புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

 
இராமாயணம்

இராமாயணம்

பிறகு சீதைக்காகவும் மரவுரி கொண்டுவந்தாள் கைகேயி. அதை வாங்கி சீதை இன்னது செய்வது என்று தெரியாமல், ஒரு கணம் திகைத்து நின்றாள். அவள் இதற்கு முன் இத்தகைய ஆடையை உடுத்தினதில்லையல்லவா!

பக்கத்தில் கந்தர்வ ராஜனைப் போல் அழகு வீசிக் கொண்டு நின்ற ராமனைப் பார்த்துக் கொஞ்சம் கூச்சத்துடன், “இதை எப்படிக் கட்டிக்கொள்வது, சொல்வீர்” என்றாள்.

ராமன் அதை எடுத்துச் சீதை உடுத்தியிருந்த பட்டின் மேல் மரவுரியையும் உடுத்தித் தானே மூடிபோட்டான். அச்சமயம், பார்த்துக் கொண்டிருந்த அந்தப்புர ஸ்திரீகள் அனைவரும் ‘கோ!’ என்று அழுதார்கள். தசரதன் நினைவு இழந்துவிட்டான்.

மூர்ச்சை தெளிந்த பிறகு, கைகேயியை அனைவருக்குமெதிரில் தசரதன் மிகக் கடுமையாகத் திட்டினான். அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. தவிர, இப்போது யார் என்ன செய்ய முடியும்? சீதை வனம் போவது கைகேயிக்காக அல்ல. ராமனுடன் வனம் போவதிலேயே அவள் சுகம் கண்டாள். யார் சொல்லியும் அவள் நிற்கமாட்டாள். போகும் போது தரையைப் பார்த்தவண்ணம் அரசனை வணங்கி ராமன் சொன்னான்:

“தந்தையே! தாய் கெளசல்யா தேவியை இவ்விடம் விட்டுவிட்டுப் போகிறேன். ஒப்பற்றவள். யார் பேரிலும் அவளுக்குக் கோபமில்லை. மகாராஜனே! அவளைச் சரியாகப் பார்த்துக் கொள்ளவும். என்னைவிட்டுப் பிரிந்து இதற்குமுன் அவள் கண்டிராத துக்கத்தில் - பெருந்துயரக் கடலில் மூழ்கினாளாயினும் உமக்காக உயிரை வைத்துக் கொண்டிருக்கிறாள். நான் வனத்திலிருந்து திரும்பி வரும்போது அவளை நான் இங்கேயே காணவேண்டும். யமாலயத்தில் தேடும்படி நேராமல் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று துக்கம் தாங்காமல் சொன்னான்.

ராமன் இப்படிச் சொல்லிவிட்டு வெளியே செல்லும் காட்சியைப் பார்க்கக் கிழ அரசனால் சகிக்க முடியவில்லை. கண்களைக் கைகளால் மூடிக்கொண்டான்.

வனம் சென்றனர்

குமாரன் மரவுரி தரித்துக் கடைசியாகப் பேசியதைக் கேட்ட அரசன், மனமுடைந்து போய்ப் படுக்கையில் கிடந்தான். ராமனை நினைத்துக் கொண்டு அழுதான், பேசமுடியவில்லை.

பேசுவதற்குக் கொஞ்சம் சக்தி வந்ததும், “நான் எத்தனையோ கன்றுகளைக் கொன்று, தாய்ப்பசுக்களை இம்சித்திருக்க வேண்டும். இல்லாவிடில் இந்தத் துக்கம் எனக்கு நேர்ந்திருக்காது. மரணமும் நாம் வேண்டுகிறபோது நம் இஷ்டப்பிரகாரம் வராது. கைகேயியினுடைய இம்சையை நான் அனுபவிக்க வேண்டியதாக இருக்கிறது.”

இராமாயணம்

“அக்கினி தேவனைப் போல் எழில் கொண்ட என் மகன், தன் உடையைக் கழற்றிவிட்டு மரவுரியைத் தரித்தான். நானும் பார்த்துக்கொண்டு உயிருடன் இருக்கிறேன். ராமா ராமா ராமா வனம் போய்விட்டாயா?” என்று முணு முணுத்துக் கொண்டு படுக்கையில் அரை நினைவாகக் கிடந்தான்.

பிறகு தெளிந்து, “சுமந்திரனே, ரதம் கொண்டு வந்து குழந்தைகளையும் ஜானகியையும் ஏற்றிக் கொண்டு ராஜ்யத்து எல்லை வரையில் போ!” என்றான்.

லக்ஷ்மணன் சுமித்திராதேவியின் பாதங்களைத் தொட்டு வணங்கி “அம்மா!” என்று சொல்லி வேறு பேச்சில்லாமல் நின்றான்.

