நாகரீகம் வளர்ச்சியடையாத அன்றைய காலத்தில் திருணம் என்ற முறை இல்லை.
தனிமனிதன் தன்னை போன்றவர்களுடன் இணைந்து ஒரு கூட்டமாக வாழ்ந்து போது இன்றைக்கு
நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத மேலை நாட்டுக் கலாசாரமாகிய ஒருவனுக்கு ஒருத்தி
என்றில்லாமல் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் விருப்பப்பட்டவருடன் இணைந்து வாழும்
வாழ்க்கை முறையை மேற்கொண்டனர்.
பெண் தாய்மையடைவதால் சிறப்பானவளாகக் கருதப்பட்டாள். கூட்டத்தில் உள்ளவர்களை
அரவணைத்து வழிநடத்தும் தலைமை பொறுப்புடையவளாக பெண் இருந்தாள். மேலும் ஒரு
எல்லைக்குள் இருப்பவர்கள் வேறு ஒரு கூட்டத்தார் வசிக்கும் எல்லைக்குள் சென்றால்
பாதுகாப்பு கருதி அவர்களை கொல்லக்கூடத் தயங்கமாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில்
கூட்டத்தில் வயது முதிர்ந்த பெண்மணி சமாதான பேச்சுக்காக அந்த இனத்தவர் வசிக்கும்
இடத்திற்கு செல்வாள்.
வயதான பெண்ணை அந்த இனத்தவர் கொல்ல நினைப்பதில்லை. காரணம் அவள் அன்பு அரவணைப்பு
கொண்ட தாய்மைப் பேறு கொண்டவள். அவளால் அவர்களுக்கு தீங்கு நேராது என்ற நம்பிக்கை
கொண்டிருந்தனர். ஆகவே ஆரம்பத்தில் பெண் தலைமைப் பொறுப்பேற்று தன்னுடைய
குழுவிலுள்ளவர்களைப் பாதுகாத்தாள்.
அதன் பின் ஆண் உணவு தேடும் பொருட்டு வேட்டையாடக் காட்டுக்குச் சென்றான்.
வேட்டையாடிவிட்டு களைப்புடன் திரும்பும் அவன் தாகத்துக்கு தண்ணீர் கேட்கவோ, அவனின்
தேவைகளைக் கேட்கவோ தினம் ஒருவரை எதிர்பார்க்க வேண்டியிருந்தது.
அவனின் உடல் சோர்ந்த நிலையில் தோள் சாய அவனின் எல்லா தேவைகளையும் நிறைவேற்ற
உரிமையுடையவளாக ஒரு உறவுக்காக பெண்ணைச் சொந்தமாக்கிக் கொள்ள மனம் ஏங்க ஆரம்பித்ததன்
விளைவாக திருமணமுறை உருவானது.
திருமணத்தின் பிறகு ஆண்தான் பெண்ணின் வீட்டிற்கு சென்று அவளோடு குடும்பம் நடத்துவான்.
பெண்ணின் வீட்டில் பணிவிடைகள் செய்வான். இந்த சூழலில் ஒடுங்கிய அவன் மனம் குரூரமாக
சிந்திக்கத் தொடங்கியது.
ஆண் பெண், என்ற வேறுபாடு வலுப்பெறத் தொடங்கியது. தன்னுடைய
இனத்தில் உள்ள ஒருவன் தலைவனாக இருந்தால்தான் தன்னுடைய ஆசைகளை, தேவைகளை சுதந்திரமாக
செய்ய முடியும் என்ற எண்ணம் தோன்றியது முதல் பெண்ணின் சுதந்திரம் பறிக்கப்பட்டது.
அதற்குப் பின் வந்த காலக்கட்டங்களில் ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் தனக்கு
சொந்தமாக்கிக் கொள்ளலாம். ஆனால் பெண் அவ்வாறு செய்ய இயலாது என்ற விதிமுறைகளை
நடைமுறைப்படுத்தினான். பெண் அடிமைப்படுத்தப்பட்டாள்.
தொல்காப்பியம் நமக்கு கிடைத்த பழைய நூல்களில் ஒன்று. அதில் கூட பெண் என்பவள் இப்படி
இருக்க வேண்டும் என்று விதிகளை சொல்லுகின்றார்.
அகத்திணையில் வரும் ஐந்திணைகளில்
வாழும் மக்களின் குணங்களை அவர்களின் வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டு சொல்லும் போது
தலைவன் போருக்காக வெளியே சென்று பல மாதங்கள் தங்கிவிடுவான். அந்த சூழலில் தலைவி
தலைவனை நினைத்து உருக்கிக் கொண்டிருக்க வேண்டும்.
