தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர்
பேசுகிறார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் டாக்டர்
என்.சத்யபாமா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, முதல்வர்
ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு, இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட
முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சுவாச ஆதரவு சிகிச்சை மற்றும் இயன்முறை மருத்துவ
சிகிச்சை ("பாஸிவ் ஃபிஸியோதெரப்பி") ஆகியவை தொடர்ந்து வழங்கப்படுகிறது.
அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த தீவிர சிகிச்சை குழுவில் உள்ள மூத்த இருதய
சிகிச்சை நிபுணர்கள், சுவாசப் பிரச்னைகளுக்கான மூத்த நிபுணர்கள், நோய்த்தொற்று
சிகிச்சைத் துறையைச் சேர்ந்த மூத்த நிபுணர்கள், நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும்
சர்க்கரை நோய் மூத்த நிபுணர்கள் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தொடர்ந்து
சிகிச்சை அளித்து, அவரது உடல்நிலையைக் கவனித்து வருகின்றனர் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ஆம் திகதி
அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து இன்று 32 ஆவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.