மலையக மக்களின் உள்ளூராட்சி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்
மலையக மக்களின் உள்ளூராட்சி
பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்
மலையகத்
தமிழ் மக்கள் மத்தியில் உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டுமென்ற திருத்தம்
அல்லது உள்ளூராட்சி நிறுவனங்களை உருவாக்குவதற்கான அதிகாரம் சம்பந்தப்பட்ட
அமைச்சர்களுக்கு இருப்பதால் இச்சந்தர்ப்பத்தில் மலையகத் தலைமைகள் ஒன்றுபட்டு குரல்
கொடுத்து, உள்ளூராட்சி நிறுவனங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். மலையக மக்கள்,
கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மத்தியில் ஓன்றுபட்ட கருத்துருவாக்கம் ஏற்பட
வேண்டுமென்ற அடிப்படையில் இக்கட்டுரை முன்வைக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக்குழு,
உள்ளூராட்சி தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக ஆராய்ந்த நிலையில் அரசியல் கட்சிகள்,
சிவில் அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் அபிப்பிராயங்களையும் பெற்றமை நாம்
அறிந்த விடயமாகும். இறுதியில் உள்ளுராட்சித் தேர்தல் 70 வீதம் வட்டாரமுறையிலும், 30
வீதம் விகிதாசார முறையிலும் நடத்தப்படவேண்டுமென்றும், மேலும் உள்ளுராட்சி தேர்தல்
தொடர்பான சிபாரிசுகளுடன் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
2012இல் உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் கட்டளைச் சட்டமாக பாராளுமன்றத்தில்
கொண்டுவரப்பட்டு அது ஒரு பாராளுமன்ற சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்று நடைமுறையில்
உள்ளமையால், இனி உள்ளூராட்சித் தேர்தல் அதன் அடிப்படையிலேயே நடைபெறும்.
இந்த தேர்தல் சீர்திருத்தச் சட்டத்தில் வட்டாரங்கள் உருவாக்கப்பட்டமை, எல்லை மீள்
நிர்ணயம் தொடர்பாக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்களிடமிருந்து 2000த்திற்கு
மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதால் கடந்த 2015.12.11ஆம் திகதியன்று ஜனாதிபதி
தலைமையில் நடைபெற்ற உள்ளுராட்சி வட்டார எல்லைகளைத் தீர்மானிக்கும் அனைத்து
கட்சிகளின் மகாநாட்டில் உள்ளுராட்சித் தேர்தலில், பெண்களின் பங்களிப்பு 25
வீதத்திற்கு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் பல்வேறு திருத்தங்கள்
முன்மொழியப்பட்டு அதன் அடிப்படையில், மேலும் கால அவகாசம் வழங்குவதற்கு இணக்கம்
காணப்பட்டது.
தற்போது மீண்டுமொரு முறை உள்ளூராட்சி திருத்தங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள
நிலையில், இதனை மலையகத் தலைமைகள் இறுதி சந்தர்ப்பமாக, பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மலையக மக்களுக்கு வட்டாரங்கள் உருவாக்கப்படுவதற்கு முன் உள்ளூராட்சி நிறுவனங்களே
உருவாக்கப்படவேண்டிய தேவை உள்ளது. அதனால் உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பான
கோரிக்கைகள் மிக நீண்ட காலம் மலையக அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டதன் காரணமாக
கடந்த 11ஆம் திகதி இது தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்பட்டது.
உள்ளூராட்சி தொடர்பான பின்னணி
1937ஆம் ஆண்டு இந்திய வம்சாவழி மலையக மக்களுக்கு, உள்ளூராட்சி வாக்குரிமை
இல்லாதொழிக்கப்பட்ட போதும், 1948இல் வாக்குரிமை இல்லாதொழிக்கப்பட்ட போதும் எமக்கு
கிடைக்கவேண்டிய உள்ளூராட்சி நிறுவனங்கள் கிடைக்கவில்லை. அதன் பின்னர் இன்று
வரையிலும் உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்படவில்லை.
