காமராஜர் தமிழகத்தின் முதல்வராக இருந்த போது நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தார். காரில் அவருடன்
உதவியாளரும் இருந்தார்.
அன்றைய தினம் பகல் 11 மணியளவில், கார் கோவில்பட்டி அருகே வரும்போது, வழியில் 12 வயது
சிறுவன் ஒருவன் மாடுகள் மேய்த்து கொண்டிருந்தான். அதைக் கண்ட காமராஜர் டிரைவரிடம்
“காரை நிறுத்துப்பா“ என்று கூறினார்.
பின்னர் அந்த சிறுவன் அருகே சென்று “தம்பி நீ படிக்க வேண்டிய வயதில் மாடு
மேய்க்கிறியே பள்ளி கூடம் போக வேண்டியது தானே“ என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன்
“பள்ளிக்கூடம் போனால் கஞ்சி கிடைக்குமா?“ என்று அவரிடம் கேட்டான்.
அந்தக்கேள்வி காமராஜரின் மனதை பாதித்தது. “அப்ப நீ படிப்பதற்கு கஞ்சி தான் தடையா சரி
மதிய வேளை கஞ்சி கொடுத்தால் நீ பள்ளிகூடம் போவியா“ என்று காமராஜர் கேட்டார். அதற்கு
பதில் கூறிய சிறுவன் உற்சாகத்தில் “ஓ போவேனே!“ என்று கூறினான்.
அன்று தான் காமராஜர் ஏழை மாணவ மாணவியர்கள் படிப்பிற்கு தடையாக இருப்பது மதிய உணவு
தான் என்று முடிவுக்கு வந்தார். உடனே மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
இன்றைக்கு டாக்டராக, இன்ஜினியராக, கலெக்டராக இருப்பவர்களின் தலைமுறையைப்
பின்னோக்கிப் பார்த்தால். அவர்களின் கல்விக்கு காமராஜர் காரணமாக இருப்பார்...!