19 இலங்கை தமிழர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்காலிகமாக தங்க
அனுமதி
19 இலங்கை தமிழர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்காலிகமாக தங்க அனுமதி
அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் வழியில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த
நிலையில் மீட்கப்பட்டு துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்ட 19 இலங்கைத் தமிழர்களையும்
நாட்டுக்கு மீண்டும் அனுப்பப் போவ தில்லையென ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.
இவர்கள் வேறொரு நாட்டில் குடியமர்த்தப்படும்வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில்
தங்கியிருக்க முடியும் என்றும் அந்த நாடு அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்குச்
செல்லும் நோக்கில் படகு மூலம் சென்ற 45 பேரில் 19 பேர் நடுக்கடலில் தத்தளித்துக்
கொண்டிருந்தபோது சிங்கப்பூர் கப்பல் ஒன்று அவர்களை மீட்டு டுபாயில்
இறக்கிவிட்டிருந்தது.
இவர்களை அவர்களுடைய சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப் போவதில்லை. மாறாக வேறொரு
நாட்டில் அவர்கள் குடியேறும்வரையில் அவர்கள் தமது நாட்டில் தங்கியிருக்க
அனுமதிக்கப்படுவார்கள் என டுபாய் பொலிஸின் மனித உரிமைகள் திணைக்களத் தலைவர் கேணல்
மொஹமட் அல் மூர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு மாதங்களாகத் தமது நாட்டில்
தங்கியிருக்கும் அவர்களை ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியின்றி அவர்களின் சொந்த
நாட்டுக்கு அனுப்ப முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இவர்கள் தமது நாட்டில் தங்கியிருக்கும்வரை அவர்களுக்கான தங்குமிட வசதிகள்
வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கும் அவர், இவர்களின் பிரச்சினை தொடர்பில்
யூ.என்.எச்.சி.ஆர் அமைப்புடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்தார்.