‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது பழமொழி. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான்
மனமும் மகிழ்ச்சியில் திளைக்கும். இயற்கை உணவு ஒரு மருந்து என்று நம் முன்னோர்கள்
கூறியுள்ளனர். அந்த வகையில், அதிக மருத்துவக்குணம் நிறைந்தது முட்டைகோஸ்.
இதில் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊவா என்று பல்வேறு வகைகள் உள்ளன. முட்டைகோஸில்
அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன.
மேலும் பல்வேறு பைட்டோ நியூட்ரியண்கள் மற்றும் வைட்டமின்களான ஏ. சி மற்றும் கே
போன்றவை அடங்கியுள்ளன. உடலில் ஏற்படும் பிரச்சினைகளான புற்றுநோய், இதய நோய்
போன்றவற்றை தடுக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சினை,
மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். முட்டைகோஸை அளவுக்கு அதிகமாக வேகவைத்து
சாப்பிடக்கூடாது. அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். சொல்லப்போனால்,
அதனை பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறந்தது.
முட்டைகோஸ் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம். முட்டைகோஸின்
புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்கள் நிறைய உள்ளன. எனவே இதனை சாப்பிட்டால்,
புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு
ஒன்றிலும், முட்டை கோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று
கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக் கோஸை ஜுஸ் போட்டு
சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.
இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைன் அதிக அளவில் நிறைந்துள்ளது. உடலில் அலர்ஜி
அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகோஸை சாப்பிட்டால், அதில் உள்ள
அமினோ ஆசிட் குளுட்டமைன், அவைகளை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும். இதில்
உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை
நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் பீட்டா கரோட்டீன் அதிக அளவில்
இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது.
எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேகவைத்த முட்டை கோஸ் அல்லது முட்டைகோஸ்
சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம். முட்டைகோஸில்
உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சினையை
குணமாக்கும். முட்டைகோஸில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவோடு வைத்துக்
கொள்ள உதவியாக இருக்கும்.
முட்டைகோஸில் உள்ள இலாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்சி னைகளுக்கு சிறந்த
நிவாரணம் தரும்.
வாய்ப்புண்ணை தடுக்கும் முறைகள்
உலகத்தில் ஐந்தில் ஒருவர் வாய்ப் புண்ணால் அவதிப்படுகிறார் என்கிறது புள்ளிவிவரம்.
வாய்ப்புண் ஏன் ஏற்படுகிறது? வாயின் உட்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் உள்ள
திசுத்தோல் பாதிப்படைந்து காயம் ஏற்படுவதைத்தான் வாய்ப்புண் என்கிறோம். உதடு, நாக்கு,
கன்னங்களின் உட்புறம் மற்றும் தொண்டைப்பகுதி போன்றவற்றில் வாய்ப்புண் வரலாம். இதில்
ஏற்படும் வலி காரணமாக பேசவோ உணவு உட்கொள்ளவோ சிரமமாக இருக்கும்.
பித்தம் அதிகரித்தால் வாய்ப்புண் வரும் என்கிறது சித்த மருத்துவம். ஜீரணக்கோளாறு
உடல் சூடு, மன அழுத்தம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி. பி 12 மற்றும் ஃபோலிக்
அமிலம் போன்ற உயிர்சத்து குறைவு, உணவு மற்றும் மருந்துகள் ஒவ்வாமை, புகை,
மதுப்பழக்கம் ஹார்மோன் மாறுபாடு பற்கள் மற்றும் வாய் சுத்தமின்மை ஹொர்பெஸ் வைரஸ்
மற்றும் பாரம்பரியம் காரணமாகவும் வாய்ப்புண் வரலாம். வாய்ப்புண் 7 முதல் 10
நாட்களில் குணமாகிவிடும். நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் புண்கள் புற்றுநோயாகவும்
மாறிவிடலாம்.
வாய்ப்புண் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?
மலச்சிக்கல் மற்றும் ஜீரணக்கோளாறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல்
குளிர்ச்சியாக இருக்க அதிக அளவு தண்ணீர், இளநீர் மற்றும் பழங்களை
எடுத்துக்கொள்ளவேண்டும். பற்கள் மற்றும் வாயினை சுத்தமாக பராமரிக்கவேண்டும். மன
அழுத்தம் ஏற்படாதவாறு தியானம், யோகா பயிற்சிகளை செய்யவேண்டும்.
வாய்ப்புண்ணை எப்படி சரிசெய்யலாம்?
