தற்கொலைக்கு முயற்சிக்கும் பொதுமகன் ஒருவன் பாதுகாக்கப்பட்டு பொலிஸாரால் கைது
செய்யப்பட்டு சட்டத்தின் முன்னிறுத்தப்படுவதை நாம் அறிவோம். ஆனால்
அரசியல்வாதிகளுக்கு இது பொருந்தாதோ என்னவோ தெரியாது. இவ்வாறு முகநூல்களில்
விவாதங்கள் இடம்பெறுகின்றன. எது எப்படியோ இவர் தான் எடுத்துக் கொண்ட மக்களுக்கான
விடயத்தில் வெற்றி கண்டு விட்டார். ஆனாலும் இந்த மக்களுக்காக அவர் பாவம்,
சபாநாயகரிடம் முறையாக வாங்கிக் கட்டிக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊடகவியலாளர்களுக்கு கையூட்டிய
துணை அமைச்சர் திடீர் பல்டி அடிப்பு
கடந்த ஆட்சியாளர்கள் போன்று ஊடகவியலாளர்களுக்கு கை யூட்டல்களை வழங்கும் விளையாட்டை
வைத்துக் கொள்ளக் கூடாது எனப் பிரதமர் கண்டிப்பான உத்தரவை வெளியிட்டமையை
அறியாத துணை அமைச்சர் ஒருவர், நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலாளர்கள் சிலருக்கு
விருந்து வைத்துள்ளாராம். விருந்துடன் பைகளில் சில உள்ளுர் கைத்தறி தயாரிப்பு
உடுதுணிகளையும் வழங்கியுள்ளாராம். விடயம் வெளியே கசிந்தமையால் இப்போது சமாளிப்பாக
அது தனது பிறந்த நாள் பார்ட்டி என்று விளையாட்டாகக் கூறி வருகிறாராம்.
அன்று கீரியும் பாம்புமாக இருந்த
இவர்கள் இன்று திடீர் ஒற்றுமை
அவர்கள் அந்த மாதிரியான ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், மக்களால்
வெறுக்கப்படுபவர்கள், அவர்களுடன் இணைந்து நிற்பதே தீட்டு என்பதாகக் கூறி, வந்த
வடக்கு ஐயா, இப்போது அதே ஆயுதக் குழுக்களின் தலைவர்களுடன் கைகோத்து இரகசிய அறையில்
கூடிக் குலாவி கும்மாளமடித்திருக்கிறார். அன்று கீரியும் பாம்புமாக இருந்த இவர்களது
திடீர் ஒற்றுமை உலகத் தமிழருக்கே ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பதவி ஆசை வந்தால் மனிதனுக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாது
என்பது சரிதான் போலுள்ளது.