காணாமல் போனோரை தேட விரும்பாதவர்கள் காணாமல் போகக் காரணமானவர்களே
காணாமல் போனோரை தேட விரும்பாதவர்கள் காணாமல்
போகக் காரணமானவர்களே
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்
காணாமல் போவதற்கு தலையீடு மேற்கொண்டவர்களே காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பதை
விரும்பாதவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகம் சிரிகொத்தவில் காணாமல் போனோர் தொடர்பான காரியாலயம்
நிறுவுதல் பற்றி நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போது அவர்
மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு கருத்து தெரிவித்த உறுப்பினர், இக்காரியாலயம் நிறுவும் நடவடிக்கை திடீரென்று
தேன்றியதொன்றல்ல. கடந்த அரசின் காலத்திலேயே காணாமல் போனோர் பற்றி தேடிக் கண்டு
பிடித்தல் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கைகளும்
இணக்கங்களும் காணப்பட்டன.
விசேடமாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன்னுடன் 2009ல்
மேற்கொள்ளப்பட்ட இணக்கம் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழு மூலம் கண்டு பிடிக்கப்பட்ட விடயங்கள் ஆகியவற்றின் கீழ் காணாமல் போனோர்
பற்றி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய கருத்துக்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இக்கருத்துக்ளையொட்டி காணாமல் போனோரை தேடும் பொறிமுறையொன்றை அமைப்பதற்கு ஒப்புதல்
வழங்கப்பட்டது. எனினும், அவ்வாறு ஏற்றுக் கொண்ட பொறுப்புக்கள், பொறிமுறை போன்ற
நடவடிக்கைகள் மீது அரசிற்கு இருக்கவேண்டிய கடப்பாட்டை கடந்த அரசு தொடர்ந்து
புறக்கணித்ததனால், சர்வதேசத்துடன் எமக்கிருந்த நட்பு பழுதடைந்ததது. அதன் பெறுபேறாக
2014ல் இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2015ம் ஆண்டு
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இச்சந்தர்ப்பத்தில் அப்பொழுது ஏற்பட்டிருந்த
நிலைமையினை மக்கள் விளங்கியிருந்ததால் துஷ்பிரயோகம், மோசடி, களவாடல், சட்டத்தை
பிழையாக பயன்படுத்தல் மற்றும் மனித உரிமை மீறல் ஆகியவைகளுக்கு முற்றுப்புள்ளி
வைப்பதற்காக அப்போதைய ஜனாதிபதி யை வீட்டிற்கு அனுப்ப மக்கள் நடவடிக்கை
மேற்கொண்டார்கள். அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் தற்போதைய ஜனாதிபதி
மற்றும் பிரதமர் இந்நடவடிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்கள்.
அதனடிப்படையில் மோசடி மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவைகளை கண்டு பிடிப்பதற்கு எப்ஸிஐடி
நிறுவப்பட்டது போல், மனித உரிமைகள் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக
காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு நிறுவப்பட்டது.
எமது நாட்டின் குடும்ப அங்கத்தினர் ஒருவர் மரணமடைவதை விட காணாமல் போவது மிகவும்
துக்ககரமானது. இவ்வாறு ஏன் ஏற்பட்டது? காரணமென்ன? அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா
அல்லது துன்பப்படுகிறாரா?
போன்ற எண்ணிலடங்கா கேள்விகள் அக்குடும்ப அங்கத்தவர்களின் உள்ளங்களில் தோன்றி அவர்களை
துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளாக்குகின்றன. இதனடிப்படையில் குடும்ப
அங்கத்தினர்கள் மரணத்துக்கும் வாழ்விற்கும் இடையில் வாழும் ஒரு நிலையேற்பட்டுள்ளது.
1971 மற்றும் 1989ஆம் ஆண்டுகளிலும் அதன் பின்னர் ஏற்பட்ட யுத்த காலங்களிலும் காணாமல்
போனோர் பற்றிய அனுபவங்களை மக்கள் அனுபவிக்க நேர்ந்தது. இதனடிப்படையில் 1971ஆம்
ஆண்டிலிருந்து காணாமல் போனோர் பற்றி இவ்வாணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யலாம்.
காணாமல் போனோரை பற்றி விசாரணை மேற்கொள்வதை எதிர்க்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர்,
அன்று தாய்மார் முன்னணி அமைத்து, போஸ்டர் ஒட்டி, கூட்டங்களை நடாத்தி
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்றதோடு நின்றுவிடாது எங்களது நாட்டின் வீரர்களுக்கு
எதிராக ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்ற நிகழ்வுகளை மக்கள்
மறந்திருப்பார்கள் என நினைத்து, மக்களை காணாமல் போகச் செய்த வெள்ளை வேன் கலாசாரம்
மூலம் அப்பாவி மக்களை கொண்டு சென்ற, ஊடக சுதந்திரத்திற்கு வேட்டு வைத்த, கப்பம்
கேட்கும் மற்றும் ஆயுதக் குழுக்கள் மீண்டும் இந்நாட்டில் தலைதுாக்குவதை காண
விரும்பும் குழுவினர் தான் காணாமல் போனோரை தேடிக் கண்டுபிடிப்பதை எதிர்க்கின்றார்கள்.
காணாமல் போனோரை கண்டுபிடித்தல் தொடர்பாக வெளிநாட்டு தலையீடோ அல்லது வெளிநாட்டு
நீதிபதிகளின் பங்களிப்போ கிடையாது. எனினும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இதில்
கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படலாம். அனைத்து இராணுவ வீரர்களையும் பற்றிய
நல்லெண்ணத்தை உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவாறான
நிலைமையை ஏற்படுத்துவதற்காகத்தான் இச்சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இதன்மூலம்
இராணுவ வீரர்களை துாக்குக் கயிற்றுக்கு அனுப்பும் நிலை ஏற்படாது. உண்மையான
நாட்டுப்பற்றாளர்களாய் இருப்பின் இக்காரியாலயத்தை செயற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு
ஒத்துழைப்பு நல்க வேண்டும்.