அமைச்சர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், புத்திஜீவிகள் பாராட்டு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்டம்
அபிவிருத்தி இலக்கைத் துரிதப்படுத்தும் ஒன்றென அமைச்சர்களும் வர்த்தகப்
பிரமுகர்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் சகல துறைகளையும் தொட்டுச் செல்லும் இந்த வரவு செலவுத்திட்டம் பொருளாதார
வளர்ச்சிக்கு உந்துகோலாக அமையுமென அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்த பின்னர் பகிரங்க சேவையாளர்கள் பெரிதும்
நன்மை பெற்றுள்ளனர். 2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜட் எல்லாத்துறைகளின் அபிவிருத்தியையும்
கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விவசாயிகளின் ஓய்வூதியம்
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஓர் அம்சமாகும்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ
சுகாதார, கல்வித்துறைகளை மேம்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜட்,
பாதுகாப்பான குடிநீர் விநியோகம் உட்பட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முன்னுரிமை
வழங்குகின்றது. கல்வித்துறை அபிவிருத்தியிலே தேர்ச்சி பெற்ற மனித வள முயற்சிகளை
ஊக்குவிப்பதும் தொழில் நுட்பத்துறையை மேம்படுத்துவதும் அரசாங்கத்தின்
திட்டமாகவுள்ளது.
நாட்டில் கிட்டத்திட்ட 1.2 மில்லியன் அரசாங்க சேவையாளர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களின் சுமையைத் தாங்கும் வகையில் புதிய வாழ்க்கைச் செலவுப்படி வழங்கப்பட்டுள்ளது.
தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வல்ல
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானத்தை முன்னெடுக்கும் வகையில்
இந்த பட்ஜட் தயாரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒவ்வொரு துறைகளிலும் நன்மை பயக்கும் வகையில் இந்த பட்ஜட்
தயாரிக்கப்பட்டுள்ளது.
தேசிய மொழிகள் ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாயணக்கார
எதிர்கால சந்ததியினரின் விடிவைக் கருதியும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும்
நோக்கிலும் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வரவு செலவுத் திட்டம் சிறப்பான ஒன்றே. கல்வி,
விவசாயம், நீர்ப்பாசனம் ஆகிய துறைகளின் முன்னேற்றத்தைக் கருத்திலெடுத்து இது
தயாரிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால்
இந்த பட்ஜட் ஐந்து அடிப்படை அம்சங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. நாட்டின்
எதிர்கால பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டே இது தயாரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில வருடங்களில் பொருளாதாரத்தை விருத்தி செய்யும் வகையில் இந்த பட்ஜட்
பெரிதும் துணைபுரியும்.
கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைவரும் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள்
தலைவருமான சபீக் ராஜாப்தீன்
வர்த்தகத்துறையில் இந்த பட்ஜட் பாரிய நன்மைகளை உருவாக்குவதோடு இலங்கைப் பிரஜைகளின்
நல்வாழ்வுக்கும் உதவும் என நம்புகின்றேன். சுகாதாரத்துறையில் இது பெரும் மாற்றத்தை
ஏற்படுத்தும் எனக் கருதலாம்.
நாட்டின் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு இந்த பட்ஜட் முன்னுரிமை வழங்கியுள்ளது.