உள்ளூராட்சி தேர்தல்
சீர்திருத்தம் முன்வைக்கப்பட்டபோது, அதனை சுட்டிக்காட்டி 15 இலட்சம் மலையக தமிழ்
மக்கள் வாழும் நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை, களுத்துறை
போன்ற மாவட்டங்களில் தேர்தல் சீர்திருத்தத்தின் மூலம் வட்டாரங்கள்
உருவாக்கப்படுவதற்கு முன் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான எல்லை நிர்ணயம் மிக
அத்தியாவசியமாக மலையக மாவட்டங்களில் உருவாக்கப்படவேண்டும் என மலையக அமைப்புக்களால்
வலியுறுத்தப்பட்டது.
தேர்தல் சீர்திருத்தம் என்பது வட்டார எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வது மாத்திரமல்ல,
உள்ளூராட்சி நிறுவனங்கள் பற்றாக்குறையாக உள்ள சமூகங்களுக்கு அந்த உள்ளூராட்சி
நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளது. இலங்கையில் 20266363
மக்களுக்கு, 335 உள்ளூராட்சி நிறுவனங்கள் காணப்படுகின்றன.
அதில் 271 பிரதேசசபைகளும்,
41 நகரசபைகளும், 23 மாநகரசபைகளும் காணப்படுகின்றன. 74வீத சனத்தொகையை கொண்ட சிங்கள
மக்களுக்கு இரு நூறுக்கு மேற்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்கள் காணப்படுகின்றன. 11வீத
சனத்தொகையை கொண்ட வட கிழக்கு மக்களுக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட உள்ளூராட்சி
நிறுவனங்கள் காணப்படுகின்றன.
நுவரெலியா, பதுளை போன்ற மலையக தமிழ் மக்கள் செறிவாக
வாழும் மாவட்டங்களில் அவர்களுக்கென ஐந்து உள்ளூராட்சி நிறுவனங்கள்கூட கிடையாது.
706550 சனத்தொகையை கொண்ட, நுவரெலியா மாவட்டத்தில் கிட்டத்தட்ட 4 இலட்சம் மலையக தமிழ்
மக்கள் வாழ்ந்த போதும் அம்பகமுவ, நுவரெலியா ஆகிய இரண்டு பிரதேச சபைகளும் தலவாக்கலை,
ஹட்டன் ஆகிய இரு நகரசபைகளும் அவர்கள் செறிவாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில்
காணப்படுகின்றது.
இலங்கையில் 15 ஆயிரத்துக்கும் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட மிகச்சிறிய உள்ளூராட்சி
நிறுவனங்கள் காணப்படும் அதேவேளை ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக்
கொண்ட, அம்பகமுவ, நுவரெலியா போன்ற பிரதேசசபைகளும் காணப்படுகின்றன. எனவேதான்
வட்டாரங்களின் எல்லைகள் பிரிக்கப்படுவதற்கு முன் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான எல்லை
நிர்ணயம் செய்யப்படவேண்டுமென்று மலையக அமைப்புக்களால் வலியுறுத்தப்பட்டது.
உள்ளூராட்சி தேர்தல் சீர்திருத்த அறிக்கையில், உள்ளூராட்சி நிறுவனங்கள்
உருவாக்கப்பட வேண்டுமென்றும், சிறுபான்மை மக்களுக்கு அவர்களின் அரசியல்
பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டுமென்றும் கூறப்பட்டிருந்தாலும், இந்த தேர்தல்
சீர்திருத்தத்தில் அது இடம்பெறாமை கவலைக்குரிய விடயமாகும்.
தற்போது அறிமுகப்படுத்தப்படும் உள்ளூராட்சி சீர்திருத்தத்தில் 2 கோடி மக்களுக்கு
5000 வட்டாரங்களும், 1500 விகிதாசார உறுப்பினர்களுமாக சேர்த்து, 335 உள்ளூராட்சி
நிறுவனங்களுக்கும், முழுநாட்டிலும் 6500 உள்ளூராட்சி உறுப்பினர்கள் வட்டார,
விகிதாசார கலப்பு முறையில் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும்
45 வீத அதிகரிப்புடன் 2014 மேலதிக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்த
வட்டார முறையிலும்கூட, மலையக மக்களுக்கு வெறும் நூற்றுக்கணக்கான வட்டாரங்களே
ஏற்படுத்தப்படும்.
