12 ஆயிரம் புலிகளை விடுவித்தவர்கள் 39 சந்தேக நபர்களுக்காக கூக்குரல்
12 ஆயிரம் புலிகளை விடுவித்தவர்கள்
39 சந்தேக நபர்களுக்காக கூக்குரல்
எதிரணி மீது லக்ஷ்மன் செனவிரத்ன சாட்டை
(கே. அசோக்குமார், லக்ஷ்மி பரசுராமன்)
கடந்த ஆட்சிக்காலத்தில் 12.000 விடுதலைப் புலிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை
செய்யப்பட்ட போது கூச்சலிடாதவர்கள் 39 சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்யும்
போது மட்டும் கூச்சலிடுவதில் எந்தவித நியாயமும் இல்லை என லக்ஷ்மன் செனவிரட்ண எம்.
பி. நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவு- செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றபோது
அதில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
முட்டையொன்று பழுதாகியுள்ளதா நல்லதா என்பதைக் கண்டறிய முட்டையை உடைத்துத்தான்
பார்க்க வேண்டும்.
அதே போன்றுதான் முதன்முறையாக இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து இணக்கப்பாட்டு அரசு
ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது. இது எமக்கு புதிதுதான். என்றாலும் இந்த ஆட்சி
முன்னெடுக்கப்பட வேண்டும். குறைபாடுகள் இருப்பின் பேசித்தீர்க்க வேண்டும். இவ்வாறு
முன்னெடுத்துச் செல்வதன் மூலம்தான் அதன் சாதக பாதகங்களை அறிந்து கொள்ள முடியும்.
12000 புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதே போன்றுதான் 2010 ஆம் ஆண்டு
சட்டமா அதிபர் மொஹான் பீரிஸின் பணிப்பின் பேரில் கடுமையான குற்றங்களுக்காக தடுத்து
வைக்கப்பட்டிருந்த 140 விடுதலைப்புலிகள் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது அந்த
அரசில் பங்காளிகளாக இருந்தோர் எதிர்க்கவில்லை. கூச்சலிடவில்லை. வாயையே திறக்கவில்லை.
ஆனால் இன்றைய அரசு புலிச் சந்தேகநபர்கள் 39 பேரை நிபந்தனையின் பேரில் பிணையில்
விடுதலை செய்ததை எதிர்த்து கோஷம் போடுகிறார்கள்.