்

நாலா பக்கமும் சுவர்களால் அடைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலையின் சிறைக்கூடத்திலிருந்து அவளது சிரிப்புச் சத்தம் ஒலிக்கிறது. கவர்ச்சிகரமான உடல் அழகைக் கொண்ட அவள் தனிமையைப் போக்குவதற்கு ஏதோ முணுமுணுக்கின்றாள். சிறைக்கூடம் என்பது அவளுக்குப் புதிய இடமல்ல. அவள் எதுவித அச்சமும் பயமுமின்றி தமது கடந்தகால அனுபவத்தை பரிமாறுகிறாள்.

குருநாகல் மாவட்டத்தில் பிறந்த சோமா கவர்ச்சிகரமான இரண்டு கண்களைக் கொண்டுள்ளார். அவளது பார்வையால் எவரையும் மடக்கிவிடும் அளவுக்கு அக்கண்கள் ஒளிர்கின்றன. ஒருமுறை பார்த்தவர் தன்னை அறியாமலே மறுபடியும் பார்க்கும் அளவிற்கு அவள் அழகான தோற்றமுடையவள். ஐம்பது வயதில் சோமா இப்படி அழகென்றால் அவளது இளமையைப் பற்றி எவ்வாறு வர்ணிப்பது.

அவளது வாழ்நாளிலே அவள் புரிந்த குற்றங்களுக்காக சட்டத்தின் முந்நிறுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம். எனினும் அவை அனைத்திலிருந் தும் அவள் தந்திரமான முறையில் தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார். எனினும் வெளிநாட்டவர் களுடன் தொடர்புடைய 175 வழக்குகள் அவளின் பெயரில் பதிவாகியுள்ளன. எனவே அவளிடமிருந்து கைவிரல் அடையாளம் பெறப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

2012 ஆண்டின் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி இலங்கையின் நம்பர் 01 ஐஆர்சீ பிட்பொகட் திருட்டு சோமா எனும் பெயர் காவல் துறையினரால் சூட்டப்பட்டது. அவள் மிகவும் நுட்பமான முறையில் எவரிடமும் சிக்காது திருடி வந்தமையே அதற்குக் காரணமாகும்.

ஒருமுறை இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட மூன்று கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களை விழுங்கும் அவள், மற்றொரு சந்தர்ப்பத்தில் வெளிநாட்டவர் ஒருவரை ஏமாற்றி அவரிடமிருந்த 2-3 கோடி ரூபா தொகையினைக் கொள்ளையடித்துள்ளார். எனினும் அவளால் திருடப்பட்ட எதனையும் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. அதற்கான பின்னணி அவள் தமது திருட்டுச் சம்பவங்களுடன் யாரையும் சேர்த்துக் கொள்ளாமையாகும். அவள் தனி ஒருவராக இருந்தே மேற்படி திருட்டுச் சம்பவங்கள் அனைத்தையும் மேற்கொண்டுள்ளாள்.

அவ்வாறே சோமா ஒரு சிறந்த முச்சக்கர வண்டி செலுத்துனர். அவள் ஐந்து தேசிய அடையாள அட்டைகளையும் பல வங்கிக் கணக்குகளையும் வைத்திருக்கின்றமை பற்றி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவள் தமது கடந்த கால நிகழ்வுகளை பின்வருமாறு எடுத்துரைக்கிறாள்.

குருநாகல் மாவட்டத்தின் பொல்பித்திகம எனும் கிராமத்தில் பிறந்த நான் அவிசாவளையில் வசித்து வருகின்றேன். எனது குடும்பத்தில் என்னுடன் மொத்தம் 13 பேர் நான் சிறுவயதிலேயே அதாவது 13 வயதில் பாலித்த என்பவருடன் காதல் தொடர்பு வைத்து பின்னர் தாய் உட்பட குடும்பத்தினர் அனைவரும் வேண்டாமென்று கூறிய போதிலும் அதையெல்லாம் தட்டிக் கழித்துவிட்டு பாலித்தவுடன் ஓடி வந்துவிட்டேன். அதன் பின்னர் நாங்கள் இருவரும் கொழும்பில் வசித்து வந்தோம். பாலித்த என்னுடன் அதிக அன்பு கொண்டிருந்தார். என்னை நன்றாகக் கவனித்தார்.

