குழந்தைகளை நல்ல படியாக பராமரித்து வளர்ப்பது என்பது பெரிய காரியமாகும். அவர்களை
நோய் நொடி அண்டாமல் ஆரோக்கியமாக இருக்க, ஒவ்வொரு தாயும் அவர்களை கண்ணும் கருத்துமாக
பாதுகாக்க முற்படுகிறாள்.
அப்படி இருந்தும் பல காரணங்களால் குழந்தைகளுக்கு கிருமிகளினால் பல நோய்த்தொற்று
ஏற்படுகிறது. அதன் விளைவாக காய்ச்சல், சளி, இருமல் என்று பல அவஸ்தைக்கு ஆளாகின்றனர்.
அப்படிப்பட்ட நேரத்தில், அவர்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட சில மருந்துகளை
கொடுக்கின்றோம்.
குறிப்பாக கை குழந்தைகளுக்கும், தவழும் குழந்தைகளுக்கும் மருந்துகள் கொடுக்கும் முன்,
கட்டாயம் மருத்துவரிடம் ஆலோசனையை பெற வேண்டும்.
ஏனெனில் குழந்தைகளுடைய நோய் தடுப்பாற்றல் சக்தியானது மிகவும் குறைவாக இருப்பதால்,
குழந்தைகளை கிருமிகள் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளன.
அதன் விளைவாக வியாதிகள் வரக்கூடும். இதற்காக மருந்து கொடுக்கும் போது, பெற்றோர்கள்
கவனமாக இருக்க வேண்டும். அதுவும் அத்தகைய மருந்துகள் இயற்கையான அல்லது மூலிகை
மருந்தாக இருந்தாலும் கூட கவனம் வேண்டும்.
பொதுவாக தவழும் குழந்தைக்கு அடிக்கடி சளி மற்றும் இருமல் பிடித்துக் கொள்ளும். ஆனால்
6 வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் சாப்பிடும் சளி மற்றும்
இருமல் மருந்தை கொடுப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
ஏனென்றால், மருந்துகளானது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய அளவு கொடுக்காமல்,
குழந்தைக்கு மருந்தானது திறம்பட செயல்படவில்லை என்று சிலர் அளவுக்கு மீறி மருந்தைக்
கொடுத்துவிடுகின்றனர். ஆகவே இது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.