வரு. 68 இல. 34

துர்முகி வருடம் ஆவணி மாதம் 05ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்க-ஃதா பிறை 16

SUNDAY  AUGUST 21, 2016

 

 
நம் நல்லூரான்

நம் நல்லூரான்

அன்பன் எனத்தொடர்ந்தால் அருளி, அணுக்கமான
தொண்டனாக்கி,
நெஞ்சால் நினைந்தணைக்கும் தோழனாக்கி,
என்றும் தனதுயிர் நிழலில்
களைப்பாறப்
பண்ணும் எழில்முருகன்;
பண்டைப் பெரும் நல்லை
மண்ணமர்ந்து உலகைக் காக்கும் கலி – வரதன்;
வந்த தடைவென்று'
நின்ற பகைதின்று'
ஞானசக்தி யாய்வாழும் பன்னிருகையன், வேலன்;
தேவர்கள் ஞானியரும்
தேறவொண்ணா விஸ்வரூபன்;
சித்தர்கள் தங்கள் சிந்தைக்குள்
அடைவைத்துப்
பித்து மொழியாலே பூசிக்க மகிழுபவன்;
நெஞ்சில் கலக்க எரிமலை குமுறுகையில்
கண்ணூடு கவலைக் காங்கை முளாசுகையில்
“அஞ்சற்க” என்று 'அபய
மழைபொழிந்து தேற்றுபவன்;
பேதங்கள் பாராப் பெரியோன்;
பணிந்து நம்பும் யாவரையும் காப்போன்;
நிம்மதி வரந்தருவோன்;
என்ன பெருஞ்செல்வம் ஈந்தாலும்'ஏற்காது
அன்பென்னுஞ் செல்லாக் காசுக்கும்
விலைபோவோன்'
ஆடம் பரமும் அழகும் செழித்திருந்தும்
தேடி எளிமைநெஞ்சைத் தேராக்கி ஊர்திரிவோன்;
மின்னும் நகைபுனைந்து
மன்னவனாய்ப் பவனிவந்தும்
துன்பச்சே றுழல்வோரைத் தூக்கி நிறுத்திடுவோன்;
என்னைக் கருவியாக்கித் தான் சுருதியாகி நிற்போன்;
என்கவிக்குள் நானழைத்தால் நர்த்திக்கும் முருகையன்;
இன்பமும் துன்பமும் வெற்றிகளும் தோல்விகளும்
நன்மையும் தீமையும் ஞானமும் பேதமையும்
தானாகி நிற்போன்;
சகலதற்கும் காரணன்; ‘நம்
நல்லூரான்’! எனக்கு எல்லாமும் ஆன அவன்
சொல்கின்றான் “பொல்லாப்பு இல்லையென”
நடந்திடுவோம்!

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.