ஹலால் உணவுகளை முஸ்லிம்களுக்கு மட்டுப்படுத்தும் தீர்மானம் வரவேற்கத்தக்கது
ஹலால் உணவுகளை முஸ்லிம்களுக்கு
மட்டுப்படுத்தும் தீர்மானம் வரவேற்கத்தக்கது
முஸ்லிம் இயக்கங்களின் பிரதிநிதிகளிடம் மல்வத்துபீட தேரர்
ஹலால் உணவுகளை முஸ்லிம்களுக்கு மட்டுப்படுத்த ஜம்இய்யத்துல் உலமா சபை எடுத்த
தீர்மானத்தை வரவேற்பதாக மல்வத்துபீட மகாநாயக்க தேரர் திப்பட் டுவாவே சுமங்கள தேரர்
தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதனை ஒரு அரச நிறுவனத்தின் ஊடாக செய்யமுடியுமாக இருந்தால் சிறப்பானதாக
இருக்குமென்றும் மகாநாயக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்
முஸ்லிம்களுக்கும், பெளத்தர்களுக்கும் ஆயிரம் வருடங்களுக்கு மேலாகக் காணப்படும் உறவு
பாதுகாக்கப்படுவதுடன், மேலும் வளர்க்கப்பட வேண்டும் என மல்வத்துபீட மகாநாயக்க தேரர்
திப்பட்டுவாவே சுமங்கள தேரர் தெரிவித் துள்ளார். நேற்றைய தினம் தன்னைச் சந்தித்த
முஸ்லிம் தூதுக்குழுவினரிடமே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன்
தலைமையில், முன்னாள் ஈரான் தூதுவர் எம். எம். சுஹைர், ஜாமியா நZமியா பணிப்பாளர்
கலாநிதி எம்.ஏ.எம்.சுக்கரி, முன்னாள் சட்டமா அதிபர் சிப்ளி அசீஸ், ஜனாதிபதி
சட்டத்தரணி இக்ராம் மொகமட், ஜம்இயத்துல் இஸ்லாமின் முன்னாள் தலைவர் மெளலவி ஏ.எல்எம்
இப்ராஹிம், பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஏ.எம். நெளபல், மனோதத்துவ ஆலோசர் மன்சூர்
நஹ்லான், கண்டி ஜம்இயத்துல் உலமா தலைவர் மெளலவி பஸ்லூர் ரஹுமான், சட்டத்தரணி சாதி
வதூத் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
தற்போது உருவாகியுள்ள ஹலால் சட்டப் பிரச்சினைகள் பற்றி நேற்றைய தினம் மஹாநாயக்க
தேரருக்கு இக்குழுவினர் எடுத்து விளக்கினர். இச்சந்திப்புத் தொடர்பில் கருத்துத்
தெரிவித்த மகாநாயக்க தேரர், நாட்டின் இனங்களுக்கிடையில் நிலவும் நல்லுறவைப்
பாதிக்கும் வகையில் எவரும் நடந்துகொள்ளக் கூடாது. இது நல்லதல்ல என்றும் கூறினார்.
முஸ்லிம் மதத் தலைவர்கள் அன்றும் இன்றும் இந்த நாட்டுக்கு பாரிய பங்களிப்புக்களைச்
செய்துள்ளனர். அதேநேரம், முஸ்லிம் நாடுகளின் நெருங்கிய தொடர்பு இந்த நாட்டுக்கு
பெரும் வகையில் உதவியுள்ளது. ஹலால் போன்ற பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தைகள் மூலம்
தீர்த்துக்கொள்வதே நல்லது என்றும் ஜம்இய்யத்துல் உலமா, ஹலால் உணவுகளை
முஸ்லிம்களுக்கு மட்டுப்படுத்த எடுத்த தீர்மானத்தை வரவேற்பதாகவும் கூறினார்.
இதனை ஒரு அரச நிறுவனத்தின் ஊடாக செய்ய முடியுமாக இருந்தால் சிறப்பானதாக
இருக்குமென்றும் மகாநாயக்க தேரர் சுட்டிக்காட்டினார்.