புலம் பெயர்ந்த சமூகத்தினரின் கருத்துகளை செவிமடுக்க தான் தயாராக இருக்கின்றேன்
என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளமையை புலம் பெயர்ந்த சமூகம் தமது
கவனத்தில் எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற
உறுப்பின ருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட் டின் போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊடகவியலாளர்கள்
பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற பிரதான ஊடகவியலாளர் மாநாட்டில் ஜனாதிபதி ஐந்து விடயங்களை
பகிரங் கமாகவே முன்வைத்துள்ளார்.
அதாவது, முதலாவது புலம்பெயர்ந்த சமூகத்தின் கருத்துகளை தான் செவிமடுக்க தயாராக
இருப்பதாக அறிவித்துள்ளார். இரண்டாவது, தமது கருத்துக்களையும் புலம்பெயர்ந்த சமூகம்
செவிமடுக்க வேண்டும் என்றார். மூன்றாவது, புலம்பெயர் சமூகம் இலங்கைக்கு வந்து
நிலைமையை தெரிந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். நான்காவது, நாட்டை
ஒருபோதும் இரண்டாக பிரிப்பதற்கு இடங்கொடுக்க மாட்டேன் என்றார். ஐந்தாவது, போர்
குற்றங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை
வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த ஐந்து விடயங்களையும் புலம் பெயர்ந்துள்ள சமூகம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
அவர்கள் மட்டுமன்றி தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இதனைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
எவ்வாறாயினும் நாட்டை இரண்டாக பிரிப்பதற்கு நாட்டில் வாழும் தமிழர்களோ அல்லது
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரோ விரும்பவில்லை என்பது உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வினை காணவே புலம்பெயர்ந்த சமூகம்
விரும்புகின்றது என நினைக்கின்றேன்.
புலம் பெயர்ந்த தமிழர்களை ஒரு தரப்பினராக ஜனாதிபதி ஏற்றுக்கொண்டிருப்பது இதுவே முதல்
முறையாகும். இதனை பிரயோகித்து புலம் பெயர்ந்த சமூகம் ஒரு கட்டமைப்புக்குள் வந்து
இலங்கை அரசுடனான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அனைத்து சந்தர்ப்பங்களையும்,
நாம் உதறிவிட்டு நின்றால் இன்னும் பல தலைமுறைக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண
முடியாது.
யுத்தத்தில் வென்ற அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற தேவையற்ற, நடைமுறைக்கு
சாத்தியப்படாத குறிக்கோளில் மட்டும் நாம் செயற்படுவோமேயானால் ஒருபோதும் எமது
மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே இன்றைய நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன்னெடுக்க வேண்டிய தமிழ்த்
தேசிய கூட்டமைப்பினரும் புலம் பெயர்ந்தவர்களும் சாணக்கியமான முறையில் செயல்பட
வேண்டும்.