அவனைக் கட்டியணைத்துச் சுமத்திரை, உச்சிமோந்து, “நீ அண்ணன் பேரில் வைத்திருக்கும் அன்பே போதும். உன்னைப் பெற்றதன் பெரும் பாக்கியம் அடைந்து விட்டேன். குழந்தாய், ராமனைக் காப்பது உன் கடமை, வனத்தில் மிக ஜாக்கிரதையாக அண்ணன் பக்கத்தில் எப்போதும் இருக்க வேண்டும். தம்பிக்கு அண்ணன் குருவும் அரசனுமேயாவான். இது நம் குலத்தின் தருமம். போய் வருவாய் லக்ஷ்மணா! காட்டில் ராமனே உனக்குத் தந்தை. ஜானகியே தாய். இதை அறிவாய். வனத்தை அயோத்தியாகவே பாவிப்பாய், சந்தோஷமாகப் போ, என் அன்புக்குரிய மகனே!” என்றாள்.

ராமாயணக் கதையில் அதிகம் பேசாத ஞானி, எதையும் முதிர்ந்த அறிவுடன் சரியாக உணர்ந்து நடந்து கொள்கிறவள் சுமித்திராதேவி. ராமனுடைய அவதார ரகசியம் சுமித்திரைக்குத் தெரிந்திருந்ததாகப் பெரியோர்கள் சொல்லுவார்கள். கெளசல்யா தேவியைப் போல் மகனைத் தடுத்துப் பேசாமல் “போய் வருவாய்” என்று சுமித்திரை தன் மகன் லக்ஷ்மணனுக்குத் தைரியமாகச் சொன்னாள்.

“ரதத்தில் ஏறுவாய் சக்கரவர்த்தித் திருமகனே! புகழின் சிகரமே! உனக்கு மங்களம்! எங்கு செல்லவேண்டுமோ, சொல்லுவாய், உனக்கு மங்களம்! பதினான்கு வருஷம் இப் பொழுதிலிருந்தே ஆரம்பமாகிவிட்டது ராஜகுமாரா!” என்றான் சுமந்திரன்.

சீதை சிரிப்பும் சந்தோஷமுமாகத் தேரில் ஏறினாள். அவளுக்கு வேண்டிய துணிமணிகளையெல்லாம் மாமி கெளசல்யை கட்டிக் கொடுத்தாள். இரு சகோதரர்களுடைய கவசங்களும் ஆயுதங்களும், கிழங்கு தேடி வெட்டிக் கொள்வதற்கான குந்தாலியும் கூடையும் தேரில் வைக்கப்பட்டன. வனவாசத்துக்கு முக்கியமாகக் கூடையும் குந்தாலியும் வேண்டும்.

ராம லக்ஷ்மணர்களும் ஏறினார்கள். சுமந்திரன் தேரை ஓட்டினான்.

இந்தக் கட்டத்தில் கொஞ்சம் நின்று, நாம் ஆண்டவனைத் தியானிக்கலாம். வனவாசம் ஆரம்பமாகிய இந்தப் புண்ணிய கட்டத்தில் நம்முடைய பாப எண்ணங்களை விலக்கித் தூய்மையடைய விரும்பிப் பிரார்த்திப்போமாக. சத்தியம், தீரம், அன்பு இவை ராமாயணத்திலிருந்து நாம் பெறும் பிரசாதம். அதற்காகவேதான் ராமாவதாரம். மரவுரி உடுத்திய சக்கரவர்த்தித் திருமகனையும், தம்பி லக்ஷ்மணனையும், ஜனாகியையும் மனத்தில் நிறுத்தி, ஆண்டவன் அருட்பிரசாதத்தைக் கேட்போமாக.

“இழுத்துப் பிடி, இழுத்துப்பிடி, சாரதியே! ரதத்தை மெல்ல ஓட்டு! ராமன் முகத்தையாவது நன்றாகப் பார்ப்போம்” என்று தெருவில் நின்ற ஜனங்கள் கத்தினார்கள்.

“ஐயோ, இப்படிப்பட்ட புதல்வர்களைப் பெற்றுவிட்டு, காட்டுக்கு அனுப்புகிறார்களே! இவர்களைப் பெற்ற தாய்மார்களுடைய வயிறு எரியாதா? உயிர் நிற்குமா? பார்த்தாயா வைதேஹியை? இவளல்லவோ புண்ணியவாதி! இந்த லக்ஷ்மணன் அல்லவே பாக்கியவான்! இவனல்லவோ ஒரு தம்பி! தருமம் அறிந்த வீரன்”

இப்படியெல்லாம் பேசிக் கொண்டு, ரதத்தைத் தொடர்ந்து நகரத்து ஜனங்கள் ஓடினார்கள். அவர்களுடைய துக்கம் ஆறாகப் பெருகிற்று.

ஒரு பக்கம், “ரதத்தை வேகமாகச் செலுத்து” என்கிறான் ராமன். ஜனங்களோ ‘மெள்ள மெள்ள’ என்கின்றார்கள். கூட்டமோ மிகப் பெருங் கூட்டமாகப் போயிற்று.

எப்படியோ சமாளித்துக்கொண்டு சுமந்திரன் ரதத்தை அயோத்தியை விட்டு வெளியே செலுத்தினான். நகரம் துக்கத்தில் மூழ்கிற்று. ஒவ்வொரு வீட்டிலும் கண்ணீரும் உபவாசமும் நிந்தனையுமாக இருந்தன.

அரசன் அந்தப்புரத்தைவிட்டு வெளியே வந்து, ரதம் புறப்பட்டதைப் பார்த்துக்கொண்டு வெகுநேரம் நின்றான். தேர் கிளப்பிய தூசியையே ராமனாகப் பாவித்து, அந்தத் தூசி கண்ணுக்குத் தெரியும் வரையில் பார்த்துக்கொண்டு நின்றான். அந்தத் தூசியும் மறைந்து போனபின். ‘ஐயோ!’ என்று கதறிக் கீழே விழுந்தான். ஒரு பக்கம் கெளசல்யையும், ஒரு பக்கம் கைகேயியும் இருந்தார்கள்.

தசரதன் கைகேயியைப் பார்த்துச் சொன்னான். “பாவியே என்னைத் தொடாதே. நெறி தவறியவளே, உன் முகத்தைப் பார்க்க எனக்கு வேண்டியிருக்கவில்லை. உனக்கும் எனக்கும் சம்பந்தம் அற்றது. உன்னை விட்டேன்! விட்டேன்!” என்றான்.

“பரதனும் இதற்குச் சம்மதித்து ராஜ்யத்தைச் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டானேயானால், எனக்காக அவன் நீர்க்கடன் செய்தாலும் அது என்னைச் சேராது” என்றான்.

“ராமன் எவ்வாறு காட்டில் வசிப்பான்? கல்லோகட்டையோ தலைக்கு வைத்துத் தரையிலா படுப்பான்? ஐயோ, அவன் எவ்வாறு கிழங்கும் காயும் உண்டு பிழைப்பான்?”

இப்படிப் பலவாறு பிரலாபித்தான். தானே நெருப்பில் கை வைத்துக் கையைச் சுட்டுக்கொண்டு அழுவதுபோல், தசரதன் தானே செய்த காரியத்தின் முடிவை எண்ணி எண்ணிப் பிரலாபித்தான்.

“கைகேயி, நீ சுகமாக இரு. உன் காரியத்தை நடத்தி முடித்தாய் அல்லவா? விதவையாகிச் சந்தோஷமாக இரு!” என்று அவளை நினைத்துக் கோபாவேசமானான். மயானத்தில் ஸ்நானம் செய்து திரும்பிய நிலையில் அந்தப் புரம் போய்ச் சேர்ந்தான்.

“இங்கே வேண்டாம். என்னைக் கெளசல்யை வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள்!” என்றான்.

அவ்வாறே செய்தார்கள். கெளசல்யா தேவியின் அந்தப்புரத்தில் தச ரதன் பிரலாபித்துக் கொண்டு படுத்தான். நடுராத்திரியில் “கெளசல்யா, நீ இருக்கிறாயா? கைகளால் தொட்டுக் காட்டு. என் கண்களில் திருஷ்டி போய்விட்டது, ராமனுடன் போய்விட்டது” என்றான்.

கெளசல்யா தேவியின் துக்கமோ மிகப் பெரிது. தன் துக்கத்தையும் பொறுத்து, அவள் என்ன சமாதானம் சொல்லமுடியும்?

“இராத்திரி நேரங்கூட நடு மத்தியான வெயிலைப் போல் உடலைச் சுடுகிறதே” என்று அவளும் அழுதாள். சுமித்திரை கெளசல்யைக்குச் சொன்னாள். “அக்கா! சாஸ்திரமும் தருமமும் தெரிந்த நீ ஏன் துக்கப்படுகிறாய்? மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய நீ இப்படித் தைரியம் இழக்கலாகாது. சத்தியத்துக்காக அல்லவே ராமன் வனம் சென் றிருக்கிறான்! ராஜ்யத்தைத் துச்சமாக எண்ணித் தந்தையைச் சத்தியவான் ஆக்குவதே தன் கடமை என்று வனம் சென்ற தீரனை மகனாய்ப் பெற்ற நீ அல்லவோ பாக்கியசாலி!

கஷ்டமான தருமத்தைக் குறைவற நடத்திப் பயனடையும் உன் மகனைப்பற்றி நீ துக்கப்படலாமா? முன்னோர் வழியில் நடந்து அனந்தமான - முடிவில்லாத - புகழ் பெறும் ராமனைப்பற்றி நாம் துயரப்படலாகாது.

லக்ஷ்மணனும் அவனுடன் சென்றானே என்று என் மகனைப் பற்றி நான் பெருமைப் படுகிறேன். வனவாசத்தின் கஷ்டங்களை நன்றாகத் தெரிந்து ஜனாகி என் மகனுடன் சென்றிருக்கிறாளே! ராமனுடைய கீர்த்தி மேலோங்கிப் பிரகாசித்து உலகமெல்லாம் ஒளிவீசும். நாம் துக்கப்படலாகாது. மகாத்மாவான உன் மகனுடைய பரிசுத்தமும் உத்தம குணங்களும் அவனுக் குப் பூரண கவசமும் காப்புமாகும். சூரியனுடைய வெயில் அவன் உடலின்மேல் பட்டாலும் அது சுடாது. காற்றும் அவன்மேல் குளிர்ந்து வீசும்.

இரவில் தூங்கும்போது அவனுடைய புண்ணிய தேகத்தைச் சந்திரனுடைய கிரணங்கள், பெற்ற குழந்தையைத் தகப்பன் தழுவி ஆலிங் கனம் செய்வதுபோல், அவன்மேல் வீசிக் காப்பாற்றும். நம்முடைய வீரராகவனைப் பற்றி நீ கவலைப்படாதே! எந்தப் பகைவனும் அவனை எதிர்த்து உயிருடன் மீள முடியாது. நம்முடைய ராமன் சர்வ கல்யாண குணங்களும் பொருந்தியவன். சூரன், அவன் நிச்சயம் திரும்பி வந்து, அயோத்தியாதிபதியாகிச் சிம்மாசனம் ஏறுவான். லோகநாதனே இராமன்.

உன் மருமகள் சீதை அவனுடன் சென்றிருக்கிறாள். சீதை வேறு, லக்ஷ்மி வேறல்ல. திரும்பி வந்ததும் பூதேவியையும் ராமன் அடைவான். நீ சந்தேகப்படாதே. அவன் வனம் போவதைக் கண்ணுற்ற நகரத்து ஜனங்களு டைய அநுதாபத்தைப் பார்த்தாய். என் வீரமகன் வில்லும் கத்தியும் கையில் தாங்கி, அவனைக் காக்கக் கூடவே போயிருக்கிறான்.

ராமனுக்கு ஒரு குறையோ பயமோ கிடையாது. செய்த பிரதிக்ஞையை முடித்துவிட்டு அவன் திரும்பி வருவதை உன் கண்ணாலேயே பார்ப்பாய்; சோகத்தை விடு; நான் சொல்வது சத்தியம். சந்திரனைப்போல் பூரண கலையுடன் திரும்பி வந்து, உன் பாதங்களைத் தொட்டு வணங்கி நிற்பதைப் பார்ப்பாய்; அப்போது உன் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகும்.

என் அன்புக்குரிய கெளசல்யே துக்கம் வேண்டாம். மூவரும் திரும்பி வருவார்கள். துக்கப்படும் அந்தப்புரத்து ஜனங்களுக்கு ஆறுதலும் தைரியமும் நீ சொல்லவேண்டும். அப்படியிருக்க, நீயே மனமுடைந்து நிற்கிறாய்? வேண்டாம். இந்த உலகத்தில் ராமனைப்போல் தருமத்தில் உறுதியாய் நிற்பவன் வேறு யார்? அதைப்பற்றி நாம் துக்கப்படலாமா? நீ பெருமைப்பட வேண்டும்”

இவ்வாறு சுமித்திரை தேற்றினாள். சுமித்திராதேவியின் தைரியமான வார்த்தைகளைக் கேட்டு, கெளசல்யாவின் துக்கம் ஓரளவு அகன்றது.

ராமனுடைய தேருடன் கூடவே நகரத்து ஜனங்கள் பெருங்கூட்டமாகத் தொடர்ந்து சென்றார்கள். “வனம் போகவேண்டாம். திரும்புங்கள்” என்று ரதம் போவதைத் தடுத்துக் கொண்டு ஓடினார்கள்.

“தகப்பனாரைச் சத்திய சந்தராகச் செய்வதற்காக நான் வனம் போகிறேன். இதற்கு நீங்கள் துக்கப்படலாகாது. என்னை நிறுத்த வேண்டாம்.” என்று எவ்வளவு கேட்டுக் கொண்டும் அவர்கள் விடவில்லை. கூடவே சென்றார்கள். ராமன் பேரில் அவர்களுக்கிருந்த அளவற்ற பிரியத்தினால் என்ன சொல்லியும், “வனம் போகவேண்டாம்! வனம்போக வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டு ரதத்தோடு ஓடினார்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.