2013 மின்சாரம் வழங்கும் செலவு 268 பில்லியன் : ரூ. 33 பில். அவசியமற்ற
செலவு குறைப்பு
2013 மின்சாரம் வழங்கும் செலவு 268 பில்லியன் :
ரூ. 33 பில். அவசியமற்ற செலவு குறைப்பு
மின்கட்டணத்தில் உயர்வில்லை
மகேஸ்வரன் பிரசாத்
இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட 2013ஆம் ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட
செலவீனங்களை ஆராய்ந்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அவசியமற்ற செலவுகளைக்
கண்டறிந்து அவற்றில் குறைப்பினை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.
2013ஆம் ஆண்டில் பாவனையாளர்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு 268 பில்லியன் ரூபா
தேவையென இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம்
பகுப்பாய்வொன்றினைச் சமர்ப்பித்திருந்தது.
இதனை ஆராய்ந்த ஆணைக்குழு,
அத்தியாவசியமற்ற செலவுகளைக் கண்டறிந்து அவற்றை நீக்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய 33 பில்லியன் ரூபா செலவீனங்களைக் குறைப்பதற்குத்
தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் மின்கட்டணத்தில் திருத்தம்
ஏற்படுத்தவேண்டிய தேவை குறைத்திருப்பதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்
தலைவர் ஜயதிஸ்ஸ.டி.கொஸ்தா தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவினால் கண்டறிந்து குறைக்கப்பட்ட தொகையானது மின் கட்டணங்களின் உயர்வைத்
தடுப்பதுடன், அரசாங்கத்தின் மானியம் வழங்குவதற்கான செலவுகளையும் குறைக்கும் என்றும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் செலவீனங்கள் குறைக்கப்பட்ட பின்னர், மீளாய்வினை
மேற்கொண்டு அதன் பின்னரும் மின்கட்டணத்தை உயர்த்தவேண்டிய தேவை இருப்பின்
அதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு, மின்சார சபையிடம் கேட்டுள்ளது.