பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவர்களுக்கான 4வது கட்டத் தலைமைத்துவப் பயிற்சி
மார்ச் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இப்பயிற்சிகள் மார்ச் 20ஆம் திகதி வரை
நடைபெறும் என உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நான்காம் கட்டமாக நடைபெறும் இப்பயிற்சிக்காக சுமார் 8500 மாணவர்கள்
சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். மாதுறுஓய, மின்னேரியா, தியத்தலாவ, திருகோணமலை,
எம்பிலிப்பிட்டி, பூசா, தொபகொட, ரன்தம்பே ஆகிய பகுதிகளிலுள்ள பயிற்சி முகாம்களில்
இந்த தலைமைத்துவப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
பயிற்சிகளுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் மார்ச் மாதம் 4ஆம் திகதி
குறிப்பிட்ட பயிற்சி முகாம்களுக்கு செல்லுமாறு உயர் கல்வி அமைச்சு கேட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் மூன்று கட்டங்களாக மட்டுமே தலைமைத்துவப் பயிற்சிகள் நடத்தப்பட்ட
நிலையில், இம்முறை நான்காவது கட்டமாக நடத்தப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
தலைமைத்துவப் பயிற்சிக்கு தெரிவுசெய்யப்பட்ட பெயர்ப்பட்டியல்
www.leadership.mohe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பார்வையிட முடியும்.
நான்காவது கட்டமாக பயிற்சிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில்
பதிவு செய்வதற்காக மார்ச் 20ஆம் திகதி முதல் ஒருவார காலத்துக்கு அவகாசம்
பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.