உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கர் மாவட்டம், முபாரக்பூர் வட்டம், டக்கோவா கிராமம்.
இங்கேதான் இருக்கிறார் சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன். அவர் வைத்திருக்கும் பழைய
பர்மா பாஸ்போர்ட்டின்படி இப்போது அவருக்கு வயது 115. சுபாஷ் சந்திர போஸின்
வாழ்க்கையோடு பயணித்தவர்களில் முக்கியமான நேரடி சாட்சியங்களில் ஒருவர். அவருடைய
மெய்க்காவலர்களில் ஒருவர். போஸ் சம்பந்தமான ஆவணங்களை மம்தா பானர்ஜி அரசு வெளியிட்டது
நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கியிருக்கும் சூழலில், நிஜாமுதீன் பகிர்ந்துகொள்ளும்
செய்திகள் போஸ் தொடர்பான மர்ம முடிச்சுகளை மேலும் அவிழ்க்கின்றன.
* கேள்வி: சுபாஷ் சந்திரபோஸிடம் நீங்கள் பணியில் சேர்ந்தது எப்படி?
பதில்: பிழைப்புக்காக தம் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றுவிட்ட எனது தந்தை அங்கு
ஒரு உணவு விடுதி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆண்ட பிரிட்டிஷ் அரசு
என்னுடன் சேர்த்து பல இளைஞர்களை பலவந்தமாக தம் படையில் சேர்த்துக் கொண்டது. அந்தப்
பணியின் போது 1943ஆம் ஆண்டு ஒரு ஆங்கிலேய மேஜர் ஜெனரல், “படை வீரர்களில் எத்தனை பேர்
இறந்தாலும் கவலை இல்லை. ஆனால், பொதி சுமக்கும் ஒரு கோவேறு கழுதை கூட பலியாகி விடக்
கூடாது. ஏனெனில், நம் சுமைகளை தூக்கும் அவை இந்தியர்களைவிட முக்கியமானவை!” என
அறிவித்தது எங்கள் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது. இதற்கு கடுமையாக எதிர்ப்புத்
தெரிவித்த எங்கள் முகாமினர் சில ஆங்கிலேயர்களை சுட்டு வீழ்த்திவிட்டு படையை விட்டு
வெளியேறி விட்டோம்.
அப்போது சிங்கப்பூரின் கேத்தோ எனும் அரங்கில் இந்திய தேசியப் படையின் தலைவராகப் பதவி
ஏற்ற சுபாஷ் சந்திரபோஸ்ஜியிடம் சென்று இணைந்து விட்டோம். அங்குதான் இந்தியாவின்
சுதந்திர கீதம் முதன் முறையாக இந்தியில் பாடப்பட்டது. இதில் அவர் எனது ஆஜானுபாகுவான
உடல் அமைப்பை பார்த்து என்னை தமது மெய்க்காப்பாளர்களில் ஒருவராக வைத்துக் கொண்டார்.
ஆங்கிலேயரிடம் இருந்து தப்ப வேண்டி, சைபுத்தீன் எனும் எனது பெயரை நிஜாமுத்தீன் என
மாற்றிக் கொண்டேன். பிறகு தம் படைக்கு ஆதரவு கேட்க வேண்டி நீழ்மூழ்கி கப்பலில்
ஜெர்மன் சென்று ஹிட்லரை சந்தித்தோம். அடுத்து ஜப்பான் சென்று அதன் ஜெனரல் தோஜோவையும்
சந்தித்தோம்.
சிங்கப்பூரின் அருகிலுள்ள ஒரு தீவின் ராஜாவான சுல்தான் என்பவரை நேதாஜியுடன்
சந்திக்க சென்றபோது அவர் 12 சிலிண்டர் கொண்ட லேங்கிங் ஜாபர் எனும் காரை பரிசாக
அளித்தார். கப்பலில் பர்மாவின் காட்டுக்குக் கொண்டுவரப்பட்ட இந்த காரை முதன் முதலில்
ஓட்டத் தொடங்கிய நான் அவரது ஆஸ்தான ஓட்டுநராகவும் ஆகி விட்டேன்.
