சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை ஒன்றை வெகுவிரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
எடுப்பதாக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது கிளையை
சாய்ந்தமருதில், அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் இணைந்து நேற்று முன்தினம் (21)
திறந்துவைத்த பின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றிய போது இந்த
உறுதிமொழியை வழங்கினார். கலாநிதி ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்தப்
பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பைசர் முஸ்தபா தொடர்ந்து உரையாற்றுகையில்,
சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கை இனி நிறைவேறப் போகின்றது. இந்தப்
பிரதேசத்துக்கு தனியான நகரசபை வேண்டுமென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும்
ஜெமீல் ஆகியோர், என்னிடம் நீண்டகாலம் வலியுறுத்தி வந்ததன் பிரதிபலன் இப்போது
உங்களுக்குக் கிடைத்துவிட்டது.
கிரேண்ட்பாசிலும், பேருவளையிலும் முஸ்லிம்களின் மீதும், பள்ளிகளின் மீதும்
கொடூரங்கள் இழைக்கப்பட்டபோது நானும், அமைச்சர் றிசாத்தும் மட்டுமே மக்களோடு மக்களாக
களத்தில் நின்றோம்.
நான் கண்டி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது, மாற்றுக்
கட்சிக்காரன் என்று பாராமல் சமூகத்தின் நன்மைக்காக, என்னை வெற்றியடையச் செய்வதற்காக
அந்த மாவட்டத்துக்கு வந்து, எனது வெற்றிக்காக அவர் உழைத்தமையை, நான் நன்றியுணர்வுடன்
இங்கு கூற விரும்புகின்றேன் என்று அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.