முழங்காலுக்கு கீழே சுடத்தெரியாவிட்டால் பொலிஸ் பயிற்சி எதற்கு?
முழங்காலுக்கு கீழே
சுடத்தெரியாவிட்டால்
பொலிஸ் பயிற்சி எதற்கு?
பொலிஸ் மீது
அவநம்பிக்கை
ஏற்படுத்தும் சம்பவம்
பல்கலைக்கழக மாணவர்கள் மீதான சூட்டுச் சம்பவம், யாழ். மக்களை மீண்டும் பொலிஸார்
மீது அவநம்பிக்கை கொள்ள வைப்பதாக அமையும். பொலிஸார் மீதான புதிய நம்பிக்கைகளை
ஏற்படுத்த, குற்றம் இழைத்தோர் மீது கடும் நடவடிக்கைளை சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு
எடுக்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு இராணுவம் வேண்டாம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொலிஸார் எங்கள்
நண்பர்கள் என்று இன்று சொல்லத் தொடங்கி இருக்கும் யாழ்ப்பாணத்து மக்களை மீண்டும்
பொலிஸார் மீது அவநம்பிக்கை கொள்ள வைக்கும் சம்பவங்களாக இதனை கருதுகிறேன் என்றும்
அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
யாழ். நகரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பல்கலை மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டு
சம்பவம் தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு
சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் படுகொலைகள் என்ற கருத வேண்டிய சாட்சியங்கள்
கிடைத்த வண்ணம் உள்ளன. போலிஸ் காவலரணில் நிறுத்தாமல் செல்வோரை துரத்தி பிடிக்கவே,
போலீசாருக்கு அதி நவீன 1000சீசீ மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
காவலரணில் நிற்காமல் வேகமாக போனவர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்துகொண்டு போனதாகத்
தகவல் இல்லை. இந்நிலையில் ஏன் சுட வேண்டும் எனத் தெரியவில்லை. ஆகவே அவர்களைத்
துரத்திச் சென்று வழிமறித்து பிடிக்க வேண்டும். அப்படியே சுட வேண்டிய அவசியம்
ஏற்பட்டால் முதலில் ஆகாயத்தை நோக்கியும், பின்னர் முழந்தாளுக்கு கீழேயும் சுட
வேண்டும் என்ற விதிகள் சிறு குழந்தைக்கும் தெரியும். இவை பயிற்சி பெற்ற இந்த
பொலிசாருக்கு தெரியவில்லை.
சில வாரங்களுக்கு முன் புசல்லாவையில் ஓர் இளைஞர் பொலிஸ் காவலில் இருந்தபோது
மரணமடைந்தார். இப்போது யாழ்ப்பாணத்தில் இந்த இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. எமது
நாட்டுக்கு விஜயம் செய்திருந்த ஐநா சபையின் சிறுபான்மை விவகார அறிக்கையாளர் ரீடா
ஐஷக் இங்கே இருக்கும்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்திருந்தால் நிலைமை கேவலமாக
இருந்திருக்கும், என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.