ஏற்றுமதி பயிர்களை பயிரிடத் திட்டம்; 3190 ஹெக். கோப்பி, கறுவா செய்கை
ஏற்றுமதி பயிர்களை பயிரிடத் திட்டம்;
3190 ஹெக். கோப்பி, கறுவா செய்கை
கே.அசோக்குமார்
இவ்வருட இறுதிக்குள் 3190 ஹெக்டயர் நிலப்பரப்பில் ஏற்றுமதிப் பயிர்களை
பயிரிடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர்
நாயகம் டபிள்யூ. டி. எல். குணரட்ன தெரிவித்தார்.
இதன்படி இத்திட்டத்தின் கீழ் ஆயிரம் ஏக்கரில் கறுவா செய்கை செய்யவும், 770
ஹெக்டயரில் மிளகு செய்கையும், 420 ஹெக்டயரில் கோப்பி செய்கையும் செய்வதற்குத்
திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், தற்பொழுது செய்கை பண்ணப்பட்டிருக்கும் ஏற்றுமதி பயிர்களின் அறுவடையைப்
பெருக்குவதற்கு, உற்பத்தித்திறன் வேலைத்திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நவீன விவசாயக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படுவதுடன், கறுவா, மிளகு, கோப்பி, கொக்கோ,
ஏலம், சாதிக்காய், கராம்பு போன்ற சிறு ஏற்றுமதி பயிர்களின் உற்பத் தியை அதிகரிக்கத்
திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டம் 2440 ஹெக்டயர் நிலப்பரப்பில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும் இந்த
வருட இறுதிக்குள் 40 ஆயிரம் மெற்றிக்தொன்னுக்கும் அதிகமான சிறு ஏற்றுமதி பயிர்களை
ஏற்றுமதி செய்வதற்கும் திட்டமிடப்பட்டிருப்பதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின்
பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.டி.எல்.குணரட்ன மேலும் தெரிவித்தார்.