மாத்தறை நகரப் பகுதியில் நேற்று ஏற்பட்ட மோதலில் எழுவர் காயமடைந்துள்ள நிலையில்
ஒருவரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக மாத்தறை வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
மோதல் ஏற்பட்ட நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் காரணமாக
இவர்கள் காயமடைந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை பதவியிலிருந்து
நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கு ஆதரவு தெரிவித்தும் இப் பிரதேசத்தில்
ஆர்ப்பாட்டம் இடம் பெற்றுள்ளது. மாத்தறை, தெவிநுவர பிரதேசத்தில் ஆரம்பமான
ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் மைத் திரி
குணவர்தன மற்றும் ஷிரால் லக்திலக்க தலைமை தாங்கினர். இதேவேளை மாத்தறை, வெல்லமடின்
பிரதேசத்தில் ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர
தலைமையில் இடம்பெற்றது.
மாத்தறை நகரப் பகுதியில் இரு பகுதியினரும் சந்தித்தவேளை இரு குழுக்களுக்கும் இடையில்
மோதல் நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் குழுக்களுக்கு இடையிலேயே மோதல்
ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.