மொழி மற்றும் எழுத்துப் பேதங்களற்ற நுட்பமான கலையென வர்ணிக்கப்படும் ஆயிரம்
வார்த்தைகள் கொண்டு விளக்க முடியாத விடயமொன்றை ஒரே வினாடியில் விளக்கும்
தன்மைமிக்கதான கேலிச் சித்திரங்கள் 1865ம் ஆண்டளவில் சமூக மறுமலர்ச்சிக் காலத்தில்
தோற்றம் பெற்றவையாக கருதப்படுகின்றது. இதற்கு முன்னர் இவை
கோட்டுச்சித்திரங்களெனப்பட்டன. இன்று கேலிச் சித்திரங்கள் பிரபலமான ஒருகலை
வடிவமாகியுள்ளது. பத்திரிகை, சஞ்சிகை, திரைப்படம், தொலைக்காட்சி என்பவற்றில்
பேராதிக்கம் செலுத்துகின்றன.
அரசியல், சமூகம், தனிநபர் நடத்தைகள், குணம் எண்ணங்கள் என்பவற்றைப் பிரதிபலித்த
கேலிச்சித்திரங்கள் கதை வடிவங்களாகவும் விகடத் துணுக்குகளாகவும் வளர்ந்தது
மட்டுமன்றி விளம்பரங்களுக்கும் பெரும் பங்களிப்பாற்றுகின்றன.
16ஆம் நூற்றாண்டின் ஜெர்மனியரான
ஆகஸ்தினினா கரிக்சி என்பார் கரிக்கச்சசர் எனும் கோட்டுச் சித்திரக் கலையில் புகழ்
பெற்றவராகத் திகழ்ந்தார். இங்கிலாந்து இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற
நாடுகளிலும் இக்கோட்டுச் சித்திரங்கள் வளர்ச்சிபெற்றன.
இக்கோட்டுச் சித்திரங்கள்
19ம் நூற்றாண்டில் கேலிச் சித்திரங்களாக மாறின. இவை நகைச்சுவை உணர்வையும்
சிந்திக்கும் கருத்துக்களையும் வழங்கின. காலப்போக்கில் இச் சித்திரங்கள் அசைவுற்று
உயிரோட்டங்கொண்டன. இதனை வால்ற்டிஸ்னி என்பவர் அறிமுகப்படுத்தினார். குறித்த
ஒருகருத்தை பொதுமக்களுக்கு தெளிவுறுத்தும் ஒரு சிறந்தவூடகமாக உலகில் கேலிச்
சித்திரங்கள் பரிணமிக்கின்றன.
கருவூலமொன்றை சிறு படத்தின் மூலம் மக்கள் மனதில் ஆழ அகலமாக பதியத்தக்க முறையில்
அவதானமாக இச்சித்தரங்கள் அமைகின்றன. அரசியல் சம்பந்தமான சித்திரங்களே ஜனரஞ்சகமாகின.
உள்ளத்தில் உதிக்கும் உணர்வெண்ணங்களை உருவகப்படுத்துவதாக கேலிச்சித்திரங்கள்
அமைகின்றன.
ஆங்கில சாம்ராஜ்யத்திற்கு எதிராக அமெரிக்காவின் சுதந்திரப் போராட்டம் உச்ச நிலையில்
இருந்தவேளை அப்போராட்டத்தை ஜோர்ஜ் வாசிங்டன் தலைமையில் அமெரிக்கர் முன்னெடுத்த
போதும், அமெரிக்க குடியேற்றவாசிகள் தாம் குடியேறிய பிரதேசங்களில் தத்தமது
பிரதேசங்களுக்காக சண்டையிட்டுக் கொண்டமை சுதந்திரப்போராட்டத்தை நலிவடையச் செய்தது.
அன்று அமெரிக்கா எட்டுப்பிராந்தியங்களாகப் பிரிந்து தம்மிடையே ஒற்றுமையின்றி
செயற்பட்டமையே அமெரிக்கா சுதந்திரப்போராட்டத்தில் ஜோர்ஜ் வாசிங்டனுடன் இணைந்து
செயற்பட்டவரும் அரசியல் சாணக்கியமிக்கவருமான பென்ஜமின் பிராங்களின் 1754ம் ஆண்டு மே
மாதம் 9ம் திகதி பத்திரிகைகளில் வெளியிட்ட “ஒன்றிணைவோம் அல்லது மடிவோம்” எனும்
கேலிச்சித்திரமே உலகின் முதலாவது அரசியல் சார்பான கேலிச்சித்திரமாகக்
கொள்ளப்படுகிறது.
