விடுதலைப் புலிகள் அமைப்பில் புரட்சிப் பாடல்களை எழுதிவந்த புதுவை
இரத்தினதுரை 2009ம் ஆண்டு இறுதிப்போரின் பின்னர் காணாமல்போன நிலையில் அவரை மீட்டுக்
கொடுக்குமாறு கோரிகை விடுக்கப்பட்டுள்ளது. காணாமல்போனவர்களைக் கண்டறிவதற்கான
ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக புதுவை இரத்தினதுரையின் அக்கா சாட்சியம்
வழங்கியிருக்கின்றார். ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்.மாவட்டச் செயலகத்தில்
நடைபெற்றிருந்தபோதே அவர் மேற்படி சாட்சியத்தை வழங்கியிருக்கின்றார்.
பத்மநாதன் இராஜலக்ஷ்மி என்ற புதுவை இரத்தினதுரையின் அக்கா சட்சியமளிக்கையில்,
2009.05.18ஆம் திகதி எனது தம்பி இரத்தினதுரை அவருடைய இரு மகன்கள் மற்றும் மனைவியுடன்
படையினரிடம் சரணடைந்தார். பின்னர் அவருடைய மகன்கள் தொடர்பில் படையினர் பாரிய பெயர்
பட்டியல் ஒன்றைக் கொண்டுவந்து ஆராய்ந்த பின்னர் மகன்களையும், மனைவியையும் விடுதலை
செய்ததுடன் என் தம்பியை அழைத்துச் சென்று விட்டனர். அவர் ஒரு கவிஞனாக புலிகள்
இயக்கத்தில் அங்கம் வகித்தார்.
எனவே, அவர் கண்டுபிடித்துக் கொடுக்கப்படவேண்டும். மேலும், அவர் படையினரிடம்
ஒப்படைக்கப்பட்டுக் காணாமல் போனதன் பின்னர் அவர் உயிருடன் உள்ளதாக திவயின பத்திரிகை
உள்ளிட்ட ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருக்கின்றன. எனவே அவர் மீட்டுக்
கொடுக்கப்பட வேண்டும் எனப் புதுவை இரத்தினதுரையின் அக்கா சாட்சியம் வழங்கியுள்ளார்.