வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

 

நூறு ரூபா கூலிக்கு தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை விற்பனை செய்வது நியாயமா?

நூறு ரூபா கூலிக்கு தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை விற்பனை செய்வது நியாயமா?

கேள்வியெழுப்புகிறார் கணபதி கனகராஜ்

தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேலைசெய்த நாளொன்றுக்கு நூறு ரூபா இடைக்கால கொடுப்பனவு என்பது தோட்டத்தொழிலாளர்களின் சம்பளக் கோரிக்கையை மழுங்கடித்து பெருந்தோட்ட கம்பனிகளுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி அது சாதனையாக சித்தரிக்கப்படுவதாக மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நோர்வூட் போற்றி தோட்டத்தில் மாவட்டத் தலைவர் ரெங்கராஜ் தலைமையில் நடைபெற்ற தொழிலாளர் சந்திப்பின்போததே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆயிரம் ரூபா சம்பள கோரிக்கை யதார்த்தமானது. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்யும் வகையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். இந்த நியாயமான கோரிக்கை அளவிற்கதிகமானது என சில தொழிற்சங்கங்கள் கூறிவருகின்றன.

நாட்டின் தற்போதைய வாழ்கைச் செலவு அதிகரிப்பையும், தோட்டத்தொழிலாளர்களின் வறுமை நிலையையையும் சரியாக தெரிந்து கொள்ளாமல் அதிகார மமதையில் தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்களால் தோட்டத்தொழிலாளரின் சம்பளஅதிகரிப்பு கோரிக்கை மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர்கள் தற்போது தோட்டங்கள் தோறும் சென்று மக்களையும், தொழிலாளர்களையும் சந்தித்து வருவதை பலர் விமர்சித்து வருகின்றனர். எம்மை பொறுத்தவரையில் நாம் அனைவருமே முழு நேர அரசியல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள்.

வார இறுதி நாட்களில் மலையகத்திற்கு வந்து அரசியல் நடவடிக்கைகைளில் ஈடுபடுபவர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் காங்கிரஸ் காலத்திற்கேற்ற வகையில் எமது மக்கள் பணியை தொடரும்போது விமர்சனங்களை பெரிதுபடுத்துவதில்லை.

தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேலைசெய்த நாளொன்றுக்கு நூறு ரூபா இடைக்கால கொடுப்பனவை இரண்டு மாதங்களுக்கு வழங்கி தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மை செய்தது போல் பாசாங்கு காட்டப்படுகின்றது. உண்மையில் இது கூட்டு ஒப்பந்தத்தை நலிவடையச் செய்து கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களின் பேரம்பேசும் சக்தியை ஒடுக்குவதற்கான சதித்திட்டமாகும். இந்த நூறு ரூபா கொடுப்பனவு விடயம் தொழில்துறை அமைச்சரின் தலைமையில் தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே தொழில் அமைச்சரினால் தெரிவிக்கப்பட்ட விடயமாகும். தற்போது தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை நூறு ரூபா என்ற குறைந்த கூலிக்கு விற்பனை செய்துவிட்டு சிலர் அதனை சாதனையாக காட்டி வருகின்றனர். இவ்விடயம் பெருந்தோட்ட கம்பனிகளை சந்தோசப்படுத்தியுள்ளன. எதிர்காலத்தில் சம்பள அதிகரிப்பு கோரிக்கையை தடடிக்கழிப்பதற்கு அடியெடுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி மக்களினதும், குறிப்பாக தோட்டத் தொழிலாளரின் இருப்பும் வாழ்வாதாரமும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தொழிற்சங்க அரசியல் சக்தி மேலோங்கி இருந்தால் மட்டுமே சுபீட்சமாக இருக்கும் என்பது தற்போதைய பல சம்பவங்கள் உணர்த்தி வருகின்றன. இந்த நாட்டில் வாழுகின்ற இந்திய வம்சாவளி மக்களுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துணிவுடன் திட்டமிட்டு செயற்பட்டதாலேயே பல சாதனைகளை ஈட்டமுடிந்தது. அத்துடன் இந்திய வம்சாவளி மக்களின் ஒற்றுமையும் கட்டுப்பாடுமே இந்த சாதனைகளுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்திருந்தன என மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் மேலும் தெரிவித்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.