இந்து ஆலய விவகாரங்களை சில சுயநல அரசியல் வாதிகள் அரசியலாக்கி வருகின்றனர்.
சம்பவங்களை அலசி ஆராய்ந்து அதற்குரிய ஆக்கபூர்வமான நட வடிக்கைகளில் இறங்காமல் தமது
சுயநல அரசியலுக் காகவும் மக்கள் வாக்குகளை பெறுவதற்காகவும் இவ்விவகாரங்களை கையாள்வது
மிகவும் மனவேதனைக்குரியது என ஜனாதிபதியின் இந்துமத அலுவல்கள் விவகார இணைப்பாளர்
பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.
ஹாலிஎல உடுநுவர காளியம்மன் சிலை பாதிப்புக்கு ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான்
உடனடியாகவே மூன்று லட்சம் ரூபா கையளித்துள்ளார். தம்புள்ள காளியம்மன் கோவில்,
கொள்ளுப்பிட்டி பூமாரியம்மன் கோவில் போன்ற விவகாரம் தொடர்பாக கொழும்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், மதவிவகார அமைச்சரும் பிரதம மந்திரியுமான
தி.மு.ஜயரட்ண அவர்களுக்கு தெளிவான விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். பொன்னாலை வரதராஜ
பெருமாள் ஆலய நகை திருட்டு பற்றி வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர்
என்.திரிலோகநாதன் ஜனாதிபதியின் நேரடி கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளாகும், வெறுமனே அரசினை குற்றம்
சொல்லி தமிழ் மக்களிடம் வாக்கு வாங்க நினைப்பது தவறான விடயம் யுத்தகாலத்தில் யாழ்
நகரில் சில ஆலயங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. அப்போதைய சூழ்நிலையில் இவர்கள் யாரை
குறைபட்டுக் கொண்டார்கள், துணிந்து ஒரு வார்த்தையாவது பேசியிருப்பார்களா? எனவே
தற்போதைய சம்பவங்களுக்கு வெறுமனே அரசையும் அரசை சார்ந்தவர்களையும் குறைசொல்ல
முயலக்கூடாது என பாபுசர்மா மேலும் தெரிவித்துள்ளார்.