ஆகவே மலையக மக்கள் செறிவாக வாழும் மாவட்டங்களில் அவர்கள் வாழும்
பகுதிகளில் வட்டாரங்களை உருவாக்குவதற்கு முன்பு வரலாற்று ரீதியாக, அவர்கள் பிரஜா
உரிமை பறிக்கப்பட்டதால் இல்லாதுபோன உள்ளூராட்சி நிறுவனங்களான பிரதேசசபைகள்,
நகரசபைகள், மாநகரசபைகள் உருவாக்கப்பட வேண்டும். மலையக தமிழ் மக்கள் வாழும்
மாவட்டங்களில் உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பாக காணப்படும் பிரச்சினைகள்.
1. இலங்கையில் 335 உள்ளூராட்சி நிறுவனங்களில் 4 உள்ளூராட்சி நிறுவனங்களே மலையக
மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்றமை.
1. நுவரெலியா பிரதேச சபை, 2. அம்பகமுவ பிரதேச சபை, 3. தலவாக்கலை நகரசபை, 4. அட்டன்
நகரசபை.
2. இலங்கையில் 335 உள்ளூராட்சி நிறுவனங்களில் 60 வீதமானவை சராசரியாக 30 ஆயிரம்
வாக்காளர்களைக் கொண்டது.
(தொடரும்)
3. அம்பகமுவ, நுவரெலியா ஆகிய பிரதேச சபைகள் ஒவ்வொன்றும், இலங்கையில் உள்ளூராட்சி
நிறுவனமொன்றின் சராசரி 30 ஆயிரம் வாக்காளர்கள் என்ற அடிப்படையில், 8 பிரதேச சபைகளாக
பிரிக்கக்கூடிய பிரதேச சபைகளாகும். இதில் நுவரெலியா, அம்பகமுவ ஆகிய பிரதேச சபைகள்
தலா 1,50,000 வாக்காளர்களைக் கொண்டதும், இரண்டரை இலட்சம் சனத்தொகையைக் கொண்டதுமாகும்.
4. மலையக தமிழ் மக்கள் மத்தியில் உள்ளூராட்சி நிறுவனங்கள் ஒப்பீட்டு ரீதியில்
குறைவாக இருக்கின்றமை தொடர்பான வேண்டுகோள் மிக நீண்ட காலமாக காணப்படுகின்றமை.
உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்க வேண்டிய நியாயத்தன்மை.
5. இந்த உள்ளூராட்சி நிறுவனங்களில், கொழும்பு மாவட்டத்திற்கு வெளியே நுவரெலியா
மாவட்டத்தில் மட்டுமே இவ்வளவு கூடுதலான வாக்காளர்கள் நுவரெலியா, அம்பகமுவ
பிரதேசசபைகளில் காணப்படுகின்றன. கொழும்பு மாவட்டத்தில் பல இலட்சக்கணக்கான வாக்காளர்
காணப்பட்டபோதும் சனத்தொகை செறிவு அடிப்படையில் அது நியாயப்படுத்தக்கூடியது.
6. இலங்கையில் 15 ஆயிரம் வாக்காளர்களுக்கு குறைந்த உள்ளுராட்சி நிறுவனங்கள் கிழக்கு
மாகாணத்தில், குறிப்பாக அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில்
காணப்படுகின்றன. லகுகல - 5861 கோமரன்கடவள, - 5831 மொறவெவ, - 3949 பதியத்தலாவ, பதவியா
சிரிபுர- 6401 வெருகல்- 5895 போன்றன குறிப்பிடத்தக்கது. கதிர்காமம், 11649, லக்கல -
9388, டெல்ப்ட் -1908 ஆகியன ஊவா, மத்திய, வட மாகாணங்களில் காணப்படுகின்றன.
