ஜனவரி 6,7,8,9ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா
தமிழின் சர்வதேசப் பார்வைக்கு தொடக்கப் புள்ளியாகும் எனவும் அம்மாநாடு மிக சிறப்பாக
நடைபெற வாழ்த்துகிறேன் என வாழ்நாள் பேராசிரியர் கார்த்திக்கேசு சிவத்தம்பி தனது
வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று தமிழர் அல்லாத நாடு இல்லை என்ற அளவிற்கு உலகின் பல பாகங்களிலும் தமிழர்கள்
வசிக்கின்றனர். இந்தியா இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா தவிர்ந்த
நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் அடையாளங்களைப் பேணிக்கொள்வதற்காக தமிழில் ஆக்க
இலக்கியம் படைப்பது இன்று வழக்கமாகிவிட்டது. இதனால் புகலிடத் தமிழ் இலக்கியம் என்றே
தனி வகைப்பாடொன்று வழக்கில் உள்ளது.
இச் சூழமைவில் எல்லா நாடுகளையும் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றுகூடுவது மிக
முக்கியமான செய்தியாகின்றது.
தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மாத்திரமல்லாமல்
சர்வதேச நிலையில் தமிழை எவ்வாறு அந்நாடுகளில் உள்ள தமிழர்கள் போற்ற வேண்டும்
என்பதற்கும் அதற்கும் மேலாக அவர்களது பிள்ளைகள் தமிழை அறிந்து கொள்வதற்கும்
படித்துக் கொள்வதற்கும் வேண்டிய வழிவகைகளைச் செய்ய வேண்டுவதற்கு அம்மாநாடு ஓர்
தொடக்கப்புள்ளியாக அமையும் என்று கருதுகிறேன்.
அத்துடன் இவர்கள் தமிழின்
முக்கியத்துவத்தை குறிப்பாக அதன் இலக்கிய பண்பாட்டு வளத்தை தாங்கள் வாழுகின்ற
நாடுகளில் பிரதான மொழிகளிலே எடுத்துக் கூற வேண்டும் என்று அன்புக்கட்டளை கூறி
இம்மாநாடு சிறக்க எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
‘இருந்தமிழே
உன்னிலிருந்தேன் இமையவர்தம் விரந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்” (கொழும்பு கிழக்கு
தினகரன் நிருபர்)