* அமைச்சர் பதவிக்காக மூடிய அறைக்குள் குடும்பிச் சண்டை
வட மாகாண சபையின் அமைச்சரவையில் இடம்பிடிக்க தமிழ்க் கூட்டமைப்பில் வெற்றி
பெற்றவர்களை விடவும் அவர்களை நிறுத்திய கூட்டுக் கட்சிகளின் தலைவர்களிடையே கடுமையான
குடும்பிச் சண்டை இடம்பெற்று வருகிறதாம். ஆறு பக்கமும் சீமெந்து போட்டு அடைத்த
அறையினுள் அடிபடுவதுகூட எப்படியோ வீடியோ வடிவில் உடனே வெளியே வந்துவிடுகிறது. நான்
விரும்பவில்லை என அறிக்கை மேல் அறிக்கை விட்டாலும் அம்மணிக்கு முக்கியமான அமைச்சின்
மேல் குறியாம். அதேபோன்று பத்தாவது இடத்தில் வந்தாலும் தனது சகோதரனுக்குப் பதவி
கிடைப்பதில் பேச்சாளர் பக்குவமாகக் காய் நகர்த்துகிறாராம். நிலைமை இப்படியிருக்க
எதிர்க்கட்சிப் பதவிக்குப்போட்டி எனக் கதையைக் கட்டியுள்ளனராம் தமக்குள்
முட்டிமோதும் இவர்கள்.
* தனிமைப்படப் போகும் சில தமிழ் ஊடகங்கள்
மனோ, விக்கிரமபாகு, அஸாத் சாலி, சுரேஷ், சுமந்திரன் போன்ற சிலரது அறிக்கைகளை நம்பித்
தமது ஊடகங்களை நடத்தும் தமிழ் ஊடகங்கள் சில இவர்கள் ஒட்டு மொத்தமாக வெளிநாடு
சென்றால் அல்லது மெளன விரதம் இருந்தால் செய்திக்குப் பெரும் கஷ்ட நிலையையே
எதிர்கொள்ள நேரிடும். அதிலும் இனித் தமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் சேர்ந்து
இணைந்து போகும் அரசியலுக்குள் பிரவேசித்ததும் இந்த ஊடகங்கள் எப்படிச் செய்திகளை
வெளியிடப் போகின்றனவோ தெரியவில்லை. தமிழ்க் கூட்டமைப்பு உள்ளே சென்றதும் மனோவும்,
விக்கிரமபாகுவும் தாமாகவே அவர்களுடன் சென்றுவிடுவர். பாவம், தமிழ் ஊடகங்கள் சிலதான்
தனித்துவிடப் போகின்றன.