* கேள்வி: பர்மாவில் போஸ் தன் படை அமைத்த விதம் மீது உங்கள் நினைவில் உள்ளவற்றை
கூறுங்களேன்?
பதில்: பர்மாவில் முதல் வேலையாக பல சுரங்கப்பாதைகளை அமைத்தார் போஸ். பல்வேறு வழிகள்
கொண்ட இவற்றில் நுழைந்து பர்மாவின் அடர்ந்த காடுகளில் தப்பி விடும்படியாக அவை
அமைக்கப்பட்டன. இந்த சுரங்கங்கள் வழியாக இரவு நேரங்களில் கிளம்பி ஆங்கிலேயர்கள் மீது
திடீர் தாக்குதல் நடத்திவிட்டு அவர்கள் ஆயுதங்களைப் பறித்து வந்தோம். இவற்றில் எம்மை
பொதுமக்கள் அடையாளம் கண்டால் ஆதரவு தர வேண்டி இந்திய தேசியப் படையின் சீருடைகளை
அணிந்தோம். இதற்கு நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்து
பல்வேறு வகையான உதவிகள் செய்தனர். அடர்ந்த காடுகள் நிறைந்த நாட்டின் எல்லையாகவும்,
அருகில் சீனாவும் இருந்தமையால் போஸ், தாய்லாந்துக்கு அடுத்தபடியாக பர்மாவையும் தம்
படையின் தலைமையிடமாக அமைத்தார்.
* கேள்வி: நீங்கள் நேதாஜியிடம் கண்ட சிறப்பான குணநலன்கள் என்ன?
பதில்: சாதி, மத பேதம் இன்றி நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வை முதலில்
ஊட்டியவர் போஸ். இவர், தமக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டாலும், கவலைப்படாமல்
புன்முறுவலுடன் அமைதி காப்பார். அவர் கோபப்பட்டதை நான் ஒருமுறை கூடப் பார்த்ததில்லை.
எங்கள் படையிலும் ஆங்கிலேயர்களுக்காக உளவு பார்த்த சிலர் இடம்பெற்றிருந்தனர். இதில்
ஒருவர் எங்களுக்கு தேநீர் அளிக்க வந்துவிட்டு எங்கள் பேச்சை ஒட்டு கேட்டதை நான்
பார்த்து விட்டேன். அவரை உடனடியாக எனது துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி விட்டேன்.
இதைக் கண்டு போஸ் அமைதியாக, “நீ அவசரப்பட்டு விட்டாய்! உளவு பார்த்தவனை உயிரோடு
பிடித்து பேசியிருந்தால் அவன் மனம் திருந்தியிருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். அவன்
வீணாக தன் உயிரையும் இழந்திருக்க மாட்டான்” எனக் கூறினார். இந்த உளவாளி ஏற்கெனவே
சில முறை நாம் தாக்குதல் நடத்த சென்றபோது “விசில்” அடித்து ஆங்கிலேயருக்கு காட்டிக்
கொடுத்தான். இதனால், அங்கு நாம் தாக்கப்பட்டு பின்வாங்கிய போதும் அந்த உளவாளி,
எதேச்சையாக விசில் அடித்திருக்கலாம் எனக் கூறி எங்களை அமைதி காக்க வைத்தார்.
நேதாஜி தினமும் மாலை 4.00 மணிக்கு தம் படை வீரர்கள் இடையே நிகழ்த்திய தேசபக்த உரை
மிகவும் உணர்ச்சிகரமானது. நாங்கள் நடத்தும் தாக்குதலில் காயம்பட்ட அல்லது
உயிரிழந்தவர்களை அக்களத்தில் இருந்து தூக்கிக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துவார்.
முழு இரவிற்கும் நேதாஜி ஒரே இடத்தில் உறங்க மாட்டார். பாதுகாப்பு கருதி, குறைந்த
பட்சம் இரு இடங்களுக்கு மாறுவார். அவருடன் செல்லும் எங்களுக்கு உரிய நேரம் உறக்கம்
கிடைக்கும்படி பார்த்துக் கொள்வார்.
* கேள்வி: அவரிடம் பணி செய்த போது நீங்கள் இன்னும் மறக்காத நிகழ்ச்சி சிலவற்றை கூற
முடியுமா?
