மட்டக்களப்பு கடற்பரப்பிலிருந்து
225 கடல் மைல் தூரத்தில் சம்பவம்
கே. அசோக்குமார்
நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மியன்மார் நாட்டவர் 32 பேரை இலங்கை
கடற்படையினர் நேற்று காப்பாற்றியுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல
வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
32 பேரில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கடற்பரப்பில் 225 கடல் மைல் தொலைவில் ஆழ்கடல் வள்ளமொன்றில்
தத்தளித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் காப்பாற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கடற்படையின் ‘சாகர’ கப்பல் காலி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்று இவர்களை
காப்பாற்றியுள்ளது.
நீண்ட நாள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததாலேயே 4 பேரின் நிலை மோசமாக உள்ளது
என்று தெரிவித்த கடற்படை பேச்சாளர் 32 பேரையும் காப்பாற்றிய கப்பலிலேயே அவர்களுக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். நீண்ட நாட்களாக இவர்கள் உணவு,
நீர் இன்றி தத்தளித்துக் கொண்டிருந்துள்ளனர் என்றும் அவர்களை பார்த்த கடற்படை
வீரர்களும் மருத்துவ பிரவினரும் தெரிவித்துள்ளனர். இன்று மாலையாகும் போது அவர்களை
பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரமுடியும் என்றும் தெரிவித்தார்.
அவர்களுக்குத் தேவையான உணவு, நீர், மருந்து வகைகளை கடற்படையினர் கொண்டு
சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.