எவ்விதமான பலனும் இல்லாது
போய்விட்ட செந்தூரனின் உயிர்
செந்தூரன் என்றால் யார் எனக் கேட்குமளவிற்கு அந்த அப்பாவி மாணவனின் சோகக் கதை
பழங்கதையாகி விட்டது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்காக ரயில் முன் பாய்ந்து
இரண்டு துண்டாகிய அவனது உயிரால், எவ்விதமான பலனும் இல்லாது போய்விட்டது. இனி ஒரு
வருட நினைவைச் சில அரசியல்வாதிகள் ஞாபகமிருந்தால் தமது தேவைகளுக்காகக் கொண்டாடக்
கூடும்.
கிடைக்கும்வரை இலாபம் என
கொடுப்பதை வாங்கும் மக்கள்
நாட்டில் தேர்தல் ஒன்று வரப்போகுது போலத் தெரியுது. உள்ளுராட்சி சபைகளின்
அரசியல்வாதிகள் சிலர் மக்களைத் தடல்புடலாகச் சந்தித்து வருகினம். கூரைத் தகடுகள்,
வீடு கட்டத் தளபாடங்கள் எனப் போட்டி போட்டு வழங்கியும் வருகின்றனர் நான்கு
வருடங்களுக்கு முன்னர் கண்ட முகங்களாக இருக்குதே எனப் பொதுசனமும் கிடைக்கும்வரை
இலாபம் எனக் கொடுப்பதை வாங்கி வருகிறார்கள்.
அதிபர்களுக்கு அன்புக் கட்டளை
பிறப்பிக்கும் அரசியல்வாதிகள்
பாடசாலை வைபவங்களில் தம்மைப் பிரதம அதிதியாக அழைக்க வேண்டுமென அதிபர்களுக்கு அன்பு
எச்சரிக்கையை சில அரசியல்வாதிகள் விடுத்து வருகின்றனராம். அழைக்காவிட்டால்
பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டி நேரிடும் எனவும் மிரட்டல் வேறு. இவ்விடயத்தில்
இணையத்தளங்கள்தான் துணிந்து உண்மையை வெளிக்கொண்டு வருகின்றன. கல்வி இராஜாங்க
அமைச்சர் இவ்விடயத்தைக் கவனத்திலெடுப்பாரா?
வெள்ள அனர்த்தத்தை விடவும்
சோகமானது முகநூல் பிரசாரம்
தமிழ்நாட்டு வெள்ளம் அங்கு சிறிதளவில் அழிவைத் தந்தாலும் பெருமளவிலான உள்ளங்களை
ஒன்றுபட வைத்தது என்பது உண்மைதான். ஆனாலும், சில கட்சிகளும், மத அமைப்புகளும், நம்ம
நடிகர் திலகங்களும் முகநூலை எந்தளவிற்குத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள
முடியுமோ பாவித்ததை அவதானிக்க முடிந்தது. இதையெல்லாம் உண்மையென நம்பி பலர் லைக்
போட்டுள்ளமை மழை வெள்ள அவலத்தை விடவும் சோகமானது.