புத் 66 இல. 23

விஜய வருடம் வைகாசி மாதம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ஷஃபான் பிறை 09

SUNDAY JUNE 08 2014

 

 
சங்க இலக்கிய காதலர்கள் ஆட்டனத்தி, ஆதிமந்தி கண்ணதாசனைக் கவர்ந்த காதல் காவியம்

சங்க இலக்கிய காதலர்கள் ஆட்டனத்தி, ஆதிமந்தி கண்ணதாசனைக் கவர்ந்த காதல் காவியம்

காதல் கனிரசம் சொட்டும் கவிதைகளையும், பாடல்களையும் படைத்த கவியரசு கண்ணதாசன், காவியத் தாயின் இளைய மகனாகவும் காதற் பெண்களின் பெருந்தலைவனாகவும் வாழ்ந்திருக்கின்றார் என்றால் மிகையில்லை.

கவிதைகளையும் பாடல்களையும் தவிர, இரண்டு காதல் காவியங்களையும் நமக்குப் படைத்துத் தந்திருக்கிறார். பழம்பாடல்களைப் புதுக் கவிதையாகத் தந்த அவர், அகநானூற்றிலும் குறுந்தொகையிலும் போற்றிப் புகழப்படும் சங்க இலக்கிய காதலர்களான ஆட்டனத்தி, ஆதிமந்தி ஆகியோரின் காதலை காவியமாகத் தந்திருக்கிறார்.

கண்ணதாசன் அவர்கள் தன் காவியங்களிலும் சரி பாடல்களிலும் சரி காதற் தலைவியின் விரகதாபத்தை, ஏக்கத்தை கவியின்பம் சொட்டச் சொல்லும் விதம் அலாதியானது. தலைவி தன் நிலையைத் தோழியிடம் சொல்லி ஆற்றுப்படுத்திக் கொள்ளும் விதம் நெஞ்சைப் பிழியும்! அவரது கவிதை நூலைப் படித்தால், தலைவியின் சோகத்தை வார்த்தைகளால் வார்த்திருக்கும் விதம் படிமமாக நிழலாடும்.

ஆட்டனத்தி - ஆதிமந்தி காவியத்தில் மருதியின் காதல் தியாகத்தைப் போற்றிப்பாடுகிறார் கவியரசர். அவள் நினை வாகவே காவிரியாற்றில் ஆடிப்பெருக்கு களைகட்டுகிறதென்றார்கள் இலக்கியவாதிகள். சரி, யார் இந்த மருதி என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

உலகப் புகழ்பெற்ற காதலர்கள் ரோமியோ - ஜுலியட், சகுந்தலை - துஷ்யந்தன், லைலா - மஜ்னூன், மும்தாஜ் - ஷாஜஹான், கிளியோபட்ரா - மார்க் அண்டனி, அம்பிகாபதி - அமராவதி, தேவதாஸ் - பார்வதி, உதயணன் - வாசவதத்தை போன்றவர்களுக்கு சமமான காதல் கதை ஒன்று எமது இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த காதலர்கள் ஆதிமந்தி - ஆட்டனத்தி என்ற ஆடுகளமகள் - ஆடுகளமகன் ஆகும். இந்தச் சோகக் காதல் கதையை குறுந்தொகை அகநானூறு மற்றும் சிலப்பதிகாரம் போன்றவற்றில் பாடியிருக்கிறார்கள்.

இது ஆட்டக்காரி (ஆடுகளமகள்) “ஆதிமந்தி” யின் காதல் கதை. இவளை சோழன் கரிகாலனின் மகள் எனவும், அது போல ஆட்டனத்தியை சேரநாட்டரசனாகவும் பலர் கருதுகின்றனர். எது எப்படியாயினும் இவர்களைப் பற்றி பரணர், வெண்வீதியார், வெள்ளி வீதியார் போன்ற புலவர்கள் போற்றியுள்ளதுடன் சிலப்பதிகாரமும் இந்நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்கிறது.

மாலை நேரம் காவேரி ஆறு இன்று ஏனோ மெதுவாக ஓடுகிறது. தனது மனதை யாரிடமோ பறிகொடுத்தது போல தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டு இருக்கிறது.