பாலித்த துறைமுக அதிகார சபையில் வேலை பார்த்தார். அவருக்குக் கிடைத்த துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான விடுதியில் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். எனினும் எனக்கு அப்போது வெளி அறிவு அவ்வளவு கிடையாது. 13 வயது சிறுமியாக இருந்தபடியால் எனக்கு அவ்வளவு விளக்கமில்லை.

எனக்கு திருமணம் செய்து கொள்ளவும் வயது போதாது. இந்நிலையில் காலப்போக்கில் எனக்கு மூன்று பெண் குழந்தைகள் கிடைத்தன. எமக்கு திருமணமான போதிலும் அக்குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் அமைத்தோம். திருமணமானவர்கள் என்றே அதில் பதிந்தோம். பின்னர் பாலித்தவிற்கு கவலை ஏற்பட்டு போலி வயதைக் குறிப்பிட்டு என்னை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் எனக்கு ஒரு ஆண் குழந்தை கிடைத்தது. துரதிர்ஷ்டமோ என்னவோ அதன் பின் எமது வாழ்க்கையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. பாலித்த தினமும் மாலையில் மது அருந்தியவனாகவே வீட்டை வந்தடையத் தொடங்கினார். நாளுக்கு நாள் வீட்டிலே பொருளாதார நெருக்கடி அதிகரித்துக்கொண்டே வந்தது.

இவ்வாறு காலம் கடக்க பாலித்த துறைமுக அதிகார சபையில் பணியாற்றும் பெண் ஒருத்தியுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டான். காலப் போக்கில் அப்பிரச்சினை தலைதூக்க எனக்கு எனது அம்மாவின் வீட்டிற்கும் அடிக்கடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் வீடு வீடாக வேலைக்குச் சென்று அதிலிருந்து கிடைக்கும் சிறிய தொகையை வைத்தே எனது பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒருநாள் நான் அவ்வாறு வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் போது எனது இளம் மகள் உடம்பெல்லாம் இரத்தம் படிந்தவளாக காட்சியளித்தாள். அப்பா என்னுடன் தகாதவாறு நடந்து கொண்டார் என்று அழத்தொடங்கினாள். நன்றாக மதுவருத்தியிருந்த பாலித்த தனது மகளைக் கூட இனங்கான முடியாதவாறு காட்சியளித்தான். அதன் பின்னர் நான் மகளை நன்றாக கழுவி டாக்டரிடம் அழைத்துச் சென்றேன். டாக்டர் அவளது காயத்திற்கு தையல் போட்டார். அப்போது அவளுக்கு வயது நான்கு. அவள் டாக்டரிடம் புலம்பியதை ஒரு தாயாக என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனது உள்ளம் இயங்காத நிலையில் ஒரு தீர்மானத்துடன் வீடு திரும்பினேன். மகளுக்கு நடந்த சம்பவத்தை நான் இதுவரையில் எவரிடமும் கூறியதில்லை. எனது தாய்க்குக் கூட இன்றுவரை தெரியாது.

மறுநாள் பொழுது விடிந்தது. பாலித்தவும் இரவு நடந்ததை மறந்தவனாக வழமைபோல் வேலைக்கு சென்றான். அன்றும் மாலை அவன் குடித்துவிட்டு வீடு வருவான் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நானும் ஆயத்தமாக இருந்தேன். நான் நினைத்தவாறே அந்திநேரம் பாலித்த வீட்டிற்கு வந்தான். அவன் குடிக்கும் மதுபானத்துடன் நான் நஞ்சை கலந்தேன். பின்னர் சிறிது நேரத்தில் அவனது வாயிலிருந்து நுரைகக்கியவாறு கீழே விழுந்து கிடந்தான். அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற அவனது தாய் பாலித்தவின் கழுத்தை நசுக்கி நான் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார். எனினும் பாலித்தவின் உயிர் பிரிவதற்கு முன்னர் மருத்துவமனை பொலிஸாருக்கு அவன் அளித்த வாக்குமூலத்தில் அன்றைய தினத்தில் நான்கு ஐந்து இடங்களில் மது அருந்தியதாக கூறியிருந்தான். அவனது மரண விசாரணை அறிக்கையில் அதிகம் மது அருந்தியதால் அதில் நஞ்சு கலந்து மரணித்ததாகக் கூறப்பட்டிருந்தது. அதன்படி பாலித்தவின் வாக்குமூலமும் மரண விசாரணை அறிக்கையும் எனக்கு சாதகமாக அமைந்தது.

எனது நான்கு பிள்ளைகளினதும் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதற்காகவே நான் அனைத்து தவறுகளையும் செய்தேன். அதன்படியே நான் விலைமாது தொழிலை தேர்ந்தெடுத்தேன். தையல் வேலை செய்தோ, சாப்பாடு விற்றோ எனது பிள்ளைகள் நால்வரையும் காப்பாற்ற முடியாது என்பதை நான் நன்கு உணர்ந்து வைத்திருந்தேன். அதற்காகவே அத்தொழிலை நான் தேர்ந்தேடுத்தேன். எனினும் நான் ஒரு விலைமாதுவாக காட்சியளித்தாலும் இது வரை எனது உடம்பை விற்றது கிடையாது. எனது ஒரே இலக்கு விலைமாதுபோல் காட்சியளித்து பணம் படைத்தவர்களை மயங்கவைத்து அவர்களிடம் பிட்பக்கட் அடிப்பதாகும். அவ்வாறு நான் அதிகமான வெள்ளைக்காரர்களை எனது வலையில் சிக்கவைத்துள்ளேன். நான் எனது முச்சக்கரவண்டியில் அவர்களை அழைத்துச் சென்று எனது வலையில் சிக்கிய பின் தந்திரமான முறையில் பணப்பையைச் சுத்தப்படுத்துவேன்.

ஒருநாள் கொழும்பு கோட்டையில் வைத்து வெள்ளைக்காரன் ஒருவனின் பக்கெட்டிலிருந்த இரண்டு மாணிக்கக் கற்களைத் திருடினேன்.

அவன் என்மீது சந்தேகம் கொண்டு கோட்டை பொலிஸ்நிலையத்திற்கு என்னை அழைத்துச் சென்றான். நான் பொலிஸாரிடம் சிக்குவேன் என்பதை உணர்ந்தேன். உடனே அந்த இரண்டு கற்களையும் விழுக்கி விட்டேன். அப்போது பரீட்சிக்கும் இயந்திரம் ஏதும் இருக்கவில்லை. பொலிஸார் என்னை நன்றாக பரீட்சித்தனர் ஏதும் என்னிடம் இல்லாததை அறிந்த அவர்கள் அந்த வெள்ளைக்காரனுக்கு நன்கு ஏசிவிட்டு என்னை விடுவித்தனர். நான் வீடு சென்று மலம் கழித்துவிட்டு மலத்துடன் வந்த இரண்டு கற்களையும் நன்கு சுத்தம் செய்து விற்றேன். அதன் பெறுமதி என்ன தெரியுமா? இரண்டு கோடி ரூபா.

அதன் முலம் கிடைத் பணத்தை வைத்து எனது பிள்ளைகளைப் படிக்க வைத்தேன். வீடு வாங்கினேன். வாகனங்கள் எடுத்தேன். தங்க ஆபரணங்களை வாங்கினேன். சுகபோகமாக வாழ்க்கை நடாத்தினேன். எனது இரண்டு மகள்மார்களும் இப்போது பட்டதாரிகள்; மகன் புகையிரத நடத்துநர்.

எனது நான்கு பிள்ளைகளையும் நல்ல இடங்களில் திருமணம் செய்து வைத்தேன். அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அதாவது வீடுவாசல், வாகனம், ஆபரணங்கள் அனைத்தும் பெற்றுக்கொடுத்தேன்.

அதேபோன்று மற்றுமொரு மறக்க முடியாத சம்பவமும் எனக்கு நினைவில் வருகிறது. பேராதனை பிரதேசத்தில் ஒரு வீட்டை நான் தனியே கொள்ளையடித்தேன். அதற்காக நான் 24 மணி நேரம் கண்தூங்காது விழித்திருந்து உரிய சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தேன். வீட்டில் இருந்தவர்களை மயக்கி அந்த வீட்டை நான் கொள்ளையடித்தேன். அந்த வீடும் ஒரு வெள்ளைக்காரனுக்கு சொந்தமானது. அவன் ஒரு கரடிபொம்மையில் 3 கோடி டொலர் பெறுமதியான பணமும் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களையும் மறைத்து வைத்திருற்தான். அவை அனைத்தையும் சுருட்டிவிட்டு நான் தப்பித்துக்கொண்டேன். அதற்கு எந்தவொரு காட்சியும் இருக்கவில்லை.

மேலும் சிங்கள கோடீஸ்வரர் ஒருவனுடன் தொடர்புவைத்து அவன் அவரது தந்தையின் வீட்டிற்குச் சென்று 30 இலட்சம் ரூபா கொள்ளையடித்தேன். இந்த அனைத்து கொள்ளைகளையும் நான் ஒரு விலைமாதுவாக காட்சியளித்து அவர்களை மயங்க வைத்தே மேற்கொண்டேன்.

இவ்வாறு என்னிடம் சிக்கிய வெள்ளைக்காரர்களின் எண்ணிக்கையோ ஏராளம். தற்போது நான் இந்த தொழிலை செய்வதில்லை. காரணம் எனக்கு இருப்பதற்கு நல்ல வீடொன்று உள்ளது. வாகனங்கள் உள்ளன. தேவையான அளவு பணம் உள்ளது. நான் செய்த வேலை மோசமானாலும் பணமற்ற அப்பாவிகளிடம் நான் ஒருபோதும் திருடியதில்லை. நான் ஏமாற்றியவர்கள் எல்லாம் பணம் படைத்த, அடுத்தவன் மனைவியை நாடிச்செல்லும் காட்டுமிராண்டிகளிடம்தான். எனது பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக நான் செய்த தவறுகளுக்கு கடவுள் என்னை மன்னிப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. எனது பிள்ளைகளைப் பற்றிய எந்தவொரு தகவலையும் பொலிஸாரிடமோ அல்லது நீதிமன்றத்திலோ நான் குறிப்பிட்டது கிடையாது. நான் குவைட் நாட்டில் தொழில்புரிவதாகவே எனது பிள்ளைகள் நம்பிக்கைகொண்டிருந்தனர்.

இந்நிலையில் எனக்கு ஒக்டோபர் மாதத்தில் விடுதலை கிடைக்குமென எதிர்பார்க்கிறேன். அவ்வாறு நான் விடுவிக்கப்பட்டால் கொள்ளுப்பிட்டி சலூன் ஒன்றிற்கு சென்று அழகுபடுத்திக்கொண்டு அதன் பின்னர் காகில்ஸ் பூட் சிட்டிக்குச் சென்று 50,000 பெறுமதியான டொபி, சாக்லட் வாங்கிக்கொண்டு வெளிநாட்டிலிருந்து வந்ததைப் போன்று வீடு செல்வேன். நான் செய்தவை எல்லாம் எனது பிள்ளைகளுக்காகவே.

தற்போது நான் மரணித்தாலும் பரவாயில்லை. எனது உள்ளம் அமைதியாகவும், நிம்மதியாகவும் காணப்படுகின்றது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.