நானே வலிய வந்து
ஏற்றுக்கொண்டுவிட்டேன்
என் சுதந்திரம்
பறிக்கப்பட்டதை-
என்னைக் கட்டிப் போட்டிருக்கும்
சங்கிலியின் மறுமுனை
உன் வசம்.
நீ ஆட்டுகிறாய்
என்னை ஆட்டுவிக்கிறாய்
காட்சிப்படுத்துகிறாய்.
என்னைக்
காட்சிப் பொருளாக்கும்
கண்காட்சிகளை
என் சம்மதத்துடனேயே
அரங்கேற்றுகிறாய்.
என்னை விடுவிக்க
என் மீது கொண்ட
அபரிதமான உன் காதலால்கூட
என் கட்டுகளை அவிழ்க்கும்
நாட்களைப் பற்றி
பேசாதே.
உன் வாசலுககு வெளியே
என்னைக் கட்டிப்போடும்
காலச் சங்கிலிகள்
சிறைவைக்கும் சிறைக்கூடுகள்
காத்திருக்கும்
சிவந்த சவுக்கள்
கெட்டுப்போன
எச்சில் பருக்கையை
என் தட்டில் பரிமாற
காத்திருக்கும்
ராட்சதக்கைகள்
என்ன செய்யட்டும்
இருந்துவிட்டுப் போகிறேன்
உனக்கு
உனக்கு மட்டுமேயான
அடிமையாக
களைத்துப் போய்விட்டேன்.
கண்டவர்கள்
கால்களை எல்லாம்
நக்கி நக்கி
வறண்டு போய்விட்டது
என் நாக்குகள்.
அதில் பிறக்கும்
என் வார்த்தைகள்
லிமை குன்றிவிட்டன
எழுந்து நிற்க முடியாமல்
சரிந்து விழுகின்றன.
பற்களுடன் உரசியபின்னும்
என் நாக்குகளுக்கு
கிடைக்கவில்லை
வார்த்தைகளின்
ஒலிச்சுவடு.
என் உதடுகளைப்
பற்றிக்கொள்ள துடிக்கும்
வார்த்தைகள்
எல்லா இடங்களிலும்
பலகீனமாய் எதிரொலிக்கின்றன.
எதுவும் மிச்சமில்லை
என்வசம் இப்போது.
கண்களில்
தென்படும் கடைசி
எதிர்பார்ப்பைத்தவிர:
உன் தட்டில்
எஞ்சி இருக்கும்
கடைசிப் பருக்கையை
தருவாயா
என் பசித்தீர்க்க?
முராத்திய பெண்கவிஞர் கவிதா மஜாஜன் கவிதை நூல் ‘தத்புருஷ்’ல எழுதியிருக்கும்
பசி என்ற கவிதையின் தமிழாக்கம்.
காணவில்லை
உனக்கு
எல்லாம் தெரியும்
என்னை
என் முதுகிலிருக்கும் மச்சத்தை
இடது காதில்
மறைவாக இருக்கும் தழும்பை
பெருவிரலில் நைந்துபோன நகக்கணுவை.
அடந்த இருளிலும்
உன்னால் அடையாளம் காணமுடியும்
என் பட்டுப்போன்ற மேனியின்
ஒவ்வொரு வளைவுகளையும்.
ஆனால் நீ அறிந்திருக்கவில்லை
அந்த ஏழு கடல்களைத் தாண்டிய போது
என் பெருமூச்சில்
எரிந்துபோன ஆகாயத்தை.
உன் அணைப்பில் புதைந்து
இதழ் நனைத்த முத்தத்தில்
சரிந்து விழுந்த நான்
காணாமல் போனதை.