பதில்: நேதாஜியுடன் படைகளில் உதவி புரிய வந்த ஜப்பானியர்கள் முக்கியமான கட்டங்களில்
முன்னே சென்று போரிடாமல் பின் வாங்கிக் கொண்டனர். அங்கு இந்தியர்களே முன் வரிசையில்
போரிட வேண்டியதாயிற்று. நேதாஜி இறுதியாகப் போரிட்ட மணிப்பால் போர் மறக்க முடியாதது.
இதில் நதியைக் கடக்கும் போது ஏற்பட்ட மழையின் காரணமாக நாம் அதிகம் பேர் பலியானோம்.
இத்துடன் எங்களுடன் போரிட்ட பெண் வீராங்கணைகளை காப்பதிலும் பாதிப்பு அதிகரித்தது.
இவை அனைத்தையும் மீறி நாம் ஆங்கிலேயப் படையினரில் அதிகமானவர்களை வீழ்த்தி இருந்தோம்.
* கேள்வி: போஸ¤டனான உங்கள் கடைசி சந்திப்பை நினைவு கூற முடியுமா?
பதில்: கடைசியாக நேதாஜியை நான் 1947ஆம் ஆண்டு, (மாதம் நினைவில் இல்லை) பர்மாவின்
சித்தான் நதியில் தயாராக இருந்த படகில் ஏற்றி அனுப்பி வைத்தோம். இந்த நதியின்
இருகரைகளிலும் வளர்ந்திருந்த அடர்ந்த மரங்கள் அதில் பயணம் செய்பவர்களை மேலிருந்து
யாரும் பார்த்திடா வண்ணம் மறைத்து விடும். இதற்காக லேங்கிங் ஜாபர் காரில் கொண்டு
சென்றதுதான் நாங்கள் அவருடன் நடத்திய கடைசி சந்திப்பு ஆகும். மிகவும் குறுகலான
நதியான அது இந்திய எல்லையில் உள்ள கடலில் போய் கலக்கிறது. அங்கு அவரை எங்கோ
அழைத்துச் செல்ல ஒரு நீர்மூழ்கிக் கப்பல் தயாராக இருந்ததாகக் கூறப்பட்டது. சித்தான்
நதிக்கரையில் நேதாஜியை நாம் விட்ட சில நிமிடங்களில் நின்றிருந்த கார் மீது மேலே
பறந்து வந்த போர் ஜெட் விமானம் குண்டு வீசிவிட்டு பறந்து சென்றது. இதனால், அந்தக்
கார் வீணானதுடன், அதில் இருந்த ஒருசிலரும் உயிர் இழந்தனர். நாங்கள் மட்டும்
அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டோம்.
* கேள்வி: அப்போது போஸ¤டன் படகில் சென்றவர்கள் யார் எனக் கூற முடியுமா?
பதில்: அவரது மெய்க்காப்பாளராகவும், உதவியாளராகவும், பணியாற்றி வந்த சுவாமி என
அழைக்கப்பட்ட ஒரு மதராஸி இருந்தார். சுமார் 10 ஜப்பானிய மற்றும் சில சீக்கிய
வீரர்களும் அந்த படகில் போஸ¤டன் சென்றனர். நானும் அவருடன் வரும் விருப்பத்தை
தெரிவித்தேன். இதற்கு மறுத்த போஸ், நீ என்னுடன் வர வேண்டாம். நான் மீண்டும் உங்களை
வந்து சந்திப்பேன். நீ இங்குள்ள நம் படை வீரர்கள் அனைவரையும் பாதுகாப்பாக
இந்தியாவுக்கு அனுப்புவதில் மற்றவர்களுடன் சேர்ந்து உதவியாக இரு. நம் படை மற்றும்
போர்களின் மீதான அனைத்து ஆதாரங்களையும் அழித்து அப்பாவி பொதுமக்கள் போல் நடந்து
கொள்ளுங்கள். இல்லையேல், இந்தியாவில் நீங்கள் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டு
அவர்கள் உங்கள் அனைவரையும் கைது செய்து கொன்று விடுவார்கள் என எச்சரித்து சென்றார்.
(தொடரும்)