இப்போது என்கையில் எதுவுமில்லை
இருந்தபணம் வளவுவாசல் எல்லாம் போச்சு!
எப்போதும் பிள்ளைகளின் நிழலில் வாழ
எண்ணியது எல்லாமே கனவாயாச்சு
அப்பாவின் இயல்புகுணம் அறிந்தும் நீங்கள்
ஆதரவு இல்லாமல் அலைந்து சாக
இப்புவியில் விட்டுவிட்டீர்; கவலையில்லை
என்றோ ஒருநாளிலிதை உணர்ந்தால் போதும்
-*-
இருள்நிலவு எல்லோர்க்கும் வந்து போகும்
இன்றெனக்கு இருட்டுத்தான் நிலவும் ஒரு நாள்
வருமென்று நம்பிநானும் வாழுகின்றேன்.
வயதெனக்கு மட்டுமல்ல உங்களுக்கும்
வரும்; வாதை வருத்தமும் வந்து சேரும்
வாலிபமும் வயோதிபமும் நம்மைத்தேடி
வருமென்ற நியதியதை வாழும்போதே
வாலிபத்தில் நீங்களெல்லாம் உணர்ந்தால் போதும்
-*-
உங்களுக்கும் பிள்ளைகுட்டி பிறக்கும்; நாளை
ஊரெல்லாம் ஓடிவந்து வாழ்த்துச் சொல்லும்
உங்கள் சொந்தப் பிள்ளையுமை ஒதுக்கி வாழும்
ஒருநிலமை வராதவரை வளர்த்தால் நானும்
எங்கிருந்த போதும் நான் வாழ்த்துச் சொல்வேன்.
என்துயரம் என்னோடு தொலைந்து போகும்
உங்கள் வாழ்வு உயரட்டும் ஒரு நாள் அப்பா
உங்களுக்காய் வாழ்ந்தா ரென்று நினைத்தால் போதும்
கள்ளித் தோட்டங்களின் தரிசனம்...!
- முறையூர் சந்திரசேகரன் சசீதரன், ஆரையம்பதி - 01
காலத்தின் கண்ணீர்த்துளி...
கயமைகளின் அரங்கேற்றம்...!
சீலங்களின் சிறைபட்டுச்
சிந்தை கருகிடும் சிந்தனை மொட்டு
சந்நிதி காணாமலே சருகாகும் பரிதாபம்...!
சகத்தினர் மனங்களில் எல்லாமே பகல் வேடம்...!
பரிமாணம் கடந்த பாசம்...
பரிணாமம் தேடினாலோ
பன்னகம் எனக் காணும்...!
பந்தங்களின் பசுஞ்சோலை...!
பன்னீர் மலர்ப் பந்தல்...!
பணத்தாசை மேவியதால் இன்று
உறவெல்லாம் கனல் சொரியும்...!
மனத்தலத்து அசுர கணம்
மயக்கத்தின் பறை முழக்கும்...!
புல்லின் பூந்துளியிலும், புந்தி
பறி கொடுக்கும் எந்தனுக்கோ,
பொருளாதார நலனை மட்டும்
பூஜிப்போர் தம்-
சுவாச ஸ்பரிஸம் கூட, சூரியச்
சுவாலை எனச் சுட்டெரிக்கும்...!
கைப்பி டித்தவள் பாதை மாறினாள்
காலம் செய்த கோலமோ? - அவள்
“ஒப்ப னைக்கென வாழ்ந்த பேதையோ?”
உண்மை இராமனின் சீதையோ?”
மழலை நால்வரைப் பெற்ற பின்னரும்
மனதில் விழுந்தது என்னவோ? - என்
அழுகை காணவே ஆசை வந்ததோ
“அறுந்து போனது பந்தமோ?”
“கையில் என்னிடம் காசிருக்கையில்
கணவன் கண்ணென எண்ணினாள்!”- தினம்
மெய்யில் நோயுமே மொய்த்த போதிலே
மெல்ல விடைபெற உன்னினாள்!
நீதி மன்றிலே ஏற்றி யென்னையே
நிலை குலைத்திட நினைக்கிறாள்! - தன்
“சாதி சனங்களைச் சார்ந்தி ருந்துமே
சந்ததம்துயர் விதைக்கிறாள்!”
“அண்ணன் தம்பியே உலகம் என்கிறாள்
அக்கா மேலெனச் சொல்கிறாள்!” - வெடி
குண்டு போலவே உள்ளம் கூறிடக்
குதறி நாளுமே கொல்கிறாள்!
பிரிய மானஎன் பிள்ளை நான்கையும்
பிரித்து வைத்திடப் பார்க்கிறாள்! - தன்
புருஷன் என்பதை மறந்து, வெளியில்நீ
போக வில்லையா? கேட்கிறாள்!”
ஒட்டி இவளுடன் உலகம் மீதினில்
உயிருக் குயிரென வாழ்வதா? - “உறவை
வெட்டி விட்டுமே விலகி விடுவதா?
வீழ்வதா; இல்லைச் சாவதா?”
என்றென்றும் காதல்!
- என். கே. வேணி -
ஆதவன் உதிக்காமல்
அகிலமே சூனியமாகலாம்
நிரந்தரமாய் நிலவு
மறைந்து வானம்
இருளாகலாம்.
கோள்கள் எல்லாம்
குடைசாய்ந்து குப்புற
விழலாம்
சுனாமி வந்து
எல்லோரையும் சுருட்டிக்
கொண்டு போகலாம்.
ஆழி பொங்கி
அகிலமே அழிந்து
போகலாம்.
பயிர்கள் எல்லாம்
காய்ந்து பூலோகம்
பாலை வனமாகலாம்
பாவை நான்
உன்மீது கொண்ட
காதல் மட்டும்
என்றுமே ஈரமாகவே
இருக்கும்.
நான்
- வெலிமடை ஜஹாங்கிர், புறக்கோட்டை -
சொத்து
சேகரிக்கும் அதிகாரி
என்னிடம் வந்து
என்சொத்துகளின் விபரங்களைக்
கேட்டார்;
“உங்கள் அசையும் சொத்து?”
“பிள்ளைகள்”
“உங்கள் அசையா சொத்து?”
“இதோ”என்று
என் இல்லத்தரசியைக்
காண்பித்தேன்!
“அப்படியானால் நீங்கள்?”
“.....?
நானோ
பழைய சாமான்களை வைக்கும்
பரந்தாவில்...!
காதல்!
- எச். எம். றமீஸ், வாழைச்சேனை -
தொல்லைகள் நிரம்பிய
ஆடம்பர அகராதி
மடையர்கள் வாழும்
மண்ணறை வீடு.
ஆண்கள் தேடும்
கானல் நீர்.
பெண்கள் போடும்
“சீஸன்” ஆடை
பெற்றோர்கள் ஏறும்
தூக்கு மேடை.
கவிஞர்கள் பாடும்
தேசிய கீதம்.
காமுகர்கள் உண்ணும்
மாமிச உணவு.
வரலாறு கண்ட
உண்மைக் காதல்
உடல் வரை சேர்ந்ததல்ல.
உயிர் வரை சேர்ந்ததே.