நிந்தவூர் சம்பவம் குறித்து பக்கச் சார்பற்ற முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
இதற்குத் தேவையான சாட்சியங்களை வழங்குவதற்கு மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என
பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர தெரிவித்தார். எவர் தவறிழைத் திருப்பினும்
நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.
நிந்தவூரில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை குறித்து ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை
மேற்கொள்ளும் பொருட்டு, பொலிஸ் மா அதிபரின் பணிப்பிற்கமைய அம்பாறை மாவட்டத்திற்கு
வருகை தந்துள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர, சம்மாந்துறை பொலிஸ்
நிலையத்தில் இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத்
தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் நிந்தவூர் பிரதேச செயலாளர் றிபா உம்மா அப்துல் ஜலீல், சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் மஹாகெதர, கல்முனை தலைமையக பொலிஸ் அதிகாரி ஏ.டபிள்யூ.அப்துல் கபார்,
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.கே.தகனகே உட்பட நிந்தவூர்
பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் தலைவர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சிவில்
பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது நிந்தவூரில்
ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கையில் பிரதிப் பொலிஸ் மா
அதிபர் கபில ஜெயசேகர, நிந்தவூர் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக குறிப்பிடப்படும்
விசேட அதிரடிப் படையினர் ஆறு பேரும் அடையாளங் காணப்பட்டுள்ளனர். அத்துடன்
இவர்களிடமிருந்த ஆயுதங்கள் களையப்பட்டு, விசேட பொலிஸ் பிரிவினரால் தடுத்து
வைக்கப்பட்டு தற்போது விசாரணைக்குட் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணைகளை சிறப்பாக முன்னெடுக்க நிந்தவூர் மக்களின் ஒத்துழைப்பு
அவசியமானதாகும். மக்களுக்காகவே பொலிஸார் உள்ளனர். மக்களையும், பொலிஸாரையும் வேறாக
பிரித்துப்பார்க்க வேண்டாம். நிந்தவூர் பிரதேசத்திற்கான பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது. பதினொரு பொலிஸ் குழுக்கள் அங்கு பாதுகாப்பு கடமையில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளன எனக் கூறினார்.