வழி மீது விழியை வைத்துவிட்டு மனதை
தலைவன் போன இடத்துக்கே அனுப்பிவிட்டு மற்றவர்கள் பார்த்துவிடாத வண்ணம் தன் உடலை
பேணாமல் உண்ண மறந்து, உறங்க மறந்து, அலங்காரம் இல்லாமல் பசலை பாய்ந்து உடல் மெலிந்து
அவள் இருக்க வேண்டும்.
ஆனால் அங்கே போர் நிமித்தமாகவோ, கல்விக் கற்கும் பொருட்டோ,
தூது சொல்லவோ சென்று தலைவன் தலைவியின் பிரிவுத்துயர் தாங்காமல் தன் உடலை பேணி மற்றப்
பெண்களை மயக்கும் வண்ணம் திடமாக உடலை வளர்த்து தன்னுடைய உடல்பசியைக் கூட அடக்க
முடியாமல் பெண்களிடம் செல்கிறான்.
தலைவனின் உடல்பசியை போக்கிய அந்த பெண்ணை பரத்தை
என்று கூறி ஒழுக்கநிலை தவறியவள் என்று தூற்றி, ஒதுக்கி வைத்த சமூகம் அவளிடம் சென்ற
தலைவனை மட்டும் போற்றி புகழ்பாடி பரணிபாடுகின்றது.
ஆண்கள் தங்களின் ஆதிக்கத்தை
நிலைநாட்ட பெண்ணை வீட்டுக்குள் ஒளித்து வைத்து விட்டு தங்களுடைய ஆசைகளை தீர்த்துக்
கொள்ள அங்கீகாரத்துடன் உருவாக்கியதுதான் தாசி என்ற ஒரு பிரிவுப் பெண்கள்.
பிற்காலத்தில் தாசி வேசியாக மாறி இன்று விபசாரியாக உருவெடுத்து பெரும்
சர்ச்சைக்குரியவர்களாக இருக்கிறார்கள். இந்த பெண்கள் தாங்கள் செய்வது தவறல்ல, இது
ஒரு தொழில் என்றும் கூறுகின்றனர். ஒரு வகையில் யோசித்து பார்த்தால் சரி என்றுதான்
தெரிகிறது.
பண்டமாற்று முறை மாதிரிதான் இதுவும், இவனுக்கு உடல் சுகம் தேவை. அவளுக்கு
பணம் தேவை. இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறு இல்லை. ஆனால் இருவரும் இணைந்து
செய்யும் தொழிலில் இன்பம் மட்டும் அவனுக்கு துன்பமும், தூற்றுதலும் அவளுக்கு இது
என்ன நியாயம்?
அன்று படிப்பறிவில்லாதவர்கள் பலர் இருந்தனர். அதனால் பகுத்தறியத் தெரியாததால்
மற்றவர் சொல்லை அப்படியே நம்பி அதை வழிநடத்தினார்கள். ஆனால் இன்று படிப்பறிவும்,
பகுத்தறியும் இருந்தும் நாம் இப்படி இருக்க என்ன காரணம் யோசித்து பாருங்கள்.
பலர் பண்பாடு என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு மறைவில் ஒதுங்குகின்றனர். சிலர்
கலாசாரம் என்ற திரைக்கு மறைவில் இருந்து கொண்டு சுகங்களை அனுபவித்துக்
கொண்டிருக்கின்றனர்.
ஆனால் மக்கள் முன் ஒழுக்கம் என்றால் ஒருவனுக்கு ஒருத்தி,
என்றும் ஆணுக்குப் பெண் அடிமை என்றும் போதித்துக் கொண்டு இருக்கின்றனர். இங்கு இவை
பெண்களுக்கு மட்டுமே போதிக்கப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை.
பெண்கள் கண்ணகியாய் கற்பு நெறியில் வாழ வேண்டும் என்று சொல்கிறார்களே தவிர
ஆண்களிடம் கோவலனாக வாழக் கூடாது என்று வலியுறுத்துவதில்லை. ஆண் பிள்ளையை குழந்தைப்
பருவத்தில் இருந்தே கட்டவிழ்த்து சுதந்திரமாக வளர்க்கிறோம்.