7. நுவரெலியா மாவட்டத்தில் 7 இலட்சம் பேருக்கு 8 உள்ளூராட்சி நிறுவனங்களே
கானப்படுகின்றன. (நுவரெலியா, அம்பகமூவ உட்பட 5 பிரதேசசபைகள் 1 மாநகரசபை 2 நகரசபைகள்).
இனி தற்போது வட்டாரம் பிரிக்கப்பட்டுள்ள முறைமை காணப்படும் பிரச்சினைகளை சுருக்கமாக
பார்ப்போம்.
புதிய வட்டாரங்கள் உருவாக்குதல் தொடர்பாக காணப்படும் பிரச்சினைகள்
1. பாராளுமன்றத்தைப் போன்று 90 ஆயிரம் பேருக்கு ஆயிரம் சதுர கிலோ மீற்றருக்கு ஒரு
தேர்தல் தொகுதி, மாகாண சபையில் 40ஆயிரம் பேருக்கு ஆயிரம் சதுரகிலோ மீற்றருக்கு ஒரு
பிரதிநிதி என்ற அடிப்படையில் ஒரு வரையைற காணப்படும்போது உள்ளூராட்சி வட்டார
முறைக்கு தெளிவான அளவுகோலோ வரையறையோ கிடையாது.
2. உத்தேச 5000 வட்டாரங்களில் நுாற்றுக்கணக்கான வட்டாரங்கள் கூட கிடைக்காத வகையில்,
மலையக மாவட்டங்களில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் அவர்களது இனச்செறிவை குறைக்கும்
வகையில் வட்டாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
3. பல்வேறு சமூகங்கள் வாழும் பிரதேசங்களில், பல் அங்கத்தவர் வட்டாரம்
ஏற்படுத்தப்படும் என்றுகுறிப்பிடப்பட்டாலும், நுவரெலியா, அம்பகமுவ பிரதேச சபைகளில்
அந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. நுவரெலியா பிரதேசசபையில் மட்டும் ஒரு பல
அங்கத்தவர் வட்டாரம் காணப்படுகின்றது. (இல.15 சமர்செட் வட்டாரம்).
4. மலையக தமிழ் மக்களின் இனச்செறிவை குறைக்கும் வகையில், ஒரு சமூகத்தை பல
வட்டாரங்களுக்குள் உள்ளடக்கும் உள்நோக்கம் கொண்ட நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
5. காலங்காலமாக ஒன்றாக பின்னிப் பிணைந்து வாழ்ந்த சில தோட்ட சனத்தொகை பல
வட்டாரங்களுக்குள் துண்டாடப்பட்டுள்ளது. உதாரணம் பன்மூர், வெலிஓயா.
6. உள்ளுராட்சி நிறுவனங்கள் மலையக மக்கள் மத்தியில் மிகமிக குறைவாக இருக்கின்ற
நிலையில் வட்டாரங்களை 35க்குள் என மட்டுப்படுத்தியிருப்பது தலா ஒன்றைர இலட்சம்
வாக்காளர்களைக் கொண்ட அம்பகமுவ, நுவரெலியாவில் 5000 ஆயிரத்திற்கு மேற்பட்ட
வாக்காளர்களையும், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஜனத்தொகையை கொண்ட பெரிய வட்டாரங்களை
உருவாக்கியுள்ளமை வட்டாரங்களை மலையக மக்கள் மத்தியில் குறைத்துள்ளது.
மலையகத் தலைமைகள் செய்ய வேண்டியது என்ன?
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக பரந்தளவில் நீண்ட காலமாக கருத்துகள் பரிமாறப்பட்டன.
அதே போன்று மலையகத்திலும் உள்ளூராட்சி தொடர்பாக மிக நீண்ட காலம் கருத்துக்கள்
பறிமாரப்பட்டன. அதன் அடிப்படையில் உள்ளுராட்சி அதிகார சபைகள் தொடர்பாக பல
கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, அதில் மலையக மாவட்டங்களில் உள்ளுராட்சி நிறுவனங்கள்
மிகமிக குறைந்த அளவில் காணப்படுகின்ற நிலைமையை கருத்திற்கொண்டு, உள்ளூராட்சி நிறுவன
உருவாக்கம் தொடர்பாக மலையக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மத்தியில்
உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒருமித்த நிலைப்பாட்டிற்கு
வந்துள்ளமை வரலாற்றில் பதியப்பட வேண்டிய விடயமாகும்.
