புத் 65 இல. 29

விஜய வருடம் ஆடி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரமழான் பிறை 12

SUNDAY JULY 21 2013

 

சி.ஐ.ஏ.யின் பிடியில் ட்வார்ட் ஸ்னோடன்?

சி.ஐ.ஏ.யின் பிடியில் ட்வார்ட் ஸ்னோடன்?

சீமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரி எட்வார்ட் ஸ்னோடனின் விவகாரம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இவ்விடயம் குறித்து அமெரிக்காவின் நேச நாடுகள் கவலையும், எதிரி நாடுகள் ஆனந்தமும் கொண்டுள்ளன.

தனது தேவைக்கேற்றாற்போல உலக நாடுகளை பணிய வைக்கவும், ஆட்டிப்படைக்கவும் அமெரிக்காவுடைய உளவுத்துறையான சி.ஐ.ஏ.யின் தகவலறியும் செயற்பாடுகளே பிரதான காரணம்.

எதிரி நாடுகளின் எதிர்கால இராணுவ, பொருளாதார, அரசியல் திட்டங்கள் வியூகங்களை முன்கூட்டியே இரகசியமாக அறிந்து கொண்டு அவற்றை முடங்கச் செய்வதனூடாக அந்நாடுகளின் வளர்ச்சிகளை தகர்த்தெறிவதே சி.ஐ.ஏ.யின் வேலை.

அமெரிக்காவுடைய நம்பிக்கை, நாட்டுப்பற்று, வினைத்திறன், சிந்தனை ஆற்றலுடைய இராணுவ அதிகாரிகளே சி.ஐ.ஏ.யில் பணிபுரிபவர்கள். இதில் பணிபுரிந்தவர்கள் இறக்கும் வரையும் சி.ஐ.ஏ.யின் இரகசியங்களை பாதுகாப்பர். இவ்வளவு காலமும் பேணப்பட்டு வந்த சி.ஐ.ஏ.யின் பாரம்பரியங்களுக்கு எதிராக எட்வார்ட் ஸ்னோடன் இரகசியங்களை கசிய விட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் எல்லா வகையிலும் போட்டி போட்டுக்கொண்டு சம பலமாக வளரும் ரஷ்யாவில் வைத்தே ஸ்னோடன் இரகசியங்கள் சிலதை கசியவிட்டார்.

உள்நாட்டு குடிவரவு அதிகாரிகளை வரவழைத்து ஸ்னோடனின் விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்வதென்று தலையை சொறிகின்றது ரஷ்யா.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் இவ்விடயம் தொடர்பாக வினவப்பட்ட போது “ஸ்னோடனின் வாழ்க்கை, விதியைப் பற்றி என்னால் எப்படிக் கூற முடியும்” என்று பதிலளித்துள்ளார்.

அமெரிக்காவின் நேரடிப் பகையை உருவாக்க ரஷ்யா விரும்பவில்லை என்பதையே புட்டினின் பதில் காட்டுகிறது. ஸ்னோடனை ஒப்படைக்குமாறு அமெரிக்கா பல தடவை கேட்டுவிட்டது. ரஷ்யா இதுவரைக்கும் தெளிவான பதிலை வழங்குவதாக இல்லை. புட்டினின் பதிலும் நழுவல் போக்கையே காட்டுகின்றது. தற்காலிகமாவது தனக்கு புகலிடம் வழங்குமாறு எட்வார்ட் ஸ்னோடன் ரஷ்யாவிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எதிரி நாடுகளிடம் அடைக்கலம் கோரி ஸ்னோடன் சென்று விட்டால் அமெரிக்காவின் நிலைமை மோசமாகிவிடும். ஸ்னோடனை ஏற்றுக்கொள்ள ரஷ்யா தயங்கினாலும் தென்னமெரிக்க நாடுகள் ஸ்னோடானைப் பொறுப்பேற்க ஏட்டிக்குப் போட்டியாக உள்ளன.

வெனிசூலா, பொலிவியா நிகரகுவே ஆகிய மூன்று நாடுகளும் ஸ்னோடனை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளன. ரஷ்யாவில் நடைபெற்ற எரிவாயு மாநாட்டில் கலந்து கொள்ள பொலிவிய ஜனாதிபதி அண்மையில் ரஷ்யா சென்றிருந்தார்.

அங்கிருந்து மீண்டும் நாடு திரும்புகையில் ஸ்னோடனையும் விமானத்தில் ஏற்றி வருவதாக வதந்தியும் பரவியது. உடனடியாக உஷாரடைந்த அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளின் வான் எல்லைக்குள் பொலிவியா ஜனாதிபதியின் விமானம் பறப்பதற்கு தடைவிதித்தது. நிலைமை மோசமடைந்ததால் ஆஸ்திரியாவில் விமானம் தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட்ட பின்பே மீண்டும் பறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது. எப்படியாயினும் ஸ்னோடன் எதிரி நாடுகளுக்குச் சென்று வாழ்வதை அமெரிக்கா விரும்பவில்லை.

ஸ்னோடன் வேறு நாடுகளுக்கத் தப்பிச் செல்வதற்கான சகல தடைகளையும் அமெரிக்கா ஏற்படுத்தி விட்டது. வான், கடல், தரை மார்க்கங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாஸ்போர்ட் உள்ளிட்ட சகல ஆவணங்களையும் அமெரிக்கா ரத்துச் செய்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களாக ஸ்னோடான் ரஷ்யாவின் விமான நிலையத்தில் முடங்கிக்கிடக்கின்றார். ஜி. 20 மாநாடு செப்டெம்பரின் நடுப்பகுதியில் சென்பீட்டரிஸ் பேர்கில் நடைபெறவுள்ளதால் இதில் கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வரவுள்ளார்.

தன்னிடம் இல்லாவிட்டாலும் தனது நட்பு நாடுகளான வெனிசூலா பொலிவியா நிகரகுவே கியூபா ஆகிய நாடுகளிடமாவது ஸ்னோடனை ஒப்படைக்கலாம் என்றே ரஷ்யா விரும்புகின்றது. ஆனால் ஸ்னோடன் என்ற தனிமனிதனுக்காக முழுப் பிராந்தியத்தையே யுத்தத்துக்குள் திணிக்க வைப்பதை ரஷ்யா விரும்பவில்லை.

எவ்வாறாவது ரஷ்யா தனக்கு இடைக்காலப் புகலிடம் வழங்கினால் இங்கிருந்து தென்னமெரிக்க நாடுகளுக்குச் சென்று விடலாம் என்பதையே ஸ்னோடன் எதிர்பார்த்துள்ளார். அமெரிக்காவின் இராணுவ, அரசியல் பொருளாதாரம் உள்ளிட்ட அத்தனை இரகசியங்களையும் தலைக்குள் வைத்துள்ள ஒரு நபரை அமெரிக்கா சும்மா விட்டு விடுமா. எதிரிகளின் கைகளில் எவையும் போய்விடக் கூடாது என்று நினைக்கும் நரியல்லவா அமெரிக்கா.

இதற்கு முன்னர் அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்று ஈரானின் வான் எல்லையால் பறந்த போது ஈரான் தனது திறைமையினால் அவ்விமான த்தை தரையிறக்கியது.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அமெரிக்கா தனது விமானத்தை மீட்டெடுப்பத ற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டது. ஈரான் விமானத்தை நிலத்துக்கடியில் பாதளாக் கிடங்கில் கொண்டு சென்று அமெரிக்க விமானத்தை அணு அணுவாக ஆராயத் தொடங்கியது. உடனடியாகச் செயற்பட்ட அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் விமானத்தை ஈரானிடமிருந்து மீட்காவிட்டாலும் பரவாயில்லை அதன் தொழில்நுட்ப இரகசியங்களை ஈரான் அறிந்து கொள்ள முடியாதவாறு விமானத்தை குண்டு வைத்தாவது தகர்த்து விடுங்கள் என்றார். விமானமொன்று எதிரியிடம் சிக்கிவிட்டதற்காக இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்த அமெரிக்கா சி.ஐ.ஏ. உளவாளி ஒருவர் எதிரி நாடுகளிடம் புகலிடம் கோருவதை விரும்புமா.

அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகனின் இணையத்தளத்திற்குள் நுழைந்து அங்குள்ள இரகசியங்களை ரஷ்யா களவாக திருடி வந்துள்ளதாம். அந்த இரகசியங்களில் மிக விரைவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளியாக விருந்த 15 போர் விமானங்கள் பற்றிய தகவல்களும் உள்ளதாகப் பேசப்படுகிறது. பெண்டகனின் இணையத் தளத்தில் நுழையும் ஆற்றலையும், அறிவையும் துணிவையும் சீனாவுக்கு யார் கொடுத்தார்கள்என்று அமெரிக்கா ஆச்சரியமடைந்தது.

ஈரானால் இறக்கப்பட்ட அமெரிக்க விமானத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களை ஈரான் இரகசியமாக சீனாவுக்கு வழங்க சீனா தனது உச்சக்கட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்டகனின் இணையத்துக்குள் நுழைந்து இருக்கலாம் எனப் பின்னர் சந்தேகிக்கப்பட்டது. இவ்வாறு பல வழிகளிலும் சோதனை வேதனைகளைக் கண்டு வரும் அமெரிக்கா ஸ்னேனாடனின் விடயத்தில் பாராமுகமாகச் செயற்படாது என்பதே பலரது கருத்து. ஈரான் விஞ்ஞானிகளை கவனமாக நோக்கி வந்த அமெரிக்கா அவர்களின் செயற்பாடுகளை முடக்கியது.

புனித ஹஜ்ஜுக்காக சவூதி அரேபியா வரும் ஈரான் விஞ்ஞானிகள். சிந்தனையாளர்களை கடத்துவதற்கென்றே விசேட திட்டம் வகுத்து செயற்பட்டது சி.ஐ.ஏ. இதே போன்று வெனிசூலாவின் எதிர்க்கட்சிகளை சுறுசுறுப்பாக்கி முன்னாள் ஜனாதிபதி ஹுகோ சாவெஸை ஆட்சியிலிருந்து அகற்ற அயராது பாடுபட்டது சி.ஐ.ஏ. இதேபோன்று அல்கைதா தலைவர் ஒஸாமா பின்லேடனின் மறைவு வாழ்க்கை பற்றி துல்லியமாகத் தகவலறிந்து கச்சிதமாக பணியை முடித்தது சி.ஐ.ஏ. லிபியா, ஈராக் உள்ளிட்ட பல நாடுகளையும் பதம்பார்த்ததும் சி.ஐ.ஏ. தான்.

இப்போது சொல்லப்பட்டவைகள் சமீபகாலத்தில் நடந்தவையே. இதற்கு முன்னர் மற்றும் இதற்குப் பின்னர் நடந்தவை நடக்கப் போவதை சி.ஐ.ஏ. எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்ற தகவல் ஸ்னோடனிடம் இருந்தால் அமெரிக்காவின் எதிரி நாடுகள் விழிப்பாகச் செயற்படவும் சி.ஐ.ஏ.யின் திட்டங்களை தவிடு பொடியாக்கவும் வாய்ப்பாக அமைந்து விடும். இவைகள் எல்லாவற்றையும் முறியடிக்க ஸ்னோடனை அமெரிக்கா கேட்கின்றது.

ரஷ்யாவின் பாதுகாப்பு தலைமையகமான க்ரம்லின் இது தொடர்பாக கடும் போக்கான கருத்துக்கள் எதையும் தெரிவிக்க வில்லையென்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. ஸ்னோடனுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்து அவரை சிறையில் வைக்கும் நோக்குடனே அமெரிக்கா ஸ்னோடனைக் கேட்பதாக க்ரம்லின் பேச்சாளர் விளக்கினார்.

ஒரு நாட்டின் இரகசியங்களை அம்பலப்படுத்தினார் என்ற குற்றத்துக்காக ஸ்னோடன் மீது வழக்குத் தொடரப்படலாம். இவ்வாறான வழக்கொன்றில் எட்வார்ட் ஸ்னோடன் எவ்வாறு விசாரிக்கப்படுவார் என்பதை எவராலும் கற்பனையே செய்ய முடியாது. ஏற்கனவே ரஷ்யா, பொலிவியா போன்ற நாடுகளிடம் சி.ஐ.ஏ.யின் இரகசியங்கள் திட்டங்களை ஸ்னோடன் வெளியிட்டுள்ளாரா என்பதை அறிந்து கொள்வதில் அமெரிக்கா ஆர்வமாக இருக்கும். ஒருவாறு அவ்வாறு இரகசியங்களை எதிரி நாடுகள் ஸ்னோடனிடமிருந்து பெற்றிருந்தால் அந்நாடுகளுக்கு ஏதாவது தொந்தரவுகளை அமெரிக்கா வழங்கலாம். இந்தச் செயற்பாடுகள் இராஜதந்திர உறவுகளைப் பாதிக்கின்றளவுக்கு நிலைமை களை விபரிதமாக்கும்.

இதை மையமாக வைத்தே அமெரிக்கா வின் இரகசியங்களை ஸ்னோடன் எந்த நாடுகளுக்கும் வழங்குவ தில்லை என்று வாக்களித்தால் புகலிடம் வழங்குவது தொடர்பாக யோசிக்கலாம் என ரஷ்யா முன்னர் கூறியிருந்ததையும் நினைவு கூரவேண்டியுள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.