இனப்பிரச்சினை இறுதித் தீர்வில் மிக முக்கிய வகிபாகம்
நல்லாட்சி அரசின் சர்வமதத் தலைவர்களூடாக தீர்வு காணும் ஜனாதிபதி, பிரதமரின்
முயற்சிக்கு அடிகளார் உரமூட்டுவார்
(எஸ். சுரேஸ்)
உலகத் தமிழர் பேரவையின் தலைவரும், இலங்கை வாழ் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத்
தீர்வு விடயத்தில் அதிக அக்கறை கொண்டவருமான வண. பிதா அருட்தந்தை இமானுவேல் அடிகளார்
அடுத்த வருட ஜனவரி மாத முற்பகுதியில் இலங்கை வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது இலண்டனில் தங்கியிருக்கும் அடிகளார் கடந்த
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விதித்த தடை ஒன்றின் காரணமாக நாட்டிற்கு மீண்டும் திரும்பி
வருவதில் சில சட்டச் சிக்கல்கள் இருந்து வந்தன. ஆனால் இப்போது இன்றைய நல்லாட்சி
அரசினால் அத்தடை நீக்கப்பட்ட காரணத்தினால் அவர் இலங்கை வருவதற்குத் தயாராகி வருவதாக
நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் அவரது வருகையை இலங்கை அரசாங்கமும்
மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் அறியமுடிகிறது. சர்வமதத் தலைவர்கள் ஊடாக
இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு ஒன்றினைக் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ள
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான
இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் முயற்சியில் தமிழ்த் தரப்பின் சார்பில் அருட்தந்தை
இமானுவேல் மிக முக்கிய வகிபாகம் வகிப்பார் எனவும் தெரிய வருகிறது.
இலங்கை வரவுள்ள அருட்தந்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்
தரப்பிற்குமிடையில் இணைப்பாளராக இருந்து செயற்படும் அதேவேளை ஏனைய மதத்
தலைவர்களுடனும் கலந்துடையாடி அவர்களுடனும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில்
இணைந்து செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.