நுளம்புகளின் உண்ணாவிரதப்
போராட்டம் - எங்கள்
இரத்தம் தான் தெம்பேற்றும் பானம்
குடித்துவிட்டு இரவெல்லாம்
கும்மாளம்
‘ஷோ’ பார்த்துத் தொலைந்ததுவே
என் தூக்கம்
விளக்கைப் போட்டால் எனக்குள்
ஏமாற்றம்
அணைத்தவுடன் நன்றி என
என் காதில் அன்புப் பரிமாற்றம்
அன்பு மகன் கன்னத்தில்
மென்மைபார்க்கும்
ஓங்கி ஒன்று விடும்போது
கீ என்று சிரித்து மாறும்
வந்தனர் அன்று காலையில்
நான்கைந்து பேர்கள்
பூக்கவிருந்த பூச்செண்டைத் தூக்கிப் பார்க்க
பூத்திருந்தது புதுப்பூவாக
டெங்கு என்று
விலைபேசிச் சென்றனர்.
ரொக்கமாக ஐயாயிரம் என்று
அக்ரம் ஸலாம்...-
ஹபுகஸ்தலாவை.
அழியாச் சிற்பமாய்...
சிதைந்த கோலங்களுக்குள்
புதைந்த ஆன்மாவை
உசுப்பிய காலந்தான்
என் பாடசாலைக் காலம் - அது
என் உள்ளத்து உணர்வுகளுக்கு
என்றென்றும் உயிரூட்டும்
இனிய பொழுதுகள்!
உயிரற்ற பிணமாக
உறைந்த கனவுகளுக்கு
மை பூசிச் சிரித்தது-என்
பாடசாலை வாழ்க்கை
நாட்டின் அர்த்தத்தையும்
வாழ்க்கையின் அழகையும்
தெளிவாய் உணர்த்திய
அந் நாட்களில் நான்
துளிர் விட்டு வளர்ந்தேன்!
கண்ணுக்கு மை பூசி
நெறி தவறி அலைந்த என்னை
கல்வியால் அலங்கரிக்க
கை கொடுத்து உதவிய
மின்னல் கீற்று
என் பள்ளிப் பருவம்
வேம்பாயிருந்த கல்வியை
தேனாய்ப் பருக வைத்த
உத்வேகம் நிறைந்த வேளைகளில்
நான் என்னையே மறந்தேன்!
தகரமாய்ச் சிதறிய என்னை
தங்கமாய் மாற்றிய
என் பாடசாலை வாழ்வில்தான்
நான் என்னையே அறிந்தேன்!
கற்ற பாடங்களும் பெற்ற தெளிவுகளும் என்றும்
என்றென்றும் நெஞ்சோடு
அழியாச் சிற்பமாய்....
அய்மா நிஃமத்துல்லா, மருதமுனை
கை தவறி போகும் டயரி
வந்தது ஜனவரி
இனி வரும் ஒரு கூட்டம்
எடுப்பதற்கு டயரி
கடந்த வருடம்
கெஞ்சிக் கூத்தாடிப் பெற்ற
டயரிகளில் பல
பட்டினியால் செத்துப் போயின
உணர்வுகளைச் சுமப்பதற்காய்
புதுவருடத்தில் புதிய குழந்தைகளாய்
ஆவலோடு பிறந்தன
உணர்வற்ற
பலரது கைகளில் சிக்கி
நடைப்பிணமாய் போயின
கதையையும் கவிதையையும்
ஏன்
காவியத்தையும்
சுமக்க வேண்டிய டயரிகள்
பரவாயில்லை
கணக்கையாவது சுமந்திருக்கலாம்
இப்படி அநியாயமாய்
பட்டினி போட்டு விட்டீர்களே
ஒவ்வொரு தினச் செவியிலும்
உங்கள் பேனா(நா)க்கள்
ரகசியம் சொல்லும் என்று
எதிர்பார்த்து ஏமாந்து போயின
எழுதத் தெரியாதவர் கைகளில்
டயரி
வெறுமனே ஒப்பனை
உபயோகிக்கத் தெரிந்தவருக்கு
கடந்த காலத்தைக் காட்டி நின்று
சொல்லும் கதைகள்தான் எத்தனை?
ஏன் டயரிகள் என்று
தெரியாத பலரும்
ஏன்தான் உயிரை விடுகிறார்களோ
டயரிகளுக்காய்
எழுதத் தெரியாத
அநியாயக்காரர்களே
இனி கேட்டுச்
செல்லாதீர்கள்
டயரிகள்
வேண்டுமென்றால்
ஒரு கொப்பிப்புத்தகம்
வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்