பிரதமர் மோடி பாகிஸ்தானிற்கு திடீரென விஜயம் செய்ததை ஐ.நா. பொது செயலாளர்
பான் கி மூன் வரவேற்றுள்ளார். மோடியின் பயணம் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான
நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை
நடைபெறும் எனவும், உறவு பலப்படுத்தப்படும் எனவும் பான் கி மூன் நம்பிக்கை
தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
இதேவேளை மோடியின் பாகிஸ்தான் விஜயத்தை அமெரிக்காவும் வரவேற்றுள்ளது. எனினும்
எதிர்க்கட்சிகள் மோடியின் குறித்த விஜயத்திற்கு எதிர்ப்புக்கள் வெளியிட்டுள்ளன.
மோடியின் சாகச பயணத்தால் நாட்டின் பாதுகாப்பில் மோசமான விளைவுகள் நேரிடும் என்று
காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி மூத்த தலைவர் அசுதோஷ் கூறியபோது, கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தக்கூடாது என்று மோடி கூறினார்,
இப்போது அவரே பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் கூறியபோது, பிரதமர்
மோடி மிகச் சிறந்த ராஜதந்திரி, அவர் அண்டை நாடுகளுடன் சுமுக உறவை மேம்படுத்தி
வருகிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.