மலையகத்தில் தற்போது உருவாகியுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கத்துவ
கட்சிகளான மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி
என்று முன்னணி என்ற பெயரைக் கொண்டு முடியும் இந்த அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின்
ஒவ்வொரு கட்சியும் உள்ளுராட்சி தேர்தல் சீர்திருத்தம், தொடர்பாக தனித்தனியான
முன்மொழிவுகளையும், கூட்டான முன்மொழிவுகளையும் முன்வைத்து வலியுறுத்துவதோடு, அது
தொடர்பாக உள்ளுராட்சி அமைச்சு உட்பட, அரசாங்கத்திற்கும் அழுத்தங்களை கொடுத்து
வருகின்னறன.
இதில் வரவேற்க்கப்பட வேண்டிய விடயம், மலையகத்தில் உள்ளுராட்சி
நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு, இலங்கை தொழிலாளர்
காங்கிரஸூம் முன்வந்தமையாகும். அரசியல் கட்சிகள் மாத்திரமன்றி,
மலையகத்தமிழ் சிவில் அமைப்புகளும் இதில் ஒருமித்த செயற்பாட்டையும் கொண்டுள்ளமை
முக்கியமானதாகும். மிக நீண்ட காலம் இழுபறிபட்டு வந்த இந்த உள்ளூட்சி விடயம் தற்போது
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் ஒன்றினணந்த செயற்பாட்டினால் ஒருமுடிவுக்கு வரக்கூடிய
நிலையில் நாட்டின் பிரதான இரு தலைவர்களும் மலையக மக்களின் உள்ளுராட்சி நிறுவன
உருவாக்கம் தொடர்பாக கடந்த அரசாங்கத்தைவிட சற்று சாதகமான நிலையில் பார்க்கும் ஒரு
சூழல் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு அரசாங்க உயர்மட்ட உத்தியோகத்தர்களில் குறிப்பாக
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரும், முன்னாள் தேர்தல் ஆணையாளருமான மகிந்த தேசப்பிரிய,
நுவரெலியா தற்போதைய மாவட்ட செயலாளர் திருமதி. மீகஸ்முல்ல போன்ேறார் மலையக மக்கள்
மத்தியில் உள்ளூராட்சி நிறுவனங்களை உருவாக்க வேண்டுமென்ற தேவையை உணர்ந்து அதற்கு
ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான
மனோகேணசன் உள்ளூராட்சி தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான அமைச்சரவை உப குழுவில்
அங்கம் வகிப்பதும், அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில்
மேலதிக பிரதேச சபைகள் உருவாக்குவது தொடர்பாக அமைச்சரவை பத்திரம் முன்வைத்துள்ளமை
தமிழ் மக்கள் வாழும் மாவட்டங்களில் உள்ளூராட்சி நிறுவன உருவாக்கத்திற்கு மேலும்
வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.
அந்த மலையக மாவட்டங்களில் உள்ளுராட்சி நிறுவனங்கள் உருவாக்கும் விடயத்தில்
சகலரினதும் கவனம் நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா, அம்பகமுவ பிரதேச சபைகள் மீது
குவிந்துள்ளன. அதிகமானோர் அதன் நியாயத்தன்மையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஆகவே இந்தச் சூழலில் நடைமுறைச் சாத்தியமானதும், யதார்த்தமானதுமான விடயம் நுவரெலியா
மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்குவது தொடர்பாக மீண்டும் கவனத்தில்
எடுக்கும் வகையில், கடந்த 2015.06.17ம் திகதி நுவரெலியா மாவட்ட செயலாளர் மீகஸ்முல்ல
நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக எல்லை மீள்நிர்ணய முன்மொழிவை சிபாரிசு
செய்திருப்பதாகும்.