சூரியன் தனது கதிர்களை மடக்கிக் கொண்டு காவேரி ஆற்றில் குளிக்க போய் கொண்டு இருக்கிறான். பறவைகள் மரக் கிளைகளை நோக்கி ஆரவாரமாக பறந்து கொண்டு இருக்கின்றன. வண்டுகள் மலர்களை சுற்றி ரீங்காரம் இடுகின்றன. காதலர்களை வரவேற்பது போல சந்திரன் பிரகாசமாக ஒளி பரப்பியபடி மேகத்தினூடாக எட்டிப் பார்க்கின்றான். ஒவ்வொரு நாளும் இந்த நேரம் தனது தோழியுடன் காவேரி ஆற்றங்கரையில் உலா வரும் ஆதிமந்தியை இன்று காணவில்லை. தோழி தான் முந்தி வந்து விட்டேனோ என்று ஒரு தரம் தடுமாறினாள். வாடைக்காற்று கொஞ்சம் குளிராக வீசுகின்றது. தன்னை மேல் அங்கியால் இறுக்கமாக போர்த்துக் கொண்டு அங்கும் இங்கும் தேடினாள். அதோ அந்தோ... அந்த கற்பாறைகளுக்கிடையில் காவேரியை வெறித்து பார்த்துக் கொண்டு ஆதிமந்தி இருப்பதை தோழி கண்டாள். அந்த காவேரியை அவள் கண்களில் இருந்து ஓடுவது போல அவள் அங்கு இருந்தாள். தோழிக்கு ஒன்றுமே புரியவில்லை. மெல்ல அவளின் பட்டு போன்ற நீண்ட கூந்தலை தடவிய படி, ஆதிமந்தியை என்ன நடந்தது என்று கேட்டாள்.

ஓ... என்னவென்று சொல்வேன் எனத் தடு மாறினவள், கொஞ்ச அமைதியின் பின், தோழி தனக்கு நல்ல பதில் ஒன்று தருவாள் என்ற ஓர் அவாவில், தோழியின் முகத்தை பார்த்தபடி சொல்லத் தொடங்கினாள்.

“மள்ளர் குbஇய விழவி னானும்

மகளிர் தbஇய துணங்கை யானும்

யாண்டும் காணேன் மாண்தக் கோனை

யானும் ஓர் ஆடுகள மகளே என் கைக்

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த

பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே”

தம் மாண்தக்கோனை (தனக்கேற்றவனாக கருதிய தலைவனை) என் காதலனை, அந்த நீச்சல் - நடன விளையாட்டு வீரன் ஆட்டன் ஆத்தி என்பவனை, பலம் உடைய போர் வீரர்கள், மள்ளர், விழாக் கொண்டாடும் இடங்களிலும், மள்ளர் மகளிர் தம்முள் பொழுது போக்காக தழுவி வட்டமாக நின்று கை கோத்துக்கொண்டு ஆடுகின்ற துணங்கை நடனம் ஆடும் இடங்களிலும் காணமுடியவில்லை. நானும் ஓர் ஆடுகள மகள் ஆட்டக்காரி. அந்த ஆட்டக்கார ஆடுகளக் கூட்டத்துக்குத் தலைவனான (குரிசில்) அவனை நினைத்து என் சங்கு கைவளையல் நழுவுகிறது தோழி என நாணம் கடந்து வருந்தி முறையிட்டாள். தோழிக்கு சிரிப்பு தான் வந்தது. இதுக்கு ஏன் இந்த கவலை நாளை ஆட்டனத்தி எமது அரசன் முன்னிலையில் ஆடப்போகிறான். நீயும் நானும் முன் வரிசையில் இருந்து பார்க்கப்போகிறோம். பிறகு என்ன வேண்டும்? இன்று அவன் தனது சக ஆட்டக்காரி காவேரியுடன் ஒத்திகை பார்க்கிறானோ என்னவோ என சமாதானப்படுத்தினாள்.

சோழ நாட்டு மக்களுக்கு தாய், தெய்வம் எல்லாம் இந்த காவிரிதான். அவள் கருணையால் தான் சோழ நாட்டு ஆற்றுக்கரையில் முப்போகம் முழுசாக விளைகிறது. ஆமாம் புனலாய் வெள்ளமாய் பெருகி, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்ப்பவள் அவள். அந்த தெய்வத்தின் தரிசனம் காண கரையெல்லாம் காவேரி அன்னைக்குப் பொங்கலிட்டு, நீரில் அகல்விளக்கு ஏற்றி விட்டு, ஆட்டனத்தி - காவேரியின் நீச்சல் நடன விழா காண மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தது.

ஆதிமந்தியும் தன் காதலனின் நடனம் காண சீவி சிங்காரித்து பொன்மகளென தன் தோழியுடன் புறப்பட்டு வந்திருந்தாள். இவளும் ஆடற்கலையில் தேர்ந்த வட்ட விழி அழகிதானே.

(மிகுதி அடுத்த வாரம்...)

நொப்பும் நுரையுமாய் துள்ளிக்குதித்து வரும் காவேரியை பார்த்து அவள் நெஞ்சமெலாம் கூத்தாடுகிறது. அவனுடன் தான் ஆடுவது போல ஒரு கற்பனையில் மிதந்தாள். தன்னவன் நெஞ்சில் தலைசாய்த்து.... காதலன் கைபிடித்து.... நீரில் நனைந்து எழுந்து தலை கோதி... அப்பப்பா அத்தனையையும் அனுபவித்து விடவேண்டுமென்று அவள் ஆசை... நீண்டு கொண்டே போனது. தழைத்த கதிர்களையுடைய வயல்களை கொண்ட கழார் என்னும் ஊரிலுள்ள காவிரியாற்று நீர்த்துறையில், ஆட்டனத்தி என்பவன், காவேரி என்ற ஆட்டக்காரியுடன் நீசசல் மகளுடன் சேர்ந்து இன்று நீச்சல் நடனம் ஆடப்போகிறான். இந்த நீச்சல் நடனம் அதுவும் ஆரவாரம் பொருந்திய சுற்றத்தினருடன் சோழன் கரிகால்வளவன் கண்ணுற்று மகிழ அவன் முன்னிலையில் நடக்கப்போகிறது.

