கொழும்பு கிறேண்ட் ஒரியன்ட் ஹோட் டலில் நவீன ஆடை வடிவமைப்புக் கண்காட்சியொன்று
நடைபெற்றது. லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஊடக அனுசரணையோடு இடம்பெற்ற இவ்வைபவத்தில்
இருபாலாரையும் கவரக்கூடிய நவீன ஆடை வடிவமைப்புகளுடன் மேடைகளில் தோன்றி ரம்மியமாகக்
காட்சியளித்தனர். மணப்பெண் ஆடை அலங்காரம், ஓய்வுநேர ஆடை, அலுவலக ஆடை, கவர்ச்சியான
சேலை அணிதல் மற்றும் குழந்தை ஆடைகள் என்று பல கோணங்களில் மேடையில் தோற்றமளித்தனர்
மாடல் அழகிகள்.
இதில் பங்குபற்றிய அலங்கார ஆடை மாதிரி தயாரிப்பாளர்கள் (டிசைனர்கள்) மத்தியில்
தெஹிவளையைச் சேர்ந்த மொஹமட் ஷப்ரி ஜுனைட்டின் தயாரிப்பில் உருவான மணப்பெண் ஆடை
அலங்காரம் முதற் பரிசை தட்டிக்கொண்டது. முதற் பரிசைத் தட்டிக்கொண்ட இவரின்
மணப்பெண்ணின் அலங்கார ஆடையை கண்காட்சிக்கு வருகை தந்திருந்த விருந்தினர் ஒருவர் அதே
மேடையில் வைத்து மூன்று இலட்சம் ரூபா கொடுத்து வாங்கிக் கொண்டது இவரின்
கைவண்ணத்திற்கு கிடைத்த இரட்டிப்பு பெருமையாகும்.
மொஹமட் சப்ரி ஜுனைட் கல்கிசை சென் தோமஸ் கல்லூரியின் பழைய மாணவராவார். பள்ளிக்
காலத்திலிருந்தே ஆடை அலங்கார உருவாக்கத்தில் ஆர்வம் காட்டி வந்த இவர் இலங்கை
தொழில்நுட்ப கல்லூரியில் நவீன ஆடை அலங்கார கற்கையை இரண்டாண்டுகள் மேற்கொண்டிருந்தார்.
பல ஆடை அலங்கார கண்காட்சிகளில் பங்குபற்றிய இவர் தனியார் நிறுவனமொன்றில் ஆடை
அலங்கார ஆலோசகராக கடமையாற்றுகிறார்.