இந்த சாதகமான சூழலைப் பயன்படுத்தி மலையக தமிழ்த் தலைமைகள் கட்சி, தொழிற்சங்க,
சிவில் அமைப்புக்கள் என்ற பாகுபாடின்றி இந்த பணிகளை முன் நகர்த்துவதாகும். மேற்படி
உள்ளூராட்சி சீர்திருத்தம் உள்ளூராட்சி நிறுவனம் உருவாக்கம் வட்டார உருவாக்கத்தில்
அடையாளம் காணப்பட்ட பிரச்சினையின் அடிப்படையில் மலையக தமிழ் மக்கள் உள்ளூராட்சி
தொடர்பாக முன்வைக்க வேண்டிய சிபாரிசுகள் சுருக்கமாக கீழே குறிப்பிடப்படுகின்றது.
மலையக மக்களின் உள்ளுராட்சித் தொடர்பில் முன்வைக்க வேண்டிய சிபாரிசுகள்
1. 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு பிரதேச சபை என்ற அடிப்படையில் மலையக மக்கள்
தொடர்ச்சியாக வாழும் மாவட்டங்களில், பிரதேச சபைகளுக்கு எல்லைகள் மீள் நிர்ணயம்
செயற்பட்டு வர்த்தமானியில் பிரகடனப்படுத்த வேண்டும்.
2. இலங்கையில் வேறு எப்பகுதிகளையும்விட பெருந்தோட்டப்பகுதி நகர மயமாக்கம் காரணமாக
புதிய நகரசபைகளை உருவாக்கலாம்.
3. அட்டன் நகருக்கு அண்மித்த பகுதிகளை மாநகர சபையுடன் இணைத்து தரம் உயர்த்த
வேண்டும்.
4. 1500 தொடக்கம் 2500 வாக்காளர்களுக்கு ஒரு வட்டாரம் என வட்டாரங்களை வரையறை செய்ய
வேண்டும்.
5. மலையக மக்கள் மத்தியில் உள்ளூராட்சி நிறுவனங்கள் குறைவான நிலையில் மலையக
மாவட்டங்களில் 35 வட்டாரங்கள் என்ற வரையரறயை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.
6. மலையக தோட்டப் பகுதிகளில் மக்களுக்கு சேவை வழங்குவதில், தடையாக இருக்கும் 1987ம்
ஆண்டு 15 இல் பிரதேச சபைகள் சட்டம் 3ஆவது சரத்து மற்றும் அதுபோன்ற சட்டரீதியான
தடைகள் நீக்கப்பட வேண்டும்.
7. நாட்டின் ஜனத்தொகை கணிப்பீடு முடிவடைந்துள்ள நிலையில் மலையக தமிழ் மக்கள்
மத்தியில் மாத்திரம் ஒப்பீட்டு ரீதியில் மிகமிக குறைவாக உள்ளுராட்சி நிறுவனங்கள்
காணப்படுவதால் அதற்கான முயற்சிகள் நடக்கும் இவ்வேளை உள்ளுராட்சித் தேர்தலுக்கு முன்
உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
8. மலையக மாவட்டங்களில் வாக்காளர், அபிவிருத்தி, இன விகிதாசாரம் ஆகிய விடயங்களைக்
கருத்திற்கொண்டு புதிய உள்ளூராட்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும் உள்ளுராட்சி
நிறுவனங்களை பொருத்தவரையில் அதன் பணிகள் மலையக மக்களை சரியாக சென்றடையவில்லை.
மலையகத்தில் உள்ளுராட்சி நிறுவனங்கள் மிக குறைவாகவே காணப்படுகின்றது.
1948ஆம்
ஆண்டுக்கு பிறகு இதனை சீர்செய்வதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே
உள்ளுராட்சி தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக சகலரினதும் கவனம் தற்போது ஏற்பட்டுள்ள
நிலையில் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மலையக மக்களின் உள்ளூராட்சி
பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.
அ. லோறன்ஸ் (ஆய்வாளர்),
செயலாளர் மலையக மக்கள் முன்னணி
தமிழ் முற்போக்கு கூட்டணி