அவ்வளவு பெருமை பொருந்திய அந்த நடனத்தை எல்லோரும் எதிர்பார்த்து இருக்க சோழன் கரிகாலனை வணங்கி விட்டு அந்த ஆட்டனத்தி தனது சக ஆட்டக்காரி காவேரியுடன் நீரில் இறங்கினான் எங்கும் ஒரே அமைதி. எல்லோர் கண்களும் அந்த ஆட்டகாரர்களிடமே.

அந்த ஆறே இவர்கள் நடனத்தை கண்டு பூரித்தது போல திடீர் என கொந்தளிந்தது. இவனுடன் சேர்ந்து நீச்சல் நடனம் ஆடிய நீண்ட கரிய கூந்தலையுடைய காவிரி இவனது அழகில் மயங்கி ஆற்றுவெள்ளம் காவிரியை ஈர்த்தபோது அவனை வெளவிக்கொண்டும், பிடித்துக்கொண்டும் தன் கூந்தலால் மறைத்துக் கொண்டும் அவனை ஆற்றோடு இழுத்துச் சென்றாள். என்றாலும் காவிரியை ஆறு அடித்துச் சென்றுவிட்டது. காவிரி ஆற்றுவெள்ளத்தில் மாண்டுபோனாள். ஆட்டனத்தி கரை ஒதுங்கிக் கிடந்தான்.

அங்கே நீராடிய மீனவன் தலைவனின் மகள் மருதி என்பவள் அவனைக் காப்பாற்றி அவனுக்கு தேவையான வைத்தியம் செய்தாள். அவனும் மெல்ல மெல்ல தேறினான். மருதிக்கு அவன் மேல் ஒரு மோகம். ஒரு காதல் அரும்ப தொடங்கிற்று. அவனே தன் தலைவன் என முடிவும் எடுத்துவிட்டாள். அப்படி இருக்கும் தறுவாயில்,

ஆதிமந்தி ஆட்டனத்தியை தேடி பேதுற்றுப் புலம்பிக் கரையோரமாக ஓடினாள். தன் காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக்கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். நீரோட்டத்தின் வழியே கடற்கரையிலே பின்சென்று, மலையொத்த தோள்கள் கொண்டவனே என்று கதறினாள்.

கண்டவர்கள் எல்லோரிடமும் மயக்கமுற்று வருந்தி வினாவினாள். இதை மருதியும் கேட்டாள்.

ஆதிமந்தி கூறிய அடையாளங்கள், தான் காப்பற்றிய தன் மனதை கவர்ந்த தன் தலைவனாக முடிவெடுத்த இவனின் அடையாளங்களுடன் ஒத்துப்போவதை கண்டு திடுக்கிட்டாள்.

அவனைப் பார்த்ததாக யாராவது சொல்ல மாட்டார்களா என்று ஆதிமந்தியின் நெஞ்சின் ஏக்கம் அவள் வினாவில் இருந்து நெடுமூச்சாய் வெளிப்படுகிறது. அந்த நேரத்தில் உண்மை தெரிந்துகொண்ட மருதி அட்டனத்தியை ஆதிமந்தியிடம் ஒப்படைத்து “இதோ!” என்று அவள் காட்ட, ஆட்டநந்தியைக் கண்டு சந்தோஷத்தில் அவள் கன்னம் மீண்டும் நனைகிறது இந்த நனைதல் சூடாய் இல்லை. சுகமாய் இருக்கிறது. அந்த சுகத்தோடு வெட்கமும் சேர்ந்து அவள் கன்னம் சிவக்கின்றன.

ஆட்டனத்தியை அவளது காதலி ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்ட மருதி தனக்கு வேறு பற்றுக்கோடு இன்மையால் கடலுள் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டாள், அப்படிப்பட்ட சிறந்த சிறப்பினை உடையவள் இந்த கற்பரசி மருதியாகும் என சங்க பாடல் மேலும் கூறுகிறது. என்று விளக்குகிறார் தில்லை விநாயகலிங்கம்.

இந்தக் கதையை பாவேந்தர் பாரதிதாசன் சேர தாண்டவம் என்று நாடகமாக எழுதினார். இதையே தழுவி எடுக்கப்பட்ட படம் மன்னாதி மன்னன். அதில் அஞ்சலிதேவி தண்ணீரோடு போன எம்.ஜி.ஆரைத் தேடி காவிரித்தாயே காவிரித்தாயே என்று பாடுவார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.