நெல்லி இலைகளை வேகவைத்த நீரில் அடிக்கடி வாய்க்கொப்பளித்து வர வாய்ப்புண் ஆறும்.
கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணத்தினால் வாய்
கொப்பளிக்க புண் ஆறும். இதனை உள்ளுக்கும் சாப்பிடலாம். மணத்தக்காளி இலையினை வாயில்
போட்டு மென்று சிறிதுநேரம் வாயிலே வைத்திருந்து விழுங்கலாம். முற்றின தேங்காயையும்
பயன்படுத்ததலாம். பாலில் சிறிது தேன் அல்லது பசு வெண்ணெய் தடவி வர நல்ல
பலன்கிடைக்கும். மாசிக்காயை பாலில் அரைத்து தேனில் குழைத்து தடவலாம்.
பச்சரிசி, பயத்தம் பருப்பு, 1 ஸ்பூன், வெந்தயம், பூண்டு இவற்றை வேகவைத்து வெந்ததும்
கெட்டியான தேங்காய்ப் பால் கலந்து சாப்பிட்டால் சரியாகும். மணத்தக்காளி கீரை,
அகத்திக்கீரையை தேங்காய் சேர்த்து பொரியலாக செய்து சாப்பிடலாம். காலையில் வெறும்
வயிற்றில் சிறுதுண்டு மஞ்சள் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும். துளசி இலையை
வாயிலிட்டு வாய்ப்புண் பகுதியில் படும்படிமென்று மென்றதை விழுங்கிவிடவேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் வாய்ப்புண்ணை சரிசெய்யலாம்.
பல் ஈறுகளில் இரத்தம் வரக் காரணம்?
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும்
எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து
விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் இரத்தம் வருவது இந்த நோயின் முதல்
அறிகுறி.
தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம்.
ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
ஆரோக்கிய உணவுகள்
நாம் தினமும் சாப்பிடும் உணவு தான், நமது உடல் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது. நோய்
எதிர்ப்பு சக்தியுள்ள உணவு சாப்பிடுவது, சிறந்த தற்காப்பு.
இஞ்சி - இவை வயிற்று புண்ணை குணப்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சிறந்தது.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையுள்ளது. உடலில் குளூக்கோஸ் அளவை
கட்டுப்படுத்தும். இதனை உணவில் சேர்த்து பயன்படுத்தலாம். தேனீர் தயாரிக்கும் போது,
தேயிலை தூளுடன் இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.
பாதாம் - இதில் வைட்டமின் இ, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட
சத்துகள் அதிகளவில் உள்ளன. தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால்,
ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள்
சாப்பிடுவது சிறந்த பலன் தரும்.
கீரை - அனைத்து கீரைகளும் மருத்துவ குணம் கொண்டதாகும். அதில், மினரல்ஸ், வைட்டமின்,
இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கீரையை தினமும் உணவில் சேர்ப்பதன் வாயிலாக, பல
நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
பேரீச்சம்பழம் - உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து எக்கச்சகமாக உள்ளது. வளரும்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆண்மை பலம் தரும்
பேரீச்சையை சாப்பிட்டால், தாது பலம் பெறும். தேனுடன் கலந்து இரவில் சாப்பிடுவது
உடலுக்கு சிறந்த சக்தியை தரும்.
கரட் - கெரட்டை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள
வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கு மிகவும் நல்லது.
சளிக்கு உடனடி
இயற்கை மருத்துவம்
இந்த முறையை நீங்களும் ஒரு முறை செய்து தான் பாருங்கள். நீங்கள் இரவு உறங்க
செல்லும் முன்னர் மூன்று எலுமிச்சை பழம் (தேசிக்காய்) எடுத்து அதை பாதியாக வெட்டி
ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதனில் தேவையான அளவு
உப்பு இட்டு பின்னர் நன்கு கொதிக்க வையுங்கள்.
நீங்கள் கொதிக்க வைத்த இரண்டு கப் நீர் ஒரு கப் அளவு குறையும் வரை நன்கு வெந்து
விடும் அளவுக்கு அப்பொழுது எலுமிச்சை பழம் (தேசிக்காய்) பழத்தை புளிந்து அந்த நீரை
ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள் ஓரளவு சூட்டுடன் இரவு
தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடிக்க வேண்டும் அப்படி குடித்து
விட்டு தூங்குங்கள் உங்களுக்கு உறக்கம் சென்ற பாதி இரவில் உங்களுக்கு வியர்த்து
வேர்வையாக வரும் உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறிவிடும்.
ஒரு முறை செய்து தான் பாருங்கள் உங்களுக்கு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய தேவையே
இல்லை.