அடை மழையால் கடந்த வாரம் எங்கு பார்த்தாலும் வெள்ளப் பாதிப்பு, இது ஒரு சில
அரசியல்வாதிகளுக்குக் கொண்டாட்டம், புகைப்படப் பிடிப்பாளருடன் சென்று தமது பேஸ்
புக்குகளை படங்களால் நிரப்பி விட்டார்கள். இடம்பெயர் முகாமொன்றுக்குச் சென்ற
அமைச்சர் ஒருவர் அரை மணி நேரம் கழித்து அதே இடத்திற்கு திரும்பவும் சென்றாராம்.
என்னவென்று விவாரித்துப் பார்த்ததில் அவர் முதற் தடவை சென்றபோது போட்டோகிராபர்
வரவில்லையாம். அதனால் படம் எடுப்பதற்காக மீண்டும் வந்தாராம். இத்தனைக்கும் இரு
தடவையும் அவர் வெறும் கைகளுடன் தான் வந்து சென்றாராம். இது எப்படியிருக்கு?
* கொட்டாவி வந்தால் இடமறிந்து
சத்தமில்லாது விட வேண்டும்
நீதவான் ஒருவர் வழக்கொன்றை விசாரித்துக் கொண்டிருந்தபோது நீதிமன்ற அறையினுள் பெரிய
சந்தத்தில் கொட்டாவி விட்ட ஒருவருக்கு எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது. கொட்டாவி விட்ட குற்றச்சாட்டை இவரும் ஏற்றுக்கொண்டாராம்.
கல்கிஸை நீதிமன்றத்திலேயே குறிப்பிட்ட அந்த நபருக்கு எட்டு மாத கட்டாய சிறைத்தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது. எவராக இருந்தாலும் இடமறிந்து கொட்டாவி விட வேண்டும் என்பதை
பொதுசனம் இனிக் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
* கருணாவிற்கு ஏற்பட்டிருப்பதுதான்
சுடலை ஞானம் எனப்படுவதோ?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அரசில் தான் பிரதி அமைச்சராக இருந்து தமிழ் அரசியல்
கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வந்தபோதும், அது குறித்து அழுத்தம் கொடுக்காமை தனது
தவறு என வி. முரளிதரன் (கருணா) இப்போது கவலைப்பட்டு வருகிறார். அவ்வாறு தான்
அழுத்தம் கொடுத்திருந்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த நிபந்தனைகள் இன்றி கைதிகளை
விடுதலை செய்திருப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார். இது அவரது தனிப்பட்ட
நம்பிக்கை. எது எப்படியானாலும் ஊரில் சுடலை ஞானம் என்று இதைத்தான் சொல்வார்கள்.
* ஒரே கல்லில் இரு மாங்கனிகளை
தட்டிப்பறிக்க தம்பி முயற்சியோ?
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் அவரது
கருத்துக்களோடு ஒன்றித்துச் செல்லக்கூடிய நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இன்று இல்லையாம். அதனால் அவருக்குக் கை கொடுக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
தயாராக உள்ளதாம். இப்படி அந்த முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தெரிவித்திருக்கிறார்.
விக்கினேஸ்வரன் தன்னுடைய செயற் பாடுகளை முன் கொண்டு செல்ல வேண்டுமாக இருந்தால்
கூட்டமைப்பின் தலைமையை அவர் ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் வெளியில் வந்து
தலைமைத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழு
ஒத்துழைப்பையும் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் கஜேந்திரகுமார்
தெரிவித்திருக்கிறார்.
ஒரே கல்லில் இரண்டு மாங்கனிகளைத் தட்டிப் பறிக்க முயற்சிக்கிறாரோ தம்பி கஜேந்திர
குமார்?