அன்றைய குடியேற்ற நாடான அமெரிக்காவை ஒரு சர்ப்பமாக சித்தரித்து
அதனை எட்டுத் துண்டங்களாக துண்டாடப்பட்டு இருப்பதுபோல உணர்த்தி அமெரிக்க சுதந்திரப்
போராட்டம் ஒரு திருப்பு முனையாக அமைய வழிகோலினார். ஒன்றிணைவோம் அல்லது மடிவோம் எனும்
வாசகம் உலகம் முழுவதும் இக்கேலிச் சித்திரமூலம் பிரபல்யமாயிற்று.
தினகரன் நாளிதழ் என்று ஆரம்பமானதோ அன்றுமுதல் அப்பத்திரிகையில் கேலிச்சித்திரமும்
இடம்பெறத்தலைப்பட்டது. 1930ம் ஆண்டு காலத்தில் இலங்கையில் முதன்முதலாக வருமான
வரிவிதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டமைக்கு ஆதாரமாக கேலிச்சித்திரங்கள் தினகரனில்
இடம்பெற்றுள்ளன. இன்கம் டக்ஸ் எனும் ஆங்கிலச் சொற்றொடரே இச்சித்திரங்களில்
முக்கியத்துவம் பெற்றிருந்தது. இக்கேலிச்சித்திரங்கள் தினகரனில் முதலிடம்
பெறுவதற்கான காரணம் தமிழ்மக்கள் பெருமளவானோர் வரிசெலுத்தவோராக இருந்திருக்கலாம் என
ஊகிக்கப்படுகிறது.
1933ல் படிபடியாக ஏற்பட்டுவந்த சமூக பொருளாதார மாற்றங்கள் மற்றும் வாசகர் தொகையும்
பத்திரிகை உள்ளடக்கங்களையும் பிரதிபலிக்கக் கூடியதாக இருந்துள்ளன. வீரசேகரியில்
பிரசுரமாகியுள்ள சித்திரக் கதைகள் இதற்குச் சான்றாகும். டார்சன் என்ற சித்திரத்
தொடர்கதையில் இது ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மக்களின் விருப்புகளுக்கு ஏற்ப
உள்நாட்டுச் சம்பவங்களையும் விசித்திர பழக்க வழக்கங்களையும் வைத்து வரையப்பட்ட
சித்திரகானம் போன்ற கேலிச் சித்திரங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. முதலில்
டாஸாவின் சாகசங்களில் லயித்த வாசகர்கள் சமூகத்தில் நிலவும் குறைபாடுகளை வைத்து
கேலியாக எழுதப்பட்ட சுந்தரின் சித்திரகாணத்தில் இன்பம் காண தழைப்பட்டனர்.
இச்சித்திரகாணத்தில் கிராமிய வகுப்பினரும் நகர் ஆங்கிலம் கற்ற வர்க்கத்தினரும்
இடம்பெறுவர். கிராமத்துப் பாத்திரங்களானது தம்பர், சின்னக்குட்டி, போன்றோர் போலி
வாழ்க்கையை கிண்டல் செய்வோராக காணப்படுவர். இதேசமயம் ‘டா மோதிரம்’ போன்ற கோட்டும்
சூட்டும் அணிந்த பாத்திரம் மேற்கத்தைய நாகரிகத்தின்பால் இருந்த வரட்டுப்
பிடிப்பையும், மோகத்தையும் அந்திய மொழிப்பற்றையும் கிண்டல் செய்யும் அவற்றின்
தேய்மானத்தையும் ஊர்ஜிதம் செய்தது. இதைவிட மைனர் மச்சான் பாத்திரம் அனைவரையும்
கொள்ளை கொண்டிருந்தது. மொத்தத்தில் இன்று சகல மொழிப் பத்திரிகைகளிலும் நாளாந்தம்
கேலிச்சித்திரங்கள் தனியிடத்தைப் பிடித்துள்ளன.
ஒரு வாசகர் கூட்டத்தையே தம் வசப்படுத்திக் கொண்டுள்ளன. அனைத்து கேலிச்
சித்திரப்படுகளும் வாசகர்கள் மத்தியில் படிப்படியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை
எடுத்துக் கூறத்தக்கவையாக உள்ளதெனில் அது மிகையாகாது.