அவனின் எந்த செயலையும்
தட்டிக் கேட்பதில்லை வளரும் பருவத்தில் வயதுக்குரிய பால் கவர்ச்சியின் காரணமாக அவன்
உணர்ச்சிவயப்பட்டு செய்யக்கூடிய செயல்களை கவனிப்பதில்லை. அரும்பும் போது கண்டும்
காணாமல் விட்டுவிட்டு அவனுள் வக்ரம் மரமாக வளர்ந்த பின் வெட்டமுடியாமல்
கவலைப்படுவதில் பயனில்லை.
இன்று பால் உணர்வைத் தூண்டக் கூடிய பத்திரிகை, படங்கள், வீட்டிற்குள்ளேயே வந்து
போதிக்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. அதில் உள்ள நல்ல விஷயங்களை
விட நமக்குப் பாதிப்புகளைத் தரக்கூடிய விஷயங்களை விரும்பித் தேடுகிறோம். குழந்தைகள்
தவறு செய்யும் போது ஆரம்பத்தில் விட்டுவிடுகிறோம். பின் நம்முன்னால் நடக்காதவரை
பரவாயில்லை என்ற நிலைக்கு வந்துவிடுகிறோம்.
ஆனால் பெண் குழந்தையை ஆரம்பத்தில் இருந்தே பாதுகாப்பாகவும் பத்திரமாகவும்
வளர்ப்பதாக எண்ணி கோழையாக வளர்த்து விடுகிறோம். இந்த வளர்ப்பு முறையில்
வித்தியாசப்படுத்துவதால்தான் இன்றைக்கு
ன்றன.
பெண்ணை எவ்வளவுக் கட்டுப்பாடாக வளர்க்கிறோமோ அதில் கால் பங்கு அக்கறையை ஆண்
குழந்தைகள் மீது செலுத்தினோமானால் இந்த வக்கிரங்கள் குறையும். ‘கற்பு பறிபோய்
விடும் கவனமாகப் பார்த்துக் கொள்’ என்று வலியுறுத்துபவர்கள், அதைப் பறிப்பவர்களிடம்
பறிப்பது தவறு என்று வலியுறுத்த ஏன் மறுக்கிறார்கள் என்று புரியவில்லை.
தவறு என்று நாம் எதைச் சொல்கிறோம்? இரு உடல் இணைவதையா? இல்லை இரு உள்ளங்கள்
இணைவதையா? மனம் பொருந்தாக் காதலையும், காமத்தையும் தவறு என்கிறோம். அப்படியானால்
நம்மில் எத்தனை பேர் மனம் பொருந்தி வாழ்கிறோம்? நம் மனதில் ஆழத்தில் சென்று
உண்மையறிந்தோமானால் ஒருவரும் மனம் பொருந்திக் காலம் முடிவும் வரை வாழ்வதில்லை என்று
உண்மைப் புரியும்.
காதல் இயற்கை தரும் துன்பம் கடைசிவரை காதலுடன் இணைந்தால் இன்பமாகத்தான் இருக்கும்.
ஏன் இன்பமாக இருக்கிறது என்று பார்த்தால் - அங்கு நீ, நான் என்ற போட்டி இல்லை.
இருவரும் சமம், அன்பை விதைத்தால் அன்பைப் பெற முடியும். அடிமைத்தனத்தை விதைத்தால்
அதைய அறுவடை செய்ய இயலும். எதைக் கொடுக்கிறோமோ அதை வாங்குகிறோம். அதனால் தான் காதல்
இன்பமாக இருக்கிறது.
ஆனால் திருமணம் என்ற பந்தம் பெண்ணின் சுதந்திரத்தை முழுமையாக பறித்துவிட்டு ஆணின்
தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு ஆயுள் முழுமைக்கும் போடப்பட்ட ஒப்பந்தப்
பத்திரம். அதில் பெண் தன் ஆசை விருப்பங்களைப் புதைத்துவிட்டு இயந்திரம் போல்
செயல்படும் கட்டாயத்துள் திணிக்கப்படுகிறாள்.
இன்று காதலிக்கும் பெண்கள் குறிப்பிட்ட காலம் வரை இன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
ஆணும் பெண்ணும் உடலால் இணையும் வரை இந்த இன்பம் நீடிக்கின்றது. இணைந்த பின்
ஆண்மகிழ்ச்சி யாக இருக்கிறான் ஆனால் பெண் அவமானத்தால் கூனிக் குறுகிபோய்
விடுகிறாள். இந்த வேறுபாடு எதனால் வருகிறது என்றால் பெண்ணின் குழந்தை பருவம் முதல்
அவளுக்கு கற்பு பற்றிய போதனைகள் போதிக்கப்பட்டு ஆழமாக அவள் மனதில்
விதைக